தன் சகாக்கள் கல்வி கற்க உதவும் 13 வயது சிறுவன் அமன்
பள்ளியில் படிக்கும் ஒரு 13 வயது சிறுவன் பொதுவாக என்ன நினைப்பான்? எப்போது மணியடிக்கும் புத்தகப் பையைத் தூக்கி வீசி விட்டு விருப்பத்திற்கு விளையாடலாம் என்று தானே. ஆனால் இதற்கு முற்றிலும் மாறுபட்டவன் அமன் சிங் என்ற பதிமூன்று வயது சிறுவன். அமன், பி.எம்.சியில் (ப்ரிஹன்மும்பை மாநகராட்சிப்பள்ளி) அரசு உதவித் தொகை தேர்வில் மகாராஷ்டிர மாநிலத்தில் முதல் பத்து மாணவர்களில் ஒருவனாக வெற்றிப்பெற்று தேறியவன். அமன் சிங்கின் சாதனை அத்துடன் முடிந்து விடவில்லை. புதிய மாற்றங்களை உருவாக்குபவனாகவும் இருக்கிறான். தன் சக மாணவர்களுக்காகவும், பள்ளிக்குச் செல்ல வாய்ப்பில்லாத, சாத்தியமற்ற மற்ற பிள்ளைகளுக்காகவும் கற்றல் வட்டத்தை உருவாக்கியுள்ளான்.
![image](https://images.yourstory.com/production/document_image/mystoryimage/Q0AbLJb2SWeIywnSGcIQ_feature2.jpg?fm=png&auto=format)
அமன், போரிவலி என்ற பின்தங்கிய கிராமத்தின் எளிமையான காடி என்ற சமூகத்தைப் பின்புலமாகக் கொண்டவன். தந்தையுடன் வசிக்கிறான், அம்மாவை ஆண்டிற்கு இரண்டு முறை மட்டுமே அவனால் பார்க்க முடியும். அம்மா வேறொரு கிராமத்தில் குடும்பத்திலுள்ள மற்றவர்களைக் கவனித்து கொள்கிறார்.
![அமன் , நண்பன், அவன்மீது சாய்ந்து நிற்கும் மோகினி அக்கா](https://images.yourstory.com/production/document_image/mystoryimage/LDTShGRqK1nimtzpcduQ_Aman-and-Mohini.png?fm=png&auto=format)
அமன் , நண்பன், அவன்மீது சாய்ந்து நிற்கும் மோகினி அக்கா
கற்றல் வட்டம்
கற்றல் வட்டத்தை உருவாக்கும் பொறுப்பை ஆசிரியர் மோகினி பாண்டே, அமனிடம் ஒப்படைத்தார். "டீச் ஃபார் இந்தியா" வின் முன்னாள் ஆசிரியையான மோகினி, 2015 இல் தனது பயிற்சியை முடித்துள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளாக அமனுக்கும் பிற மாணவர்களுக்கும் போரிவலியில் உள்ள ‘ஏக்சர் தாலோ நகரப்பள்ளியில்' (Eksar Talao Municipal School) ஆசிரியையாக இருந்தார். இந்த வகை கற்றல் வட்டம் மற்றும்" மாணவர் தலைவர்" திட்டத்திற்கு, மோகினியின் ஆய்வு முக்கிய உந்துதலாக இருந்துள்ளது. சிந்தனை வடிவமான கற்றல் வட்டத்திற்கு, அமன் செயல்வடிவம் கொடுத்துள்ளான்.
மாணவர்கள் தாங்கள் வாழும் சமூகத்தில் எழும் பிரச்சனைகளில், எதில் தலையிடுவது எதில் விலகி நிற்பது என்ற கருத்தாக்கத்தை உருவாக்க திட்டமிடுவதும், வகுப்பறைகளை தீர்வைத் தேடும் இடமாக மாற்றுவதும் என்னுடைய வழக்கம். மாணவர்கள் யதார்த்தத்தை உள்வாங்க வேண்டும். அதன் மூலமாக நாம் வாழும் இந்த உலகை மேலும் சிறப்பானதாக மாற்ற முடியும். இந்த உலகில் நிலவும் கீழ்மைகளை யாரோ வந்து அகற்றுவார்கள் என்று காத்திருப்பதற்குப் பதிலாக அவற்றை மாற்றுவதற்கு ஓரடி முன்னோக்கி எடுத்து வைக்க வேண்டும் என்று விரும்புபவள் நான்.
