’பெண்களுக்கு சட்டத்தின் மீதான நம்பிக்கையை மீட்டெடுக்கும்’ - நிர்பயா தாய் உருக்கம்!
7 ஆண்டுகளாக நீதி நிலைநாட்டப்படாமல் இருக்கும் நிர்பயா கொலை வழக்கில் குற்றவாளிகள் 4 பேருக்கும் ஜனவரி 22ம் தேதி தூக்குத் தண்டனை நிறைவேற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2012ம் ஆண்டில் நடைபெற்ற அந்த பதைபதைக்கும் சம்பவம் இன்னும் பலரின் வயிற்றில் புளியைக் கரைத்துக் கொண்டிருக்கிறது. பெண்கள் மீதான பாலியல் வன்முறையின் உச்ச சம்பவமான அது உலகெங்கிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
‘நிர்பயா’ என்று வேறு பெயரால் அழைக்கப்படும் 23 வயது பாராமெடிக்கல் மருத்துவ மாணவி தெற்கு டெல்லியில் ஓடும் பேருந்தில் 6 பேரால் பாலியல் வன்கொடுமை செய்து தூக்கி வீசப்பட்டார். டிசம்பர் 16-17 இரவில் நடந்த இந்த சம்பவத்தையடுத்து குத்துயிரும் குலைஉயிருமாக மீட்டெடுக்கப்பட்டவருக்கு தீவிர மருத்துவ உதவிகள் செய்யப்பட்டன.
சிங்கப்பூரில் உள்ள மவுண்ட் எலிசபெத் மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளிக்கப்பட்டது. 2 வாரம் மன உறுதியோடு மருத்துவச் சிகிச்சைக்கு அவர் ஒத்துழைத்தாலும், காமக்கொடூரர்கள் செய்த இறக்கமற்ற செயல்களால் அவளின் மெல்லுடலில் ஏற்பட்ட ரணங்கள் அவளது உயிருக்கு உலையாகத் தான் வந்து முடிந்தது.
கடைசியில் அந்த மனதைரியக்காரி டிசம்பர் 29ம் தேதி இந்த உலகை விட்டுப் பிரிந்தாள். இந்த நாடே தங்கள் வீட்டுப் பெண்ணிற்கு நேர்ந்த கொடூரமாகக் கருதி குற்றவாளிகளுக்குத் தண்டனை கிடைக்க வீதியில் இறங்கிப் போராடினர்.
இந்த குற்ற சம்பவத்தில் தொடர்புடைய 6 பேரை டெல்லி போலீசார் கைது செய்தனர். 6 பேரும் குற்றவாளிகள் என்று உறுதி செய்யப்பட்டது. இவர்களில் ஒருவர் சிறார் என்பதால் அவன் மட்டும் சிறார் சீர்திருத்தப்பள்ளியில் அனுமதிக்கப்பட்டான். சிறார் சட்டங்கள் இன்னும் தீவிரமாக்கப்படாததால் அந்தக் கொலைகாரன் தண்டனை காலம் முடிந்து விடுதலையாகிவிட்டான். எஞ்சியுள்ள 5 பேரில் பேருந்து ஓட்டுநர் ராம்சிங் திஹார் சிறையில் தற்கொலை செய்து கொண்டான்.
முகேஷ், பவன் குப்தா, வினய் சர்மா, அக்ஷய் குமார் 4 பேருக்கும் தூக்குத் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. எனினும் மேல்முறையீடு செய்து தண்டனையை தள்ளிப் போட்டுக் கொண்டே வந்தனர் இவர்கள். கடந்த 7 வருடங்களாக சிறையில் தண்டனை அனுபவித்து வரும் இவர்களில் முகேஷ், பவன் குப்தா, வினய் சர்மா 3 பேரும் தூக்குத் தண்டனையை ரத்து செய்யக் கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இவர்களின் மேல்முறையீட்டு மனுவை 2018 ஜூலை 9ம் தேதி நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.
