ரூ.36 கோடி ஜாக்பாட்: லாட்டரி பரிசை பகிர்ந்து ஒரே இரவில் கோடீஸ்வரர்கள் ஆன இங்கிலாந்து நகர மக்கள்!
இங்கிலாந்தில் உள்ள சிறுநகரத்தைச் சேர்ந்த சுமார் 435 குடும்பத்தார் போஸ்ட்கோட் லாட்டரி மூலம் ரூ. 36 கோடி பரிசை வென்றுள்ள சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
நல்ல மனிதர்களுக்கு மத்தியில் இருப்பது சந்தோசமான மனநிலையையும், மன நிம்மதியையும் கொடுக்கும் என்பது நம்பிக்கை. நாமும் அவர்களுடன் சேர்ந்து நேர்மறையான எண்ணங்களுடன் வாழ்க்கையில் வெற்றி பெற இயலும் என்பதாலேயே இப்படி ஒரு நம்பிக்கை உள்ளது.
ஆனால், சமயங்களில் நல்ல மனிதர்களுக்கு மத்தியில் இருப்பது சந்தோசத்தை மட்டுமல்ல... பணத்தையும் வாரிக் கொடுக்கும் என்பதற்கு உதாரணமாக இங்கிலாந்தில் ஒரு சம்பவம் நடந்துள்ளது.
இங்கிலாந்தில் உள்ள சவுத் வேல்ஸ் பகுதியில் தான் இப்படி ஆச்சர்யமான சம்பவம் நடந்துள்ளது. இங்குள்ள சிறிய நகரம் ஒன்றில் வாழும் மக்களுக்கு 'போஸ்ட்கோட் லாட்டரி' மூலம் ஒரே நாளில் அதிர்ஷ்டம் அடித்துள்ளது.
போஸ்ட்கோட் லாட்டரி
அதெப்படி ஒரே சமயத்தில் ஒரு நகரத்தில் இருப்பவர்கள் அனைவருக்கும் லாட்டரியில் பணம் கிடைக்கும் என்ற சந்தேகம் உங்களுக்கு எழலாம். அதற்கு முதலில் நீங்கள் போஸ்ட்கோட் லாட்டரி என்றால் என்ன என்று தெரிந்து கொள்ள வேண்டும்.
நமது மாநிலத்தில் அதிகப்படியானோர் தங்களது சம்பளத்தை அதிர்ஷ்டத்தை நம்பி லாட்டரியில் போட்டதால், அதற்குத் தடை விதித்து விட்டது அரசு. ஆனால் இன்னமும் மற்ற மாநிலங்களில் லாட்டரி என்பது நடைமுறையில் உள்ளது. மற்ற நாடுகளிலும் லாட்டரி உள்ளது. ஆனால் அங்கு வேறு சில விதிமுறைகள் உள்ளன.
இங்கிலாந்தில் புழக்கத்திலுள்ள போஸ்ட்கோட் லாட்டரியும் அப்படிப்பட்டவைகளில் ஒன்றுதான். இது ஆன்லைனில் செயல்படும் லாட்டரி. இதில் கலந்து கொள்வோர், தங்களது போஸ்ட்கோட்-ஐ வைத்து, சப்ஸ்கிரிப்ஷன் செய்து மாதந்தோறும் ஒரு குறிப்பிட்டத் தொகையைக் கட்ட வேண்டும்.
இப்படியாக சேகரிக்கப்படும் பணத்தை தொண்டு நிறுவனங்கள், சமூகசேவை போன்ற நல்ல விசயங்களுக்காக அந்த லாட்டரி நிறுவனத்தினர் செலவழிப்பார்கள். கூடவே, மக்களுக்கு பரிசும் தரப்படும். மக்களின் போஸ்ட்கோட் பதிவை வைத்து வெற்றியாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். அந்தப் பகுதியில் இருப்பவர்களிடம் இருக்கும் டிக்கெட்டுகளின் அடிப்படையில் பரிசுப்பணம் பகிர்ந்து அளிக்கப்படும்.