2014 கல்வி ஆண்டறிக்கையின் படி 6 லிருந்து 14 வயதுவரையிலான மாணவர்களின் வருகைப்பதிவு தொடர்ந்து ஆறு ஆண்டுகளாக உயர்ந்து கொண்டே வந்துள்ளது. ஆனால் இந்தக் கதைக்கு ஒரு இருண்ட பக்கமும் உண்டு. அரசுப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பில் சேர்க்கப்படும் மாணவர்களின் வாசிப்புத் தரம் 2010 – 2012 ஆண்டுகள் தவிர்த்து மற்ற ஆண்டுகளில் படுமோசமான கீழ் நிலையில் இருந்து வந்தது. அதே சமயம் தனியார் பள்ளிகளில் வாசிப்புத்தரம் உயர்ந்துள்ளது. மாணவர்களின் கல்வித்திறனை ஆரோக்கியமாக்க வேண்டும் என்றால் நம்முடைய அணுகுமுறையில் மிகப்பெரிய மாற்றத்தைக் கொண்டுவர வேண்டும் என்பது தெளிவாக தெரிகிறது.
‘’மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் இடையே இடைவெளி இருப்பதை அமனும் அவனது நண்பர்கள் சிலரும் உணர்ந்தனர். தாம் படிக்கும் வகுப்பிற்குரிய கல்வித் தரத்தை தன் சக மாணவர்களால் எட்ட முடிவதில்லை என்பதையும் அவர்களால் உணர முடிந்தது. இந்த அம்சத்தை நாங்கள் தீவிரமாக யோசித்து எங்களுக்குள் விவாதித்தோம். அப்போது தான் மாணவர்களால், மாணவர்களுக்காக நடத்தப்படும் ஒரு கற்றல் வட்டத்தை உருவாக்குவது என்ற எண்ணம் உதயமானது’’ என்கிறார் மோகினி.
![அமனும் அவன் நண்பனும் கற்றல் வகுப்பிற்குத் தயாராகின்றனர்.](https://images.yourstory.com/production/document_image/mystoryimage/wuY6yneSM6LkuN4duhpZ_IMG_20150612_203336.jpg?fm=png&auto=format)
அமனும் அவன் நண்பனும் கற்றல் வகுப்பிற்குத் தயாராகின்றனர்.
அமனின் சமூகத்தைச் சேர்ந்த பள்ளிக்கு வரமுடியாத பிள்ளைகளுக்குக் கற்பிக்கவும், தன் சக மாணவர்களின் உதவியைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற எண்ணத்துடன் இந்தக் கற்றல் வட்டத்தை நடத்தும் பொறுப்பை அமனே ஏற்றுக் கொண்டான். உண்மையில் அமன் உள்ளத்தில் பொங்கும் அன்புதான் அவன் முன்னின்ற சவாலை ஏற்பதற்குத் தூண்டுகோலாய் இருந்தது.
‘’படிப்பில் கீழான நிலையில் இருந்த என் வகுப்பு மாணவர்கள் பலருக்கு உதவிக் கரம் தேவைப்பட்டது. எங்கள் ஆசிரியர்களுக்கு பல நேரங்களில் பள்ளி நிர்வாக வேலைகள் இருக்கும் அதனால் அவர்களால் பள்ளியில் உள்ள ஒவ்வொரு பிள்ளைகளின் பாலும் தனிப்பட்ட அக்கறை செலுத்த முடியாது. படிப்பில் பின் தங்கிய மாணவர்களின் பிரச்சனைக்குத் தீர்வு காண்பதற்கு மோகினி அக்கா (ஆசிரியர்களை மாணவர்கள் அக்கா அல்லது அண்ணா என்றே அழைக்கிறார்கள்) எங்களுக்குக் கற்றுக் கொடுக்க அன்றாடம் முயற்சித்து வந்தார். எனவே இந்த பிரச்சனைக்கு ஒரு முடிவை காண்பதற்காக நான் பொறுப்பேற்பதென்று முடிவு செய்தேன்’’ என்றான் அமன்.
