50 ஆயிரம் முதலீட்டில் வீட்டில் இருந்தே துவங்கக் கூடிய 5 ஏற்றுமதி வர்த்தகங்கள்!
சர்வதேச சந்தையில் நுழைய வேண்டும் என்பது பல தொழில்முனைவோரின் கனவாக இருக்கிறது. எனினும் எல்லா ஏற்றுமதி வர்த்தகத்திற்கும் பெரிய அளவில் முதலீடு வேண்டும் என்பது இல்லை. 50,000 க்கும் குறைந்த முதலீட்டில் துவக்க கூடிய ஐந்து சிறிய ஏற்றுமதி தொழில்கள் பற்றிய விவரம் இதோ:
“இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு குடியேறியவர்கள் மிகவும் துடிப்புமிக்க சமூகங்களில் ஒன்றாக இருக்கிறனர்,” என ஐநா சபை அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.
2020ல் 18 மில்லியன் இந்தியர்கள் வெளிநாடுகளில் வசிக்கின்றனர் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2021 டிசம்பரில் இந்தியாவின் ஏற்றுமதி, ஆண்டு அடிப்படையில் 37 சதவீதம் உயர்ந்து 37.29 பில்லியன் டாலராக இருந்தது என வர்த்தகத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் அண்மையில் கூறியிருந்தார். இந்த நிதியாண்டில் நம்முடைய ஏற்றுமதி 400 பில்லியன் டாலருக்கு அதிகமாகலாம்.
இந்த தரவுகளை பார்த்தால் இந்தியாவுக்கு சர்வதேச சந்தையில் பெரிய அளவில் வாய்ப்பு இருப்பதை புரிந்து கொள்ளலாம். இந்த வளர்ச்சி வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள வழிகாட்டும் வகையில், 50,000 முதலீட்டில் துவங்கக் கூடிய ஐந்து ஏற்றுமதி வர்த்தகங்களை பட்டியலிடுகிறது:
அலங்கார நகைகள்:
இந்திய நகைகளுக்கு உலக அளவில் ஈர்ப்பு இருக்கிறது. இந்தத் துறைக்கு மிகப்பெரிய வாய்ப்பும் இருக்கிறது. பாரம்பரிய நகைகள் எல்லா இந்தியர்களையும் ஈர்க்கிறது. குறிப்பாக, வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்களை ஈர்க்கிறது. வெளிநாடுகளில் வசிப்பவர்கள் தங்கள் இந்திய நகைகளை அணிந்து கொள்ளும் வாய்ப்பை தவறவிட விரும்புவதில்லை.
நகை ஏற்றுமதிக்கான சிறு வர்த்தகம் எளிதானது. உள்ளூர் உற்பத்தியாளர்களிடம் இருந்து தருவித்து விற்கலாம் அல்லது ஒப்பந்த அடிப்படையில் உற்பத்தி செய்யலாம்.
மேலும், இணையதளம் வாயிலாக நுகர்வோரிடம் நேரிடையாக விற்கலாம் அல்லது சர்வதேச ஆர்டர்களை ஏற்கும் இணைய சந்தை மேடைகளில் விற்கலாம். டிரெண்ட் எக்கானமி தகவல்படி,
2020ல், இந்திய அலங்கார நகைகளுக்கான முக்கிய நாடுகளாக அமெரிக்கா 22 சதவீதம் (31 மில்லியன் டாலர்), யு,ஏ.இ 14.3 சதவீதம் (20 மில்லியன் டாலர்), யு.கே. 8.39 சதவீதம் (11.8 மில்லியன் டாலர்) விளங்கின்றன.
ஊறுகாய்
பல்வேறு ஊடக அறிகைகள் படி, இந்தியா உலகின் ஊறுகாய் அரசனாக விளங்குகிறது. இந்தியா 54 நாடுகளுக்கு ஊறுகாய் ஏற்றுமதி செய்கிறது. இந்திய எல்லைகளைக் கடந்து ஊறுகாய் பிரபலமாக உள்ளது.
உலக அளவிலான வர்த்தகத்தை உருவாக்க விரும்பினால், ஊறுகாய் ஏற்றுமதி நல்ல துவக்கமாக இருக்கும்.
30 ஆயிரம் முதல் 40 ஆயிரம் முதலீட்டில் வீட்டில் சிறிய அளவில் ஊறுகாய் வர்த்தகம் துவக்கலாம். மகளிர் சுய உதவி குழுக்களிடம் இருந்து வாங்கியும் விற்கலாம்.
அப்பளம்
அமிர்தசரி முதல் பிக்கானரி வரை இந்தியா எண்ணற்ற அப்பள வகைகளைக் கொண்டுள்ளது. 20 ஆயிரம் முதலீட்டில் இத்தொழிலை தொடங்கலாம். ஒரு அறிக்கைபடி,
இந்திய அப்பளம் 121 நாடுகளுக்கு ஏற்றுமதி ஆகின்றன. 2021ல் இந்தியா 34.1 மில்லியன் டாலர் அளவுக்கு அப்பளம் ஏற்றுமதி செய்தது.
வீட்டில் இருந்தே சிறிய அளவில் இத்தொழிலைத் துவக்கலாம். கையால் செய்யப்பட்ட அப்பளம் அல்லது துவக்கத்தில் வாடகை இயந்திரம் மூலம் அப்பளம் தயாரித்து விற்கலாம்.
ஊதுபத்தி
இந்திய அகர்பத்தி சந்தை பெரிய அளவில் வளர்ச்சி அடைந்து வருகிறது, உள்ளூர் மற்றும் உலக அளவில் தேவை உள்ளது. இந்தியா 150 நாடுகளுக்கு ஊதுபத்தி ஏற்றுமதி செய்கிறது. அரோமாதெரபி போன்றவை இதன் தேவையை அதிகரித்துள்ளது.
50 ஆயிரம் குறைந்த முதலீட்டில் வீட்டிலிருந்தே ஊதுவத்தி தொழிலைத் துவக்கலாம். அப்பளம் தயாரிப்பு போலவே மகளிர் சுய உதவி குழுக்களின் தயாரிப்பை நாடலாம்.
கைவினைப் பொருட்கள்
இந்திய கைவினைப் பொருட்கள் உலக அளவில் விரும்பப்படுகின்றன. ஒவ்வொரு இந்திய மாநிலமும் தனக்கான கைவினைப் பொருட்களைக் கொண்டுள்ளது.
சேலைகள், கைப்பைகள், காலணிகள், ஓவியங்கள், அலங்காரங்கள் என பலவற்றை விற்பனை செய்யலாம். சிறிய அளவில் இவற்றை பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யலாம்.
கைவினைக் கலைஞர்களிடம் இருந்து நேரடியாக தருவிப்பதன் மூலம் அவர்களுக்கான வேலைவாய்ப்பையும் அளிக்கலாம்.
ஆங்கிலத்தில்: பலக் அகர்வால் | தமிழில்: சைபர் சிம்மன்