'ரத்த திசு கொடை' - இந்தியாவில் புரட்சி செய்யும் 'தாத்ரி'
தாத்ரியும் 96000 கொடைப்பதிவாளர்களும் இணைந்து மருத்துவத்தில் சாதனை நிகழ்த்துகிறார்கள்
‘’இது நடந்தது அமெரிக்காவில். ஒருவருக்கு லுக்குமியா எனும் ரத்தப் புற்று நோய்க்கு ரத்த மாற்று சிகிச்சைக்காக ரத்தம் தேவைப்படுவதாகக் கூறப்பட்டது. தேவைப்படுபவர் இந்திய-பாகிஸ்தானியப் பூர்வ குடியைச் சேர்ந்த ஒரு பெண்மணி என்பதால் ரத்தத் திசுக் கொடை அளிக்கப் பதிந்துள்ள அமெரிக்கர்களிடையே அவருக்கு திசுக்கள் பொருந்தவில்லை. அப்போதுதான் எனக்குப் புரிந்தது இருவருடைய மரபணுக்கூற்று பொருந்துவதில் இனப் பூர்வீகம் முக்கிய பங்காற்றுகிறது என்பது.’’
நம் நாட்டிலும் இது மிகப்பெரிய பிரச்சனையாகத் தான் இருக்கிறது. ‘’ஆண்டுதோறும் இந்தியாவில் 10000 குழந்தைகள் ரத்தத்தைச் சுயமாக உற்பத்தி செய்ய இயலாத நோய்க் குறைபாட்டுடன் (thalassemia) பிறக்கின்றனர். அன்றாடம் பிறக்கும் 40 குழந்தைகளுக்கு ரத்தம் தொடர்பான நோய் இருப்பதாகக் கண்டறியப்படுகிறது.’’ என்கிறார் ரகு. லுக்குமியா, லிம்போமா, தலாசெம்மியா போன்ற ரத்தம் தொடர்பான (புற்று) நோயுள்ளவர்களை அவர்களுக்குப் பொருத்தமான எலும்பு மஜ்ஜைக் கொடையாளர் கிடைத்தால் மாற்று எலும்பு மஜ்ஜை சிகிச்சை மூலம் குணப்படுத்தி விடலாம். 25% மட்டுமே ஒரே குடும்பத்தினுள் மரபணுக் கூறு பொருந்தாமல் போவதற்கான வாய்ப்பு உண்டு. அப்படிப்பட்டவர்களுக்கு உறவினர் அல்லாதவர்களுடன் மரபணுக்கூறு பொருந்தக் கூடியக் கொடையாளர்களைத் தேடிக் கண்டுபிடிப்பதைத் தவிர வேறு வழியில்லை. ஆனால் மரபணு பொருந்தக் கூடிய கொடையாளரைக் கண்டுபிடிப்பது அத்தனை எளிதானதா? ‘’அந்த வாய்ப்பு 10000 த்திற்கு ஒருவர் என்ற அளவில் இருந்து 20 லட்சத்திற்கு ஒருவர் என்ற அளவில் கூட இருக்கலாம்’’ என்கிறார் ரகு.
வகை மாதிரி மரபணுக்கூறுள்ள கொடையாளர்களை எந்தக் கட்டமைப்பில் பதிந்து வைத்துள்ளனர் என்பதைப் பொறுத்துதான் மேற்படி கேள்விக்கான பதில் அடங்கியுள்ளது. ரகு, அமெரிக்காவில் இருந்து இந்தியாவிற்குத் திரும்பி வந்து எலும்பு மஜ்ஜைக் கொடையாளர்களைப் பதிவதற்கான ஏற்பாட்டை உருவாக்கினார். அதன் மூலம் ரத்த நோய்களால் உயிருக்குப் போராடும் இந்தியப் பூர்வ மரபினர் தங்களுக்குப் பொருத்தமான கொடையாளர்களை எளிதாக இனங்கான முடியும் என்று கருதுகிறார். வரலாற்று மரபுக்கூறு ரத்த வகைமாதிரி சிறப்பு ஆய்வகத்தின் (HLA) தலைவரும், இணை நிறுவனருமான டாக்டர் நியாஸ் ஷெரிபுடனும், வரலாற்று மரபணு அமைப்பின் தலைவரும், நிறுவனருமான டாக்டர் சூ யோங் யாங்குடனும் இணைந்து கொடையாளர்களை இந்தியத் தன்மைக்கு ஏற்ப உருவாக்க "தாத்ரி"DATRI ஐ நிறுவினார்.