மாணவர் தலைவர்கள் செயல்படும் விதம்
இந்த விஷயத்தில் மோகினி ஒரு முன்னோடியாகச் செயல்படுகிறார். அவர் கல்வியில் பின் தங்கிய மாணவர்களுக்கு இரண்டு ஆண்டுகளாகக் கற்பித்து வந்தார். மாணவர்களிடம் தனக்கு இணக்கமான சூழலை உருவாக்கிக் கொண்டார். அவர்களுக்கான சவால் என்ன என்பதையும், அதனை எதிர்கொள்ள மாணவர்களை எப்படித் தயார்ப்படுத்துவது என்பதையும் நன்றாகப் புரிந்து வைத்திருந்தார் மோகினி. தனது முன்னோட்டத்தை பள்ளியில் அறிமுகம் செய்த போது கிடைத்த வெற்றி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. மோகினியின் வகுப்பில் இருந்த மாணவர்கள் ஆங்கிலம் பேச்சுத் திறனிலும், பல்நோக்குச் சிந்தனை முறையிலும் மதிப்பெண்களை உயர்த்திக் காட்டினார்கள். மற்ற பாடங்களிலும் குறைந்த பட்சமாக ஆண்டிற்கு 0.5 என்ற அளவிலாவது அவர்களால் தங்களை வளர்த்துக் கொள்ள முடிந்தது. இந்தத் திட்டம் வெற்றியடைவதற்கு மோகினி மாணவர்களிடம் கொண்டிருந்த தோழமை உறவும் ஒரு காரணம் ஆகும். இந்த விளைவின் உறுதியில் மோகினி தனது திட்டத்தை மெருகேற்றி பிற பள்ளிகளுக்கு மட்டுமல்லாமல் பள்ளிக்கு வர இயலாத குழந்தைகளுக்கும் கற்றல் வட்டத்தின் மூலம் பாடம் கற்பிக்கத் தொடங்கினார்.
கற்றல் வட்டம் தினசரி பள்ளி முடிந்த பின் ஒன்றரை மணிநேரம் பள்ளியில் தொடரும். அதற்குப் பிறகு படிப்பில் பின் தங்கிய மாணவர்கள் மாணவத் தலைவர் வீட்டிற்குச் செல்வார்கள். ஏதேனும் சில காரணங்களால் தலைவர் வகுப்பெடுக்க முடியாது போனாலும் கற்றல் இன்னொரு மாணவர் தலைவர் வீட்டில் தொடரும்.
இந்த வட்டம் எப்படி நடத்தப்படுகிறது என்பதை நம்மிடம் கூறுகையில், ‘’தற்போதுள்ள தரத்திற்கு ஏற்றவாறு மாணவர்களைச் சிறு சிறு குழுக்களாகப் பிரித்துக்கொள்வோம். அன்றைக்கான பாடப்பிரிவை முடிவு செய்த பின்னர் ஒவ்வொரு குழுக்களுக்கு ஏற்பக் கற்பிக்கும் மாணவர் தலைவர் அந்தக் குழுவுடன் இணைக்கப்படுவார். ஆக குழுச் செயல்பாட்டின் முக்கியத்துவத்தை உணர்ந்து கொள்ள முடியும். குழுவில் பங்கேற்பவரிடம் வேலைத்தாள் அளிக்கப்படும். அதில் அன்று பெற்ற கற்றல் பயிற்சியை வகுப்பு நேரம் முடிந்தபின்னர் எழுதிக் கொடுப்பார். மாணவர் தலைவர்கள் அனைவரும் கூட்டாக அமர்ந்து பங்கேற்ற மாணவர்களின் வளர்ச்சித் தரத்தை மதிப்பீடு செய்வார்கள்.’’ என்று விளக்கினான். அமன்
அதுபோல மாணவர் தலைவர்களின் கற்பித்தல் பற்றியும், அன்றைய வகுப்பு எவ்வாறு இருந்தது என்பது குறித்தும் பங்கேற்ற மாணவர்கள் பின்னூட்டம் அளிப்பார்கள்.
கற்றல் வட்டம் எப்போதும் தனது முதிர்ச்சியில் கவனம் கொண்டுள்ளது. மாணவர்களின் கற்கும் வேகத்தை வளர்த்தெடுப்பதோடு நின்றுவிடாமல், தகுதிக்கும் மேலதிகத் திறனுள்ளவர்களாக ஒவ்வொருவரையும் வளர்த்தெடுக்க முயற்சி மேற்கொள்கிறது கற்றல் வட்டம்’’ என்று அமன் நம்மிடம் கூறினான்.
