69 வயதில் தன் மனைவியுடன் 23 நாடுகள் சுற்றி வந்த கேரள டீக்கடைக்காரர்!
உலகத்தை சுற்றிப்பார்க்க வேண்டும் என்பது நம் அனைவரின் கனவாக இருக்கிறது. ஆனால் அது பலருக்கு கனவாக மட்டுமே இருக்கிறது; குடும்பச் சூழல், நிதி நிலைமை, வேலை போன்ற பல காரணங்களால் அக்கனவை நிறைவேற்ற முடியாமல் போகிறது. ஆனால் இங்கு 65 வயதிற்கு மேலான வெறும் டீக்கடை வைத்திருக்கும் தம்பதியனர் ஒய்வு பெரும் வயதில் 20 நாடுகளுக்கு மேல் சுற்றி வந்துள்ளனர்.
கேரளா, கொச்சினில் ஸ்ரீ பாலாஜி என்னும் சிறய டீக்கடை வைத்திருக்கிறார் 69 வயதான விஜயன். தானும் தன் மனைவி மோகனாவும் (67) கடந்த 56 வருடங்களாக டீக்கடை வைத்து நடத்தி வருகின்றனர். ஒரு சேர வேலையையும் வாழ்க்கையையும் துவங்கிய இவர்களின் ஒரே கனவு உலகத்தில் உள்ள எல்லா நாடுகளுக்கும் சென்று வர வேண்டும் என்பது மட்டும் தான்.
“சிறுவயதில் என் தந்தை தமிழ்நாட்டில் உள்ள பல ஊர்களுக்கு என்னை அழைத்து சென்றுள்ளார். அப்பொழுதிலிருந்தே பயணத்தின் மீது ஆர்வம் ஏற்பட்டது. என வெளிநாட்டுக் கனவை நிறைவேற்றவே டீக்கடை அமைத்தேன்,” என்கிறார் விஜயன்.
டீக்கடை மட்டுமே இவர்களின் ஒரே வருமானம்; அதிலிருந்து வெளிநாடுகள் செல்லும் அளவிற்கு லாபம் கிடைக்க வில்லை என்றாலும் ஒரு நாளுக்கு 300 ரூபாய் என சேமித்து தங்களின் உலகம் சுற்றும் கனவை நிறைவேற்றி வருகின்றனர். ஆடம்பர செலவுகள் இன்றி அவர்கள் அன்றாட செலவுகளை குறைத்துக் கொண்டு பணம் சேமித்து, வங்கியில் இருந்து கடன் பெற்று ஒவ்வொரு நாட்டுக்கும் சென்று வருகின்றனர். ஒரு நாட்டில் இருந்து திரும்பி வந்தவுடன் 3 வருடத்திற்குள் கடனை அடைத்துவிட்டு மீண்டும் சேமிப்புகளை துவங்கி மீண்டும் வங்கிக் கடன் பெற்று அடுத்த நாட்டுக்கு செல்லத் தயாராகின்றனர்.
இதுவரை சிங்கப்பூர், அர்ஜென்டினா, பெரு, சுவிட்சர்லாந்து, பிரேசில், துபாய் நாடுகள் உட்பட 23 நாடுகளுக்கு சென்று வந்துள்ளனர். கணவனுடன் சேர்ந்து தனக்கும் உலகம் சுற்றும் ஆசை வந்துவிட்டதாக நியூஸ் மினிட்டிற்கு அளித்த பேட்டியில் தெரிவிக்கிறார் மோகனா.
“ஏழைக் குடும்பத்தில் பிறந்த எனக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பு கிடைக்கும் என நான் எதிர்ப்பார்க்கவில்லை. நான் சென்ற நாடுகளில் எனக்கு மிகவும் பிடித்த இடம் சுவிட்சர்லாந்து,” என்கிறார் மோகனா.
நிதி குறைவு என்பதால் செல்லும் இடங்களிலும் தங்களது செலவுகளை குறைத்துக் கொள்கின்றனர் இந்த தம்பதியனர்கள். ஒரு நாட்டிலிருந்து நினைவு பொருளாக ஏதேனும் வாங்குவதற்கு கூட 10 டாலருக்கும் குறைவாகவே செலவிடுகின்றனர். உணவு, தகும் இடம் மற்றும் டிக்கெட்டை தவிர எதற்கும் பெரியதாய் இவர்கள் செலவு செய்வதில்லை.
“ஒவ்வொரு நாட்டிற்கும் பயணிக்கும் பொழுது புதிய கலாச்சாரமும் புதிய சிந்தனைகளும் ஏற்படும்,” என சரளமாக ஆங்கிலத்தில் பேசுகிறார் விஜயன்.
அவர்கள் வெவ்வேறு நாடுகளில் எடுத்த புகைப்படத்தை தங்கள் கடை முழுவதும் மாட்டி அலங்கரித்துள்ளனர். மேலும் தான் சென்ற நாட்டின் பண நோட்டுகளை சேகரித்து நினைவாக தனது டீக்கடையில் காட்சிக்கு வைத்துள்ளார் விஜயன்.
சிறு தினங்களுக்கு முன்பு விஜயன் மற்றும் அவரது மனைவிப் பற்றிய வீடியோ ஒன்றை மஹிந்திரா குழு தலைவர் ஆனந்த் மஹிந்திரா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அதனைத் தொடர்ந்து நெட்டிசன்கள் மத்தியில் பெரும் ஹிட்டாகி விட்டனர் இந்த தாத்தா பாட்டி.
கனவை நிறைவேற்ற வயதோ, சூழ்நிலையோ அல்லது பணமோ தடையில்லை. மனமிருந்தால் மார்க்கம் உண்டு என்பதை நிரூபித்து காட்டிவிட்டனர் இந்த தம்பதியினர்.