சிறு தொழில்களுக்கான ஜி.எஸ்.டி வரி தாக்கல் எளிதாகிறது...
சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான ஜி.எஸ்.டி தாக்கல் எளிதாகி இருக்கிறது. இதன் மூலம் 93 சதவீத வரி செலுத்துபவர்கள் பயன் பெற உள்ளனர். இந்த மாற்றத்தை தொழில் துறையினர் வரவேற்றுள்ளனர்.
மிகப்பெரிய வரி சீர்த்திருத்தமான ஜி.எஸ்.டி எனப்படும் சரக்கு மற்றும் சேவைகள் வரி நடைமுறைப்படுத்தப்பட்டு நாடு முழுவதும் ஒரே விதமான வரிவிதிப்பின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. ஜி.எஸ்.டி அமல் செய்யப்பட்டு அண்மையில் ஓராண்டு நிறைவடைந்தது.
இந்நிலையில், ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம் கடந்த சில தினங்களுக்கு முன் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஜி.எஸ்.டி முறையை மேலும் எளிமையாக்குவது பற்றி விவாதிக்கப்பட்டு அதற்கான முக்கிய முடிவு அறிவிக்கப்பட்டன. மேலும், ஜி.எஸ்.டி கீழ் வரி விலக்கு பெறும் பொருட்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. பல்வேறு பொருட்களுக்கான வரி குறைக்கப்பட்டுள்ளது.
நிதி அமைச்சகத்திற்கு பொறுப்பு ஏற்றுக்கொண்டுள்ள அமைச்சர் பியூஷ் கோயல் தலைமையில் இந்த கூட்டம் நடைபெற்றது.
பெண்களுக்கான சானிட்டரி நாப்கின்கள், பூஜை பொருட்கள், ராக்கி உள்ளிட்ட பொருட்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளன. வாஷிங் மெஷின், பிரிட்ஜ், வாக்குவம் கிளினர், பெயிண்ட் உள்ளிட்ட பொருட்களுக்கு வரி குறைக்கப்பட்டுள்ளது. ஜி.எஸ்.டியில் 5 முதல் 28 சதவீதம் வரை பல அடுக்கு வரி விதிக்கப்படுகிறது.
தற்போது செய்யப்பட்டுள்ள மாற்றத்திற்கு பின், ஆடம்பர பொருட்கள் மற்றும் தீங்கு விளைவிக்கும் பொருட்கள் மட்டுமே 28 சதவீத பிரிவில் உள்ளன. பெரும்பாலான பொருட்கள் 5 முதல் 12 சதவீத வரி பிரிவின் கீழ் வருகின்றன. இந்த அறிவிப்பு ஜி.எஸ்.டி வரியை மேலும் எளிதாக்கும் என கருதப்படுகிறது.
பெண்களுக்கான சானிட்டரி நாப்கின்களுக்கான வரி நீக்கப்பட வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டு வந்த நிலையில் இது ஏற்கப்பட்டுள்ளது. தற்போது நாப்கின்களுக்கு 12 சதவீத வரி விதிக்கப்படுகிறது. இனி இதற்கு விலக்கு அளிக்கப்படும். இதே போல ஓட்டல் துறையில், டாரிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள கட்டணத்திற்கு அல்லாமல், வாடிக்கையாளருக்கு வழங்கப்படும் கட்டணத்திற்கு மட்டுமே வரி பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் படி, ரூ,7,500 க்கு மேல் அறை கட்டணம் இருந்தால் வரி பொருந்தாது. வாடிக்கையாளர்களுக்கான தள்ளுபடி அளிக்கப்பட்ட நிலையில் அறையின் முழு கட்டணத்திற்கு வரி விதிக்கப்பட்டு வந்தால் இத்துறையினர் இதில் மாற்றம் தேவை என கோரி வந்தனர். இந்த கோரிக்கை ஏற்கப்பட்டுள்ளது.