குழுவினரைப் பராமரித்தல்
தாத்ரி குழுவினர் நாடெங்கிலும் கிராமப்புறங்களுக்கும், நகர்ப்புறங்களுக்கும் சென்று மக்களைச் சந்தித்து ரத்த நோய்ச் சிகிச்சை தொடர்பாகவும், எலும்பு மஜ்ஜை கொடையின் அவசியத்தையும் எடுத்துக் கூறி கொடை வழங்க விருப்பம் உள்ளவர்களின் தாடை உமிழ்நீரை எடுத்துச் சோதிக்கின்றனர். அவர்களிடம் படிவங்களைப் பூர்த்தி செய்து பெற்றுக் கொள்கின்றனர். தேவைக்கேற்ப, பொருத்தமான மரபணுக்கூறுடைய கொடையாளர்களின் எலும்பு மஜ்ஜை திசுவைப் பயன்படுத்திக் கொள்வார்கள். தனிப்பட்ட அவள்/அவனை முழுமையான மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்துகின்றனர். ஹெப்படைடிஸ் பி, எச்.ஐ.வி போன்ற உயிர்க்கொல்லி நோய் இல்லாததை உறுதிப்படுத்திய பின்னர் கொடையளிக்கத் தகுதியானவர்களுக்கு அடுத்தடுத்த நாட்களுக்குத் தொடர்ச்சியாக ஐந்து ஊசி செலுத்தப்படுகிறது. இந்த ஊசி எலும்பு மஜ்ஜையை ரத்த ஓட்டப்பாதையில் திரளச் செய்கிறது. அதனின்று சிகிச்சைக்காக எடுக்கப்படும். இந்த மருத்துவம், கொடையாளரின் உடல் நலனில் எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்துவதில்லை. ரத்தத் திசுவை கொடையாளரிடம் பெறும் மருத்துவச் செயல்பாடு 3 – 4 மணி நேரத்தில் புறநோயாளி நிலையிலேயே நிறைவு பெற்றுவிடும். கொடையாளர் தங்களது அன்றாட நடவடிக்கைகளை வழக்கம் போலத் தொடரலாம். தாத்ரியின் நடவடிக்கை ரத்தத் திசுவைக் கொடையாகப் பெறுவதுடன் நிறைவடைந்து விடுவதில்லை. கொடையாளருக்கான ஆரோக்கியத்தின் பால் தார்ரி தொடர்ந்து அக்கறை எடுத்துக் கொள்கிறது அந்த கொடையாளர் உலகின் எந்தப் பகுதியில் இருந்தாலும் கூட.
இந்தியாவில் ரத்தத் திசுக்கள் கொடை பெறுவதில் உள்ள சிக்கல்
‘’தங்களின் ரத்தத் திசு, கொடையளிக்கப் பொருத்தமாக இருப்பதையறிந்த உடனே தாங்கள் அளிக்கும் கொடை மற்றொருவரின் உயிரைப் பாதுகாக்கக் கூடியது என்பதைப் புரிந்துகொண்டு அளிக்கத் தயாராகி விடுகின்றனர் சிலர். ஆனால் ரத்தத் திசுக் கொடை எளிமையானது, எந்த வகையிலும் தொந்தரவு இல்லாதது, வெகு சீக்கிரமாகவே முடிந்து விடக்கூடியது தான் என்ற உண்மை இன்னமும் பலருக்குப் புரியாமல் இருக்கிறது. அவர்களுக்குப் புரிய வைத்து, நம்பிக்கையை ஏற்படுத்துவது மிகவும் கடினமான செயலாக இருக்கிறது. ஏனென்றால் கொஞ்சமும் பொருத்தமில்லாத எதிர்ப்புணர்வும், கடந்தாக வேண்டிய கலாச்சாரத் தடைகளும் இங்கு நிறைய உள்ளன.’’ என்கிறார் ரகு. இத்தகைய புறக்கணிப்புகள் வருத்தமளிக்கக் கூடியதுதான்.
ரத்தத் திசுவைக் கொடை வழங்க கொடையாளர் தயாராக இருந்தாலும் அளிக்கத் தடை செய்யும் வேறு சில அம்சங்களும் குறுக்கே நிற்கத் தான் செய்கின்றன. ‘’இந்தியாவைப் பொருத்தமட்டில் கொடையாளர் தயாராகி விட்டாலும் அதற்கான முடிவை எடுப்பவர்கள் கொடையாளரின் பெற்றோராக இருக்கின்றனர். உதாரணத்திற்கு ஒருவர் கொடையளிப்பதற்காக பதிவுசெய்து இரண்டு வருடங்களுக்குப் பின்னர் அவரது மரபணுக்கூறுடைய ஒருவருக்கு ரத்தத் திசு தேவைப்படுகிறது என்று வைத்துக் கொள்வோம். இந்த இரண்டாண்டு இடைவெளியில் அவருக்கு/அவளுக்கு திருமணம் நடந்திருந்தால் கணவர்/மனைவியின் அல்லது மாமனார் மாமியாரின் ஒப்புதல் பெற்ற பின்னரே கொடையளிக்க முடியும்.’’ அந்தச் சூழலில் ரத்தத்திசு கொடையின் முக்கியத்துவத்தை கொடையாளரின் குடும்பத்தினருக்குத் தெரிவிக்க தாத்ரி பொறுப்பெடுத்துக் கொள்கிறது. தாத்ரி சார்பாக ஒரு டாக்டர் கொடையாளரின் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்படுவார். ‘’கொடையாளருக்கு எவ்விதமான உடல் நலப்பிரச்சனையும் ஏற்படாது என்பதைக் குடும்பத்தினருக்கு உத்திரவாதப்படுத்தி அவர்களது ஒப்புதலைப் பெற்ற பின்னரே ரத்தத் திசு பெறப்படும்’’.
