ஐபோன்களை அடுத்து ஆப்பிள் ஐபேட்களும் தமிழ்நாட்டில் அசெம்ப்ளி - ஃபாக்ஸ்கான் திட்டம்
2 ஆண்டு காலத்தில் ஸ்ரீபெரும்புதூர் தொழிற்சாலையின் உற்பத்தி திறனை இரட்டிப்பாக்க ஃபாக்ஸ்கான் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
ஐபோன்களை தொடர்ந்து ஐபேட்களையும் தமிழ்நாட்டில் அசெம்ப்ளி செய்ய ஃபாக்ஸ்கான் நிறுவனம் முடிவு செய்துள்ளது.
ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஃபாக்ஸ்கான் தொழிற்சாலையில் ஐபேட்களையும் அசெம்பிள் செய்து தயாரிக்க ஃபாக்ஸ்கான் நிறுவனம் முடிவு செய்துள்ளது. ஐபேட் உள்ளிட்ட ஆப்பிள் நிறுவனத்தின் இதர தயாரிப்புகளையும் தமிழ்நாட்டிலேயே உற்பத்தி செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
2 ஆண்டு காலத்தில் ஸ்ரீபெரும்புதூர் தொழிற்சாலையின் உற்பத்தி திறனை இரட்டிப்பாக்க ஃபாக்ஸ்கான் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
ஐபேட் தயாரிக்கும் திட்டம் இருந்தாலும் மேக் மடிக்கணினிகளை உற்பத்தி செய்யும் திட்டம் இப்போதைக்கு இல்லை எனவும் தெரிவித்துள்ளனர். ஐபேட்கள் தயாரிக்கும் முடிவை அடுத்து ஃபாக்ஸ்கான் நிறுவுனத்தில் வேலை வாய்ப்பு கணிசமாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது தொடர்பாக தமிழ்நாடு அரசுடன் சில சுற்றுகள் பேச்சுவார்த்தை நடந்துள்ளதாக தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
"இந்தியாவில் ஐபேட் உற்பத்தியை விரிவுபடுத்துவதுடன் முதன்மையாக விநியோகச் சங்கிலி இடர்பாடுகளை பல்நோக்குடையதாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது," என்று TrendForce-இன் ஆராய்ச்சிப் பிரிவுத் துணைத் தலைவர் பாய்ஸ் ஃபேன் கூறினார்.
வருடாந்த ஐபேட் ஏற்றுமதிகள் இந்த ஆண்டு 49 மில்லியனை எட்டும் என்று தற்போது மதிப்பிடப்பட்டுள்ளது, இது ஆண்டுக்கு ஆண்டு 4.5% வளர்ச்சி அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், அதே ஸ்ரீபெரும்புதூர் ஆலையில் பிக்சல் ஸ்மார்ட்போன்களை உருவாக்க கூகுள் ஃபாக்ஸ்கானுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
பிப்ரவரியில், ஃபாக்ஸ்கான் பங்குச் சந்தைத் தாக்கலில் அதன் இந்திய துணை நிறுவனம் சொந்த நிலத்தில் ஒரு தொழிற்சாலையை உருவாக்க ரூ.1,200 கோடி செலவழிக்கும் என்று கூறியிருந்தது. பெங்களூருக்கு வெளியே ஒரு பெரிய தொழிற்சாலையில் ஐபோன்கள் தயாரிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பட்ஜெட்டில் உதிரிபாகங்கள் மீதான அடிப்படை சுங்க வரி (BCD) 20% லிருந்து 15% ஆகக் குறைக்கப்பட்டது உள்நாட்டு உற்பத்தி திட்டங்களை விரைவுபடுத்தும் என எதிர்பார்க்கப்படுவதாக சந்தை ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.