தந்தையின் இறப்புக்குபின், 53 வயது அம்மாவுக்கு மறுதிருமணம் செய்து வைத்த மகள்!
20 வயதாகினும், 60 வயதானாலும் ஒருவருக்கு துணை, துணை தான் என்பதை உணர்ந்த ஜெய்ப்பூரைச் சேர்ந்த பெண் அவருடைய அம்மாவுக்கு லைப் பாட்னர் கம் குட் பிரண்ட்டை தேடி மறுதிருமணம் செய்து வைத்துள்ளார்.
இந்தியச் சமூகத்தில் முற்றிலும் விலக்கப்பட்ட அல்லது பேசக்கூடாத விடயங்களாக கருதப்படும் சில டாபூ டாப்பிக்ஸ்கள் காலங்காலமாய் நம்முடன் பயணப்பட்டு கொண்டிருக்கின்றன. அவற்றில் ஒன்று பெண் மறுமணம் செய்து கொள்வது. கல்யாணமாகிய பெண்கள் இப்படித்தான் இருக்கவேண்டும் என்று இச்சமூகம் வட்டம் போட்டு கொடுத்திருப்பது போல், அதைவிட குறுகிய வட்டம் கணவனை இழந்த பெண்ணுக்கு அமைத்துத் தரப்பட்டுள்ளது. ஆனால்,
உண்மையில் ஒரு பெண்ணுக்கோ, ஆணுக்கோ மற்ற உறவுகளைத் தாண்டி எக்காலத்திலும் ஒரு துணை தேவைப்படுகிறது. அதை உணர்ந்த ஜெய்ப்பூரை சேர்ந்த சன்ஹிதா அகர்வால் என்ற பெண், அவரது தந்தையின் மரணத்துக்குபின் 53 வயதான தாயுக்கு சிறந்த துணையை அமைத்துக் கொடுத்திருக்கிறார் .
இருஆண்டுகளுக்கு முன்பு, கீதா அகர்வாலின் கணவர் முகேஷ் குப்தா (52) மாரடைப்பால் மரணந்துள்ளார். அவருடைய மூத்த மகளுக்கு மணம் முடிந்து கணவன் வீட்டில் வசிக்க, அவருடைய இளைய மகளான சன்ஹிதா அவரது தாயுடன் வசித்து, அவரை மகிழ்விக்க முயற்சி செய்துள்ளார். அவ்வப்போதே கீதாவின் முகத்தில் புன்னகை பூக்கும்.
“இவ்வளவு சீக்கிரம் எங்களை விட்டுச் செல்வார் என்று நாங்கள் நினைத்துக்கூட பார்க்கவில்லை. உண்மையில், அப்பாவின் மரணம் எங்களுக்கு பயங்கர அதிர்ச்சியளித்தது. ஆறு மாதங்கள் கடந்தநிலையிலும், எங்களது குடும்பமே அப்பா இல்லாத வெறுமையை ஏற்றுக் கொள்ள முடியாமல் இருந்தது. நடு ராத்திரிகளில் அம்மா எழுந்து அமர்ந்து கொண்டு அப்பா எங்க? அப்பா எங்க?னு கேட்டுக் கொண்டிருப்பார். வீட்டு வாசலிலே அமர்ந்து அழுது கொண்டே இருப்பார். நானும், அக்காவும் நிலைமை சரிசெய்ய முடிந்தளவு முயன்றோம்,”
எனும் சன்ஹிதா பணி நிமித்தமாக ஹரியானாவுக்கு சென்றுவிட, கீதாவின் நிலை இன்னும் மோசமாகியது. வீக்கெண்டகளில் தவறாமல் ஹரியானாவிலிருந்து ஜெய்பூருக்கு சென்று அம்மாவுடன் இருந்தாலும், அம்மா அவருடைய உணர்வுகளை பகிர்ந்து கொள்ளவும், பேச்சுத் துணைக்கு கூட ஆளில்லாமல் தனிமையில் வசிக்கிறாரே என்று பெரிதும் கவலையுற்று இருக்கிறார் சன்ஹிதா.
அச்சமயத்தில் தான், 20 வயதாகினும், 60 வயதானாலும் துணை, துணை தான் என்று உணர்ந்து அம்மாவுக்கான லைஃப் பார்ட்னர் கம் குட் பிரண்ட்டை தேட முடிவெடுத்தார். கீதாவின் முழு விவரங்களை மேட்ரினிமோனி இணையதளத்தில் பதிவிட்டு அவருடைய தொலைபேசி எண்ணை வழங்கியுள்ளார்.
நான் அம்மாவின் வயதுடைய, அவருடைய புரிதல் நிலையில் உள்ள ஒருவரை தேர்ந்தெடுக்க நினைத்தேன். அவர் லைஃப் பார்ட்னரின் இழப்பை உணர்ந்தவராகவும், உணர்வுப்பூர்வ மிக்க ஆதரவை நல்கக் கூடியவராகவும் இருக்க வேண்டும். அவரிடம் அவரும், அம்மாவும் ஒரு கப் தேநீர் கொண்ட அவர்களது வாழ்வை பகிர்ந்து கொள்ளவேண்டும் என்று விரும்பினேன்.
”அனைவருக்குமே வாழ்க்கையில் ஒரு துணை தேவை. உங்களால் எல்லாவற்றையும் உங்களது குழந்தைகளிடம் பகிர்ந்து கொள்ள முடியாது. என் அம்மாவின் சம்மதமின்றி, அவரை பற்றி முழுவிவரங்களை மேட்ரிமோனி தளத்தில் பதிவிட்டு, என் நம்பரை கொடுத்தேன்,” என்கிறார் சன்ஹிதா.