நிதி நிர்வாகம்
தாத்ரி இலாப நோக்கமின்றி செயல்படும் அமைப்பாகும். நிதி நன்கொடை பெறுவதற்குரிய 80 ஜி விலக்குப் பெற்று இயங்குகிறது. இலாப நோக்கின்றி இயங்கினாலும் அது நிலைத்திருப்பதற்குக் காரணம் எச்எல்ஏ மாதிரிக்கு நீண்ட கால அடிப்படையில் கடன் வழங்கப்படுவதும், பன்னாட்டுப் பெருநிறுவனங்கள் நன்கொடை வழங்குவதும் தான். ரத்தத் திசு பெறுவதற்குரிய மருத்துவக் காப்பீட்டைப் பெற்று நோயாளிகள் மருத்துவக் கட்டணம் வழங்குகிறார்கள். இப்படியாகத் தான் நிதியைப் பராமரிக்கிறோம்.
விளைவுகள்
தாத்ரி, 3000 பதியப் பெற்ற கொடையாளிகளுடன் 2009 இல் துவங்கப்பட்டது. ரத்தத் திசு கொடையை வெற்றிகரமாக நடைமுறைக்குக் கொண்டு வந்து அப்போது மூன்றாண்டுகள் ஆன நிலையில், 2011 இல் பொருந்துகிற மூன்று கொடையாளிகளை ஏற்பாடு செய்ய முடிந்திருந்தது. 2013 இல் முன்னேற்றம் ஏற்பட ஆரம்பித்தது. 40,000 கொடையாளர்கள் தங்களைப் பதிவு செய்தனர். 25 சிகிச்சையாளர்களுக்கு ரத்தத் திசுக்கொடை ஏற்பாடு செய்யப்பட்டது. இன்று கொடையாளிகளைப் பதிவு செய்ய 700 குழுக்கள் நாடெங்கிலும் இயங்கி வருகிறது. லட்சம் பேரைச் சந்தித்தால் 4000 பேர் தங்களைக் கொடையாளர்களாகப் பதிந்து கொள்கின்றனர்.
கொடையளிக்க விருப்பம் உள்ளவர்கள் குறைவாக இருப்பது மிகப்பெரிய சவாலாக இருந்த போதிலும் ரகு பகிர்ந்து கொண்ட கதை மனதுக்கு இதமளிக்கக் கூடியதாக இருந்தது. ‘’போடிநாயக்கனூரைச் சேர்ந்த சரண்யா தங்கம் விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த இளம்பெண். அவளது கல்லூரியில் தாத்ரி கொடைப்பதிவு முகாம் நடத்திய போது தன்னை ஒரு கொடையாளியாக பதிவு செய்துள்ளார். இரண்டு ஆண்டுகள் கழித்து அவளது திசுவிற்குப் பொருத்தமான ஒரு குழந்தையின் உயிரைப் பாதுகாக்க, கொடையளிக்கத் தயாராக இருந்தாள்.’’ என்றார் ரகு. திசு பெற்ற குழந்தை இப்போது நலமுடன் புதிய வாழ்க்கையைத் தொடர்கிறது. ‘’பின் தங்கிய பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண் கொடை வழங்கத் தயாராக இருப்பதும், அவளது அன்புள்ளமும் கூடுதல் சிறப்புடன் முன்னிலைப்படுத்த வேண்டியது’’ என்கிறார் ரகு.
மரபணு ரீதியாகப் பொருத்தமான திசுவை எதிர் நோக்கும் நோயாளிகளில் 50 சதவீதத்திற்கும் மேலானவர்களின் உயிரைக் காக்க இந்தியாவில் ஒரு மில்லியனுக்கும் கூடுதலான கொடையாளிகளைப் பதிவு செய்வதைத் தனது நோக்கமாகக் கொண்டுள்ளது தாத்ரி.