பெங்களூருவை நீர் நெருக்கடியில் இருந்து பாதுகாக்க பழைய கிணறுகளை புதுப்பித்து ரீசார்ஜ் செய்யும் ஆர்வலர்!
விஷ்வநாத் ஸ்ரீகாந்தையா கப்பன் பார்க்கில் உள்ள பழைய கிணறுகளை புதுப்பித்துள்ளார். இந்த கிணறுகள் நாள் ஒன்றிற்கு 65,000 முதல் 1,00,000 லிட்டர் தண்ணீரை கொடுக்கக்கூடியதாகும்.
2020-ம் ஆண்டில் தண்ணீரே இல்லாத பகுதியாக மாறக்கூடிய மெட்ரோ நகரங்களில் ஒன்றாக பெங்களூரு இருக்கப்போவதாக நிதி ஆயோக் அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.
இது அபாயகரமான சூழலாகும். இது நாம் நமது இயற்கை வளங்களை சுயநலத்திற்காக சுரண்டியதன் எதிரொலியே. தற்போதுள்ள நீர்நிலைகளை பாதுகாப்பதில் மாநில அரசாங்கமோ பொதுமக்களோ பெரிதாகப் பங்களிக்கவில்லை.
இத்தகைய நெருக்கடியான சூழலில் பெங்களூருவைச் சேர்ந்த நீர் ஆர்வலர் மற்றும் நகர்புற திட்டமிடுபவரான விஷ்வநாத் ஸ்ரீகாந்தையா நகரை தண்ணீர் நெருக்கடியில் இருந்து பாதுகாப்பதற்கான திட்டத்தை முன்வைத்துள்ளார்.
உள்ளூர் சமூகத்துடன் ஒருங்கிணைந்து பணியாற்றும் 55 வயது விஷ்வநாத் நகரில் உள்ள கிணறு தோண்டுபவர்களின் உதவியுடன் 10,000 கிணறுகளை வெற்றிகரமாக தோண்டியுள்ளார். மேலும் நகர அளவில் 1,00,000 ரீசார்ஜ் கிணறுகளையும் உருவாக்கியுள்ளார். விரைவில் ஒரு மில்லியனை எட்டுவதை இலக்காகக் கொண்டுள்ளார்.
இவர் ’தி லாஜிக்கல் இண்டியன்’ உடனான உரையாடலில் கூறும்போது,
”இந்த ரீசார்ஜ் கிணறுகள் மேற்கூரையின் மழைநீரை பயன்படுத்திக்கொண்டு நீர்த்தேக்கத்திற்கு அனுப்புகிறது. இதனால் நிலத்தடி நீர் மேம்படுகிறது. இதன் மூலம் பாரம்பரியமாக கிணறு தோண்டுபவர்களின் வாழ்வாதாரமும் மேம்படுகிறது,” என்றார்.
விஷ்வநாத் கர்நாடகா முழுவதும் உள்ள வீடுகள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு பல்வேறு மேற்கூரை மழைநீர் சேகரிப்பு அமைப்புகளை வடிவமைத்துள்ளார். அத்துடன் 1995-ம் ஆண்டு முதல் ரெயின்வாட்டர் க்ளப்பின் உறுப்பினராக உள்ளார்.நீர் பாதுகாப்பு குறித்து அவர் கூறும்போது,
“மேற்கூரை பகுதியின் ஒவ்வொரு சதுர மீட்டருக்கும் ரீசார்ஜ் செய்யப்படுவதற்காக 20 லிட்டர் சேமிப்பை உருவாக்கவேண்டும். அதேபோல் நடைபாதை பகுதியின் ஒவ்வொரு சதுர மீட்டருக்கும் ரீசார்ஜ் செய்யப்படுவதற்காக 10 லிட்டர் சேமிப்பை உருவாக்கவேண்டும். ரீசார்ஜ் கிணறு குறைந்தபட்சம் 10 அடி இருக்கவேண்டும்,” என்றார்.
இதே போல் மழைநீரை தூய்மையாக்க இவர் ’வருண்’ (VARUN) என்கிற வடிகட்டியை உருவாக்கியுள்ளார். விஷ்வநாத் பெங்களூருவின் கப்பன் பார்க்கில் உள்ள சில பழைய கிணறுகளை மீட்டெடுத்துள்ளார். இது குறித்து அவர் கூறும்போது,
”நாங்கள் ஏழு கிணறுகளைக் கண்டறிந்து பாரம்பரியமாக கிணறு தோண்டுபவர்களின் உதவியுடன் அவற்றை மீட்டெடுத்தோம். இந்தக் கிணறுகள் பூங்காவிற்கு தினமும் 65,000 முதல் 1,00,000 லிட்டர் தண்ணீரைக் கொடுக்கக்கூடியது. கிணறுகளை மீட்டெடுக்கும் பணிகளை பொதுமக்களின் உதவியுடன் மேற்கொண்டோம். ’இண்டியா கேர்ஸ் ஃபவுண்டேஷன்’ இதற்கான நிதியை ’ஃப்ரெண்ட்ஸ் ஆஃப் லேக்ஸ்’ என்கிற குழுவுடன் இணைந்து திரட்டியது,” என்று தெரிவித்ததாக Straits Times குறிப்பிட்டுள்ளது.
கடுமையான நீர் நெருக்கடியில் இருக்கும் பெங்களூரு நீர் பாதுகாப்பு தொடர்பான முயற்சிகளை உடனடியாக மேற்கொள்ளவேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
”தற்போது நீர் நெருக்கடி நிலவும் நிலையில் நீர் நிலைகளை புதுப்பிப்பதும் நீர் குறைவாகத் தேவைப்படும் பயிர்களை வளர்ப்பதும் கழிவு நீரை மறுசுழற்சிக்கு உட்படுத்துவதும் எதிர்காலத்தில் இந்த நிலை மேலும் தீவிரமாவதைத் தடுக்க உதவும்,” என்று டாக்டர் விஷ்வநாத் ‘தி லாஜிக்கல் இண்டியன்’ உடனான உரையாடலில் தெரிவித்தார்.
கட்டுரை: THINK CHANGE INDIA