சரி, கதைக்கு வருவோம்..
சவுத் வேல்ஸ் அருகே உள்ளது ’ரைம்னே’ எனும் சிறிய நகரம். இங்கு சுமார் 435 குடும்பத்தார் வசித்து வருகின்றனர். இந்த நகரத்தைச் சேர்ந்தவர்களும் பீப்பிள்ஸ் போஸ்ட்கோட் லாட்டரில் சப்ஸ்கிரைப் செய்து டிக்கெட் பெற்றுள்ளனர்.
இந்த போஸ்ட்கோட்டிற்கு சமீபத்தில் 3.7 மில்லியன் பவுண்ட் பரிசாக விழுந்தது. இந்திய மதிப்பில் இது ரூ.36 கோடி ஆகும். போஸ்ட்கோட் மூலம் விழுந்த பரிசுப்பணம் என்பதால், அப்பகுதி மக்கள் அனைவரும் அதனை பிரித்து எடுத்துக் கொண்டனர்.
ஆனால், 36 கோடியை அப்படியே சமமாக 435 பாகங்களாகப் பிரிக்கவில்லை. காரணம் ஒவ்வொருவரிடமும் இருக்கும் டிக்கெட்டுகளின் அடிப்படையிலேயே பரிசுப் பணத்தைப் பிரிக்க வேண்டும்.
அதன்படி, பென்-யெ-டிரே எனும் பகுதியைச் சேர்ந்த ஒன்பது பேருக்கு முக்கிய வெற்றியாளர்களாகத் தேர்வு செய்யப்பட்டனர்.
அவர்களுக்கு ஒவ்வொருவருக்கும் £185,000 (இந்திய மதிப்பில் ரூ. 1,80,06,642) பரிசு தரப்பட்டுள்ளது. இதில், 76 வயது எட்வின் என்ற முதியவருக்கும் மட்டும், ‘கண்ணா இன்னொரு லட்டு சாப்பிட ஆசையா..’ என்பது மாதிரி இரட்டைப் பரிசு. காரணம் அவர் இரண்டு டிக்கெட்டுகள் வைத்திருந்துள்ளார். அவருக்கு மட்டும் £3,70,000 (இந்திய மதிப்பில் ரூ. 36013284) பரிசு கிடைத்துள்ளது.
திடீரென கிடைத்த இந்தப் பணத்தை வைத்து அவர்கள் ஒவ்வொருவரும் பல திட்டங்களை செயல்படுத்தத் திட்டமிட்டுள்ளனர். இரட்டிப்பாக லாட்டரி அடித்ததால் மகிழ்ச்சியின் உச்சத்தில் இருக்கும் எட்வர்ட், தனது பரிசுப் பணத்தை வைத்து புதிய கார் ஒன்றை வாங்க முடிவு செய்துள்ளார். மேலும், சொகுசுக்கப்பலில் உலக சுற்றுலா செல்லவும் அவர் திட்டமிட்டுள்ளார்.
மற்றொரு பங்குதாரரான லிசா எனும் பெண்மணி, மாலத்தீவுக்கு சுற்றுலா செல்ல முடிவு செய்துள்ளார். கிலாடிஸ் கென்ட் எனும் 72 வயது மூதாட்டி, புதிய கார் ஒன்றை வாங்க திட்டமிட்டுள்ளதுடன், குடும்பத்துடன் சுற்றுலா செல்லவும் முடிவு செய்துள்ளார். சிலர் பெரிய பார்ட்டி வைத்து இதனைக் கொண்டாடவும் திட்டமிட்டு வருகின்றனர்.
இந்த ஒன்பது பேரைத் தவிர மீதமுள்ள 426 குடும்பத்தினருக்கும் 3,894 முதல் 11,682 பவுண்டு வரை பரிசுத்தொகை காசோலையாக தரப்பட்டுள்ளது.