வகுப்பில் ஒவ்வொரு மாணவனின் தகுதிப் படிநிலை பிறருக்குத் தெரியும் என்பதால் கற்றல் வட்டத்தில் ஒன்றாக அமரும்போது அவரவர் நிலையை மேம்படுத்திக்கொள்ளும் நோக்கத்துடன் கடினமாக உழைப்பது மட்டுமல்லாமல், மோகினி அக்கா எங்களுக்கு நிர்ணயித்த இலக்கையும், கனவையும் நோக்கி தொடர்ந்து முற்சிக்கிறோம். மோகினி அக்கா எங்களுக்கு அடிப்படைத் திட்டத்தை வகுத்துக் கொடுத்து விடுவார். எனவே பாடத்தில் தேறும் அளவிற்கு ஆற்றல் மிக்கவனாக எங்களால் மாற முடிகிறது. அதுபோக மேலும் வளர்த்தெடுப்பதற்கான அடுத்த கட்டத் திட்டங்களை குழுக்களுக்குள் நாங்களே வகுத்துக் கொள்ள இப்போது தொடங்கி விட்டோம்.
மாற்றம்
மோகினி வகுத்த செயல் திட்டத்தில் வெற்றிக்கான உத்திரவாதம் ஒன்று மட்டுமே அல்ல, அடைந்த வெற்றிக்கு என்ன விலை கொடுக்கப்பட்டுள்ளது என்பதை நம்மிடம் பிரதிபலிக்கும் விதமாகவும் உள்ளதாக கூறுகிறார்.
இந்த நடவடிக்கையை கவனித்துப் பார்க்கிறேன். மாணவர்கள் அனைவரும் தங்களைப் பற்றி சிந்திப்பது, முனைப்புக் காட்டுவது என்பதற்கும் மேலாக அவர்களை அடுத்த கட்டத்திற்கு தயார்ப்படுத்தியிருக்கிறேன். இது அவர்களுக்குள் ஒரு திடீர் மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது. தங்களது சக மாணவர்களுடன் முன்னைவிட மிகுந்த அன்புடனும், தன்மையுடனும் பழகுகிறார்கள். தம்மால் முடிந்த மட்டிலும் பிறருக்கு உதவுகிறார்கள். தனித்துவமிக்கவர்களாக வளர்ந்து கொண்டிருக்கிறார்கள். இந்த வளர்ச்சி தொடர்கிற போது தாங்கள் பெற்றுள்ள பயிற்சியைக் கொண்டு வருங்காலத்தில் தங்கள் சமூகத்திற்கும் உதவுவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு.
அமனிடம் ஏற்பட்டுள்ள மாற்றங்களை மோகினியால் காணமுடிகிறது. அமன் ஒரு அறிவார்ந்த மாணவனாகத் தேறி வருகிறான். பிற மாணவர்களின் சூழலைப் புரிந்து கொண்டு அதற்கேற்ற வகையில் நடந்து கொள்கிறான். கற்றல் வட்டத்தில் உள்ள மாணவர்களைப் பற்றிய சிந்தனையும், பரிவுணர்ச்சியும் அவனிடம் அதிகமாக வளர்ந்துள்ளது. அவனுடைய சிந்தனை நுட்பமும் பெருமளவு வளர்ந்துள்ளது என்பதை மோகினியால் உணர முடிகிறது.
அமனின் கனவு: எளிமை, நுண்ணோக்கு, பெருமுனைப்பு
கற்றல் வட்டத்தால் தான் நிறைய நம்பிக்கை அடைந்துள்ளதாகக் கூறினான் அமன். சுய செயல்பாட்டின் முக்கியத்துவத்தை என்னால் உணர முடிகிறது என்ற அமனிடம் பிற்காலத்தில் நீ என்னவாக விரும்புகிறாய் என்ற கேள்விக்குச் சட்டென்று சரியான பதில் வந்தது –
‘’அரசியலில் ஈடுபட்டு இந்திய பிரதமராவதே என் கனவு’’ என்று.
நீங்கள் வளர்ந்தவர்கள் என்ற முறையில் இது யதார்த்திற்குப் புறம்பான பதிலாக ஒரு கணம் தோன்றலாம்.
ஆனால் அவன் பேச்சில் உள்ள உறுதியைக் கொண்டு பார்க்கும் போது அவனது இலட்சியத்திற்குள் தீர்க்கமான சிந்தனை இருப்பதைக் காண முடிகிறது.
நான் அரசியலுக்கு போக விரும்பவில்லையென்றால் என்னைச் சுற்றியுள்ள மக்களிடத்தில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த முடியும். அத்தகைய மாற்றங்கள் ஏற்படுமானால் இந்தியா ஒரு வளர்ந்த நாடாக மாறும். ஒருவரின் பின்புலத்தைப் பொருட்படுத்தாத மிகச்சிறந்த இடமாக இந்த தேசம் விளங்கும்.