இதே போல சிறு தொழில்களுக்கான் வரித்தாக்கலும் எளிதாக்கப்பட்டுள்ளது. ரூ.5 கோடி வரை விற்றுமுதல் கொண்ட சிறு தொழில் நிறுவனங்கள் மற்றும் வர்த்தகர்கள் காலாண்டுக்கு ஒரு முறை வரிக்கணக்கு தாக்கல் செய்தால் போதும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது மாதந்தோறும் வரித்தாக்கல் செய்ய வேண்டும். இதை நிறைவேற்றுவது கடினமான சுமையாக இருப்பதாக சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் தொடர்ந்து முறையிட்டு வந்தன.
இதனையடுத்து, சிறு தொழில் நிறுவனங்கள் காலாண்டுக்கு ஒரு முறை கணக்கு தாக்கல் செய்தால் போதுமானது என மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மாதந்தோறும் வரி செலுத்த வேண்டும். ஆனால் காலாண்டுக்கு ஒருமுறை கணக்கு தாக்கல் செய்தால் போதுமானது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதல் ரூ.15 கோடி வரை விற்றுமுதல் கொண்டவர்களுக்கு இந்த சலுகை அளிக்கப்பட்டது, தற்போது இது ரூ.5 கோடி வரை விற்றுமுதல் கொண்டவர்களுக்கும் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.
இந்த மாற்றத்தால் 93 சதவீத வரி செலுத்துபவர்கள் பயன்பெறுவார்கள் என கருதப்படுகிறது. வரித்தாக்கல் செய்வதற்கான நடைமுறையும் எளிதாக்கப்பட்டுள்ளது. இதற்காக சஹாஜ் (Sahaj) மற்றும் சுகம் (Sugam) ஆகிய இரண்டு படிவங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இவற்றில் குறைவான தகவல்களை மட்டுமே அளிக்க வேண்டும்.
வரித்தாக்கல் படிவம் இரண்டு பகுதிகளை கொண்டிருக்கிறது. ஒரு பகுதி கட்டத்தில் வெளியே செல்லும் சப்ளை விவரங்களை குறிப்பிட வேண்டும். இரண்டாவது கட்டத்தில் இன்வாய்ஸ்கள் மீதான இன்புட் டாக்ஸ் கிரெட்டிடை குறிப்பிட வேண்டும். இன்வாய்ஸ்களை விற்பனையாளர்கள் தொடர்ச்சியாக பதிவேற்றலாம். அவற்றை வாங்குபவர்கள் பார்த்து இன்புட் டாக்ஸ் கிரெடிட் கோரலாம். இதன் மூலம் இன்வாய்ஸ் பதிவேற்றப்படும் போதே தாக்கல் தானியங்கிமயமாக்கப்படும். அப்லோடு-லாக்- பே எனும் முறையில் இது செயல்படும்.
இதில் இன்வாய்ஸ்களில் திருத்தம் செய்யும் வாய்ப்பும் அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான திருத்த முறையை பின்பற்றி மாற்றங்களை செய்யலாம். மேலும், ரிவர்ஸ் சார்ஜ் முறையை அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதம் வரை தள்ளி வைக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. ரிவர்ஸ் சார்ஜ் முறையின் கீழ், சப்ளையருக்கு பதில் பொருட்களை வாங்குபவர் வரி செலுத்த வேண்டும்.
இந்த மாற்றங்கள் இம்மாதம் 27 ம் தேதி முதல் அமலுக்கு வருகின்றன. வரி குறைப்பு மற்றும் வரி விலக்கு ஜி.எஸ்.டி–யை நடைமுறையில் இரண்டு அடுக்கு முறையை நோக்கி கொண்டு செல்லப்படும் என கருதப்படுகிறது. வரி விலக்கு சலுகைகள் அரசுக்கு ரூ.10,000 கோடி வரை இழப்பை ஏற்படுத்தலாம் என்றாலும், இதன் மூலம் அதிகமானோர் வரி செலுத்தும் நிலை ஏற்படும் என்பதால் இது சரி செய்யப்படும் என கருதப்படுகிறது.
சிறு தொழில்களுக்கான வரி தாக்கல் முறை எளிதாக்கப்பட்டுள்ளது, சிறு தொழில் நிறுவனங்களுக்கு உதவியாக இருக்கும் என்று வர்த்தக அமைப்புகள் வரவேற்றுள்ளன.