இறுதியாய், சன்ஹிதா அவருடைய விருப்பத்தை தன் தாயிடம் கூறிய போது, கீதா கடிந்து கொண்டுள்ளார். தவிர, 50 வயதில் மறுமணம் செய்துகொண்டு, சமூகமும் சுற்றமும் வெறுத்து தன்னை ஒதுக்குவதைவிட தான் தனிமையில் வாழ்வதே மேலானது என்று கூறியுள்ளார்.
சன்ஹிதாவினது விருப்பத்துக்கு அவருடைய அக்கா உட்பட மொத்த குடும்பமும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அம்மாவுக்கு சரியான துணையை தேர்ந்தெடுப்பது தாண்டி, அம்மாவை சம்மதிக்க வைப்பதே சன்ஹிதாவுக்கு பெரிய டாஸ்க்காக மாறியது. சன்ஹிதா அவரது அம்மாவை சம்மதிக்கக் கூறிய வார்த்தைகளை இன்றும் நினைவில் வைத்துள்ளார்.
“ஒவ்வொரு தனி நபரும் சமூகக் கட்டுபாடுகளற்று சுயமாய், தனக்காக வாழ்வதற்கு உரிமை பெற்றவர்கள். 80 வயதில் நீங்கள் தனியாய் வாழும்போது உங்கள் உதவிக்கு சுற்றதார்கள் யாரும் வரபோவதில்லை. உங்கள் ஆதரவாய் உடன் இருக்க போவது துணையே.”
”அதே போல் அவருக்கு நீங்கள். அப்பா நம்மை விட்டுச் செல்லவேண்டியிருந்தால், அதில் உங்கள் தவறு ஏதுமில்லை. ஆனால், இப்போது உங்களுக்கு நீங்கள் இரண்டாவது வாய்ப்பு கொடுக்கவில்லை என்றால் அது தான் தவறு. தயவு செய்து யோசியுங்கள்” என்று நினைவு கூறுகிறார்.
அம்மாவை சமாதானம்படுத்திய அதே வேளையில், சன்ஹிதா அவருடைய ஸ்டெப் ஃபாதரையும் தேடிக் கொண்டிருந்துள்ளார். அப்படி, மேட்ரிமோனி தளம் மூலம் சன்ஹிதா சந்தித்தவர் தான் கே.ஜி. குப்தா. 55 வயதான அவர், ராஜஸ்தானைச் சேர்ந்த வருவாய் ஆய்வாளர்.
கடந்த 2010ம் ஆண்டு அவருடைய மனைவி கேன்சரால் பாதிக்கப்பட்டு இறந்துள்ளார். குப்தாவை சந்திக்க இருந்த சமயத்தில், கீதா உடல் நலக் குறைவுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சேதியறிந்த குப்தா ஆஸ்பத்திரிக்கு விரைந்துவந்து 3 நாட்கள் தங்கி கீதாவை கவனித்துக் கொண்டுள்ளார். அப்போது தான், சன்ஹிதா அவரது தாயுக்கு, தான் சரியான துணையை தேர்ந்தெடுத்திருப்பதை உணர்ந்திருக்கிறார்.
குப்தா ஹிந்துஸ்தான் டைம்சுக்கு அளித்த பேட்டியில்,
“பல ஆண்டுகளாக நான் தனிமையில் இருப்பதை தவிர்ப்பதற்கு பேட்மிண்டன் விளையாடினேன். இப்போ வயதாகிட்டது. என் ஆபிஸ் நண்பர் தான் மறுமணம் செய்து கொள்ளக்கூறி, மேட்ரிமோனி தளத்தில் பதிவிட்டார்,” என்ற அவரை மறுமணம் செய்து கொள்ள கீதாவும் சம்மதம் தெரிவித்துள்ளார்.
இறுதியாய், இரு மனம் இணையும் நிகழ்வை சிறிய விழாவாக ஏற்பாடு செய்திருந்த போதிலும், 400க்கும் மேற்பட்ட இரு குடும்பத்தினரும், குப்தாவின் அண்டை வீட்டாரும், சன்ஹிதாவுக்கு ஆசிகளை வழங்குவதற்காகவும் தம்பதியரை வாழ்த்துவதற்காகவும் வந்துள்ளனர்.
“இரண்டு வருஷத்துக்கு முன் அம்மாவுடன் பணியாற்றும் ஒருவர், அம்மா பொட்டு மற்றும் பளிச்சிடும் நிறத்தில் ஆடைகள் அணிந்ததற்காக அவமதித்தார். அதிலிருந்து எங்க அம்மா பொட்டு, கலர்புல் ஆடைகளையே தவிர்த்துவிட்டார். ஆனால், இப்போது எங்க அம்மா பழையவாறாக நகைகளை அணிவது சந்தோஷமாக இருக்கிறது.
பெரும்பாலான பெற்றோர்கள் அவர்களது பிள்ளைகளின் திருமணத்திற்கு பிறகு, அவர்களது லைஃப் பார்ட்னரை இழந்துவிட்டால், அத்துடன் அவர்களுக்காக வாழ்வதை நிறுத்திவிடுகிறார்கள். அவர்களது மகிழ்ச்சியை இரண்டாம் தரமாக்கி, எங்களுக்காக வாழும் பெற்றோர்களுக்கு வாழ்வை அமைத்து தருவது எங்களுக்கான பொறுப்பு.
“சிங்கிள் மதர்களின் பிள்ளைகளும் இதுபோன்று அவர்களுக்குச் செய்ய யோசிக்க வேண்டும் என்று நினைக்கிறேன்,” என்று மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டார் சன்ஹிதா.
தகவல் மற்றும் படங்கள் உதவி: scoopwhoop மற்றும் thebetterindia|கட்டுரையாளர்: ஜெயஸ்ரீ