தனது மகளின் மரணத்திற்கு சரியான நீதி கிடைக்க வேண்டும் என்று தொடர்ந்து சட்டப் போராட்டம் நடத்தி வந்தனர் நிர்பயாவின் பெற்றோர். நிர்பயாவின் தாய் ஆஷா தேவி குற்றவாளிகளின் தூக்குத் தண்டனையை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது குற்றவாளிகளின் எந்த மனுக்களும் நீதிமன்றத்திலோ அல்லது குடியரசுத் தலைவர் பரிசீலனையிலோ இல்லை என்று வாதிடப்பட்டது. இதனையடுத்து 4 பேருக்கும் ஜனவரி 22ம் தேதி காலை 7 மணிக்கு திஹார் சிறையில் தூக்கு தண்டனையை நிறைவேற்ற நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தீர்ப்பைக் கேட்டு நெகிழ்ந்து போன நிர்பயாவின் தாய் ஆஷா தேவி,
ஜனவரி 22ம் தேதி தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும் நாளே எனது மகளின் ஆத்மா சாந்தியடையும் நாள். 4 குற்றவாளிகளுக்கு அளிக்கும் தண்டனையானது ஒட்டு மொத்த மக்களுக்கும் குறிப்பாக பெண்களுக்கு சட்டத்தின் மீதான நம்பிக்கையை மீட்டெடுக்கும் என்று உருக்கமாக தெரிவித்திருக்கிறார்.
நிர்பயாவின் தந்தை பத்ரிநாத் சிங் தீர்ப்பு பற்றி கூறுகையில்
“என் மகளுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்று நீண்ட நாட்களாக போராடிக் கொண்டிருக்கிறோம். தாமதமாக கிடைத்தாலும் சரியான நீதிக்கான நாள் குறிக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியே. தீர்ப்பு திருப்தியளிப்பதாகவும் அவர் கூறி இருக்கிறார்.
பீஹார் மாநில எல்லையோர கிராமத்தில் வசிக்கும் நிர்பயாவின் தாத்தா எங்களின் குடும்பத்திற்கே இப்போது தான் நிம்மதி கிடைத்திருக்கிறது. 7 ஆண்டுகளாக இழுத்தடிக்கப்பட்டாலும் சட்டத்தில் இருந்து யாரும் தப்பிக்க முடியாது என்பதை இதன் மூலமாவது குற்றவாளிகள், குற்றம் செய்ய நினைப்பவர்கள் மனதில் வைத்துக் கொள்ள இது ஒரு உதாரணம் என்றும் அவர் கூறி இருக்கிறார்.
நாடே இந்தத் தீர்ப்பை கொண்டாடி வந்தாலும் தண்டனை நிறைவேற்றப்படும் அந்த நாளே சரியான நீதி நிலைநாட்டப்படும். ஏனெனில் குற்றவாளிகள் தரப்பு வழக்கறிஞர் இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதாக கூறி இருக்கிறார்.
இன்னும் ஓரிரு நாட்களில் இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய இருக்கிறோம். 5 நீதிபதிகள் அமர்வு இதனை விசாரிக்கும். இந்த வழக்கில் தொடக்கம் முதலே அரசியல், மீடியாக்கள், பொதுமக்களிடம் இருந்து அழுத்தம் வருகிறது. இதனால் ஒருதலைபட்சமாகவே இந்த விவகாரம் பார்க்கப்படுகிறது. குற்றம் செய்த பணக்காரர்களுக்கு தண்டனை கிடைப்பதில்லை ஏழைகள் மட்டுமே தண்டிக்கப்படுகின்றனர். உச்சநீதிமன்றம் எங்களது மேல்முறையீட்டு மனுவை ஏற்றுக்கொண்டு தூக்கு தண்டனையை நிறுத்தி வைக்கும் என நம்புவதாக ஏ.பி.சிங் கூறியுள்ளார்.
தூக்கு தண்டனை நிறைவேற்றப்படுமா அல்லது நிறுத்தி வைக்கப்படுமா என்பது உச்ச நீதிமன்றத்திடம் இருக்கிறது. ஏற்கனவே ஒரு முறை குற்றவாளிகள் 3 பேர் தாக்கல் செய்த சீராய்வு மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்திருக்கும் நிலையில் மறுசீராய்வு மனு என்னவாகும்? தண்டனை நிறைவேற்றப்பட்டு நீதி நிலைநாட்டப்படுமா? நிர்பயாவிற்கான நீதி கிடைக்குமா?
தகவல் உதவி : நியூஸ் 18