கட்டுமானப் பணியில் பயிற்சி பெற்று தனது கிராமத்தை திறந்தவெளி கழிப்பிடங்கள் இல்லா பகுதியாக மாற்றிய பெண்!
சுனிதா தேவி 475 கழிப்பறைகளைக் கட்டியுள்ளார். 300-க்கும் அதிகமான பெண்கள் சுமார் 1,500-க்கும் அதிகமான கழிப்பறைகள் கட்டுவதற்கு பயிற்சியளித்துள்ளார். சர்வதேச மகளிர் தினத்தன்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்களிடம் இருந்து ’நாரி சக்தி புரஸ்கார் 2018’ விருதினைப் பெற்றுள்ளார்
திறந்தவெளி கழிப்பிடங்கள் இல்லாத பகுதியாக இந்தியாவை மாற்ற மக்களின் மனநிலையிலும் நடத்தையும் மாற்றம் ஏற்படவேண்டும். 90 சதவீதத்திற்கும் அதிகமான தனிநபர்கள் கழிப்பறை வசதியைக் கொண்டிருப்பதாகவும் ’தூய்மை இந்தியா’ திட்டத்தின்கீழ் அவற்றைப் பயன்படுத்தி வருவதாகவும் அரசு அறிக்கைகள் சுட்டிக்காட்டினாலும், உண்மை நிலவரம் மாறுபட்டிருப்பதாகவே தோன்றுகிறது.
எனினும் ஜார்கண்ட் பகுதியைச் சேர்ந்த சுனிதா தேவி தனது உதய்புரா கிராமத்தை திறந்தவெளி கழிப்பிடங்கள் இல்லாத பகுதியாக மாற்றும் நோக்கத்துடன் செயல்படுகிறார். இந்த லட்சியம் நிறைவேற சுகாதாரம், ஆரோக்கியம், சுத்தம், கழிப்பறை போன்றவற்றில் மக்களின் அணுகுமுறையிலும் நடத்தையிலும் மாற்றம் ஏற்படவேண்டும் என்பதை உணர்ந்தார்.
முன்பெல்லாம் கட்டுமானப் பணிகளில் பெரும்பாலும் ஆண்களே ஈடுபட்டிருந்தனர். கழிப்பறைகளைக் கட்டுவது சிறு வேலையாக கருதப்பட்டதாலும் அதில் அதிகம் சம்பாதிக்க முடியாது என்பதாலும் கழிப்பறைகள் கட்டும் பணியில் அவர்களை ஈடுபடவைப்பது கடினமாக இருந்தது. எனவே மாவட்ட அதிகாரிகள் சுனிதாவின் கிராம பஞ்சாயத்தை அணுகி தன்னார்வலர்களை அழைத்தபோது சுனிதா இணைந்துகொண்டதாக என்டிடிவி தெரிவிக்கிறது.
சுனிதா தனது கிராமத்தில் கழிப்பறைகள் அவசியம் என்பதை உணர்ந்தார். தூய்மை இந்தியா திட்டத்தால் ஊக்கமளிக்கப்பட்டவர்கள், யூனிசெப் ஆதரவு பெற்ற ஊழியர்கள், Community Approaches to Total Sanitation (CATS) நிபுணர்கள், ப்ளாக் கம்யூனிட்டி, Zila Swachhta Preraks போன்றோர் 2016-ம் ஆண்டு ஏற்பாடு செய்த கட்டுமானப் பணிக்கான பயிற்சியில் இணைந்துகொண்டார்.
இந்தப் பயிற்சியில் தனிநபர் வீடுகளுக்கான இரட்டை உறிஞ்சு குழி கழிப்பறைகள் கட்டுமானத்தின் அனைத்து தொழில்நுட்ப அம்சங்களும் விவரிக்கப்பட்டது. சுனிதா பயிற்சியை முடித்த பிறகு கழிப்பறை கட்ட வசதி இல்லாதோர் அடங்கிய பகுதிகளில் கழிப்பறைகளைக் கட்டத் துவங்கினார். என்டிடிவி உடனான உரையாடலில் சுனிதா குறிப்பிடுகையில்,
”இரட்டை உறிஞ்சு குழி தொழில்நுட்பம் கட்டுமானப் பணியில் ஈடுபட்டுள்ள ஆண் பணியாளர்களுக்கு புதிதான ஒன்றாகும். எனவே ஒவ்வொரு கழிப்பறை கட்டுமானத்திலும் நான் அவர்களை கண்காணித்து வழிநடத்தினேன்,” என்றார்.
சுனிதா தனது கிராமத்தில் கழிப்பறைகள் கட்டுவதுடன் நிறுத்திக்கொள்ளாமல் பெண்கள் அடங்கிய குழு ஒன்றையும் உருவாக்கினார். சுகாதாரம், திறந்தவெளியில் மலம் கழிப்பது, மது அருந்துதல், குழந்தைத் திருமணம், பெண்களின் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு சிக்கல்கள் குறித்து விவாதிக்க ஒவ்வொரு வார இறுதி நாட்களிலும் அனைவரும் சந்தித்துக்கொண்டனர்.
ஒவ்வொரு வீடாகச் சென்று பெண்கள் கட்டுமானப் பணியில் ஈடுபட்டு வருவாய் ஈட்ட அவர்களை ஊக்குவித்ததுடன் திறந்தவெளி கழிப்பிடங்கள் இல்லாத பகுதியாக மாற்றவும் முயற்சிகள் மேற்கொண்டு வருகிறார். இதுவரை இவர் 475 கழிப்பறைகளைக் கட்டியுள்ளார். 300-க்கும் அதிகமான பெண் கட்டுமானப் பணியாளர்களை 1,500-க்கும் அதிகமான கழிப்பறைகளை கட்ட ஊக்குவித்து பயிற்சியும் அளித்துள்ளார்.
மக்களிடையே மாற்றத்தை ஏற்படுத்தியதற்காக சர்வதேச மகளிர் தினத்தன்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்களிடம் இருந்து ’நாரி சக்தி புரஸ்கார் 2018’ விருதினைப் பெற்றுள்ளார். சுமார் 300 பெண்கள் கட்டுமானப் பனியில் ஈடுபட ஊக்குவித்ததற்காக ஒரு லட்ச ரூபாய் ரொக்கப் பரிசும் வழங்கப்படுவதாக ’டெலிகிராஃப் இண்டியா’ குறிப்பிடுகிறது.
சுனிதா என்டிடிவி உடனான உரையாடலில் குறிப்பிடுகையில்,
”மக்கள் தற்போது என்னுடைய பணியை மரியாதையுடன் பார்க்கின்றனர். என்னைப் பாராட்டுகின்றனர். என்னுடைய குடும்பத்தினரின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்துள்ளேன் என நம்புகிறேன். மக்களின் மனநிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. தற்போது பெண்கள் கட்டுமானப் பணியில் ஈடுபட அனுமதிக்கப்படுகின்றனர். இன்று என் கிராமத்தில் இருக்கும் ஒவ்வொரு வீட்டிலும் கழிப்பறை உள்ளது,” என்றார்.
கட்டுரை : THINK CHANGE INDIA