மின் கழிவுகளைக் கொண்டு கண்கவர் சிற்பங்களை செதுக்கும் கலைஞர் ஹரிபாபு நடேசன்!
அப்புறப்படுத்தப்படும் சிடி, செல்போன், லேப்டாப், மைக்ரோவேவ், மதர்போர் போன்ற மின்கழிவுகளைக் கொண்டு சிற்பங்களை உருவாக்கி சுற்றுச்சூழலை பாதுகாக்கிறார்.
ஒரு ஆண்டிற்கு எவ்வளவு மின் கழிவுகள் உற்பத்தியாகிறது என்பதை நீங்கள் அறிவீர்களா?
நாட்டில் 2016-ம் ஆண்டில் சுமார் இரண்டு மில்லியன் மெட்ரிக் டன் அளவிற்கு மின் கழிவுகள் உற்பத்தி செய்யப்பட்டதாகவும் இதில் 82 சதவீதம் தனிநபர் பயன்பாடு சார்ந்தது என்றும் ஒரு அறிக்கை குறிப்பிடுகிறது. நச்சுத்தன்மை நிறைந்த ரசாயனங்கள் மற்றும் உலோகங்கள் நிறைந்த இந்த மின் கழிவுகளில் பெரும்பாலானவை திறந்தவெளியில் கொட்டப்படுகிறது. இதனால் ஆபத்தான பொருட்கள் நிலத்தில் கசியலாம்.
கொள்கை உருவாக்குபவர்களும் அரசாங்கமும் தனியார் ஏஜென்சிக்களும் நிலத்தை சுத்தப்படுத்த முயற்சி செய்து வரும் நிலையில் மும்பையைச் சேர்ந்த ஹரிபாபு நடேசன் அப்புறப்படுத்தப்பட்ட மின் கழிவுகளைக் கொண்டு சிற்பங்களை உருவாக்குகிறார்.
ஹரிபாபு அனிமேஷன் பிரிவில் பணிபுரிந்து வந்தார்.
2009-ம் ஆண்டு தனது பணியை விட்டு விலகிய இவர் தனித்துவமான கலையை உருவாக்க விரும்பினார் என என்டிடிவி தெரிவிக்கிறது. மதர்போர்ட், ஃப்ளாப்பி டிஸ்க், சிடி ட்ரைவ், செல்போன், சிடி போன்ற மின் கழிவுகளைப் பயன்படுத்தி கண்களைக் கவரும் சிற்பங்களை உருவாக்கி வருகிறார்.
அப்புறப்படுத்தப்படும் மின் கழிவுகள் குறித்து ஹரிபாபு என்டிடிவி உடன் உரையாடுகையில்,
“வழக்கொழிந்து போன வாக்மேன், வீடியோடேப் போன்றவை என்னவாகும்? செல்போன், பழைய ஃப்ளாப்பி டிஸ்க், பயனற்றுப்போன லைட் பல்ப் போன்றவற்றின் நிலை என்ன? ’ஸ்கிராப்’ என நாம் வழக்கமாக அழைக்கும் பொருட்கள் என்ன செய்யப்படும்? இவை அனைத்தும் ஸ்கிராப் செய்யப்படும் பகுதியில் கொட்டப்பட்டு அரித்துப்போய் தீங்குவிளைவிக்கும் கதிர்வீச்சுகள் கசியச் செய்யும். இது மிகவும் ஆபத்தானது,” என்றார்.
ஹரிபாபு தனது கலையை ’பசுமையான வடிவமைப்பு’ என்று குறிப்பிடுகிறார். மின் கழிவுகளைத் திரட்டி தனது ஸ்டூடியோ ஸ்கிராப் அறையில் சேமித்து வைக்கிறார். பின்னர் மின் கழிவுப்பொருட்களின் அளவு, வடிவம், நிறம், வகை போன்றவற்றின் அடிப்படையில் வகைப்படுத்துகிறார். இந்தப் பணி முடிவடைந்ததும் சிற்பங்களை உருவாக்கத் தேவையான விதத்தில் அவற்றை கவனமாக பொருத்துகிறார்.
ஹரிபாபு அரசு கவின் கலைக் கல்லூரியில் நுண்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளார் என Fossilss என்கிற அவரது அதிகாரப்பூர்வமான வலைதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அஹமதாபாத் தேசிய வடிவமைப்பு நிறுவனத்தில் முதுகலைப் படிப்பு மேற்கொண்டபோது அப்புறப்படுத்தப்பட்ட மின் கழிவுகளைக் கொண்டு உருவாக்கிய கலையை காட்சிப்படுத்த ஒரு தளம் கிடைத்தது. இது அவருக்கு பாராட்டுகளைப் பெற்றுத்தந்தது.
நடேசன் கடந்த ஆண்டு விநாயக சதுர்த்தியின்போது 800 கிலோ படிகாரத்தைப் பயன்படுத்தி விநாயகர் சிலையை உருவாக்கினார். சிலையை படிகாரத்தில் உருவாக்கினால் தண்ணீரில் கரைக்கும் போது தண்ணீரில் மாசுபடாது. மாறாக படிகாரம் தண்ணீரை சுத்தப்படுத்தும். எனவே படிகாரத்தைக் கொண்டு இந்தச் சிலையை உருவாக்கியுள்ளார். சிலை உருவாக்கப்படும் ஒட்டுமொத்த செயல்முறையும் Fossilss முகநூல் பக்கத்தில் பகிர்ந்துகொள்ளப்பட்டுள்ளது.
மற்றவர்கள் பயிற்சி செய்யவும் சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் ஹரிபாபு தனது கலையைப் பயன்படுத்துகிறார். ஹரிபாபு என்டிடிவி-க்கு தெரிவிக்கையில்,
“மின் கழிவுகளை மறு பயன்பாட்டிற்கு உட்படுத்தலாம் என்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும் என்பதே என் கலையின் நோக்கம். என்னுடைய ஸ்டூடியோவில் வகுப்பெடுக்கிறேன். நிலங்களில் நிரப்பப்படும் அப்புறப்படுத்தப்பட்ட பொருட்களைக் கொண்டு சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில் கலையாக உருவாக்கும் நுட்பம் குறித்து இளம் கலைஞர்கள் கற்றுக்கொள்ள உதவும் வகையில் தொடர்ந்து பயிற்சிப் பட்டறைகளை நடத்தி வருகிறேன். தொழிற்சாலைக் கழிவுகள் பூமியை மாசுபடுத்துவதைத் தவிர்க்க மறுசுழற்சி செய்யப்படவேண்டும் என்பதே இதன் நோக்கம்,” என்றார்.
கட்டுரை : THINK CHANGE INDIA