அதானி, அம்பானி வரிசையில் தமானி - ஆயிரக்கணக்கான கோடிகளை இழந்த D-Mart உரிமையாளர்!
உலக பணக்காரர்கள் பட்டியலில் டாப் 10 இடத்தில் இருந்த முகேஷ் அம்பானியும், கெளதம் அதானியும் சொத்து மதிப்பு குறைந்து பின்தங்கிய நிலையில், தற்போது அந்த பட்டியலில் டி-மார்ட் உரிமையாளரான ராதாகிஷன் தமானியும் இணைந்துள்ளார்.
உலகப் பணக்காரர்கள் பட்டியலில் டாப் 10 இடத்தில் இருந்த முகேஷ் அம்பானியும், கெளதம் அதானியும் சொத்து மதிப்பு குறைந்து பின்தங்கிய நிலையில், தற்போது அந்த பட்டியலில் டி-மார்ட் உரிமையாளரான ராதாகிஷன் தமானியும் இணைந்துள்ளார்.
ஹிண்டன்பர்க் வெளியிட்ட அறிக்கையால் அதானி குழுமத்தைச் சேர்ந்த நிறுவனங்களின் பங்குகள் கடும் சரிவை சந்தித்து வருகின்றன. இந்திய பங்குச்சந்தையில் ஏற்பட்ட தாக்கம் காரணமாக முகேஷ் அம்பானியின் நிறுவனமும் பின்னடைவை சந்தித்து வருகிறது. தற்போது பிரபல வணிக நிறுவனமான டி-மார்ட் உரிமையாளர் ராதாகிஷன் தமானி கோடிக்கணக்கான சொத்துக்களை இழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சொத்துக்களை இழந்த பில்லியனர்கள்:
ஃபோர்ப்ஸ் ரியல் டைம் பில்லியனர்கள் பட்டியலில் தமானி தற்போது $15.6 பில்லியன் டாலர்கள் சொத்து மதிப்புடன் 106வது இடம் பிடித்துள்ளார். ப்ளூம்பெர்க்கின் பில்லியனர்கள் பட்டியலின் படி, 98வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். நடப்பு ஆண்டு நிலவரப்படி தனிப்பட்ட முறையில் 2.61 பில்லியன் சொத்துக்களை இழந்துள்ள ராதாகிஷன் தமானி, இந்தியாவில் செல்வத்தை கோடீஸ்வரர்களில் அதானி, அம்பானிக்கு அடுத்தபடியாக மூன்றாவது இடம் பிடித்துள்ளார்.
இந்திய அளவில் டி-மார்ட் நிறுவனத்திற்கு மக்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது. வர்த்தக ரீதியில் நல்ல லாபகரமாக டி-மார்ட் நிறுவனம் செயல்பட்டு வருவதாகக் கூறப்படும் நிலையில், அதன் கோடீஸ்வர உரிமையாளர் ராதாகிஷன் தமானி ஆயிரக்கணக்கான கோடிகளை இழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ப்ளூம்பெர்க் அறிக்கையின் படி,
41.5 பில்லியன் டாலர்கள் சொத்து மதிப்புடன் கெளதம் அதானி 29வது இடத்திலும், 81.2 பில்லியன் டாலர்கள் சொத்து மதிப்புடன் முகேஷ் அம்பானி 11வது இடத்திலும் உள்ளனர். நடப்பு ஆண்டின் படி, 70 பில்லியன் டாலர்களை இழந்து அதானி குழுமத்தின் தலைவர் கௌதம் அதானி முதலிடத்திலும், 5 பில்லியன் டாலர்களை இழந்து ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி இரண்டாவது இடத்திலும் உள்ளார்.
ராதாகிஷன் தமானியின் சொத்து மதிப்பு:
உலக அளவில் பிரபலமான வால்மார்ட்டை போல், இந்தியாவில் டி-மார்ட் மூலமாக ஹைப்பர் மார்க்கெட்டை வணிகத்தை தொடங்கியவர் ராதாகிஷன் தமானி. ராதாகிஷன் அவென்யூ சூப்பர்மார்ட்ஸ் லிமிடெட் நிறுவனம் மூலமாக, 2002ல் மும்பையின் போவாயில் முதல் டி-மார்ட்டை திறந்தார். இப்போது நாடு முழுவதும் 300க்கும் மேற்பட்ட கடைகளுடன், 10 ஆயிரத்திற்கும் அதிகமான நிரந்தர பணியாளர்கள் மற்றும் ஒப்பந்த பணியாளர்களைக் கொண்டு இயங்கி வருகிறது.
2017ம் ஆண்டு ஐபிஓவை அறிமுகப்படுத்தியதன் மூலமாக டி-மார்ட் இந்தியாவின் முன்னணி நிறுவனமாக உருவெடுத்தது. 2020ம் ஆண்டு ராதாகிஷன் தமானி இந்திய கோடீஸ்வரர்கள் பட்டியலில் 4வது இடம் பிடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
ப்ளூம்பெர்க் குறியீட்டின்படி ராதாகிஷன் தமானியின் சொத்து மட்டும் $2.61 பில்லியன் டாலர்கள், அதாவது, 13 சதவீதம் வரை சரிந்துள்ளது. இந்திய ரூபாயில் இதன் மதிப்பு 21 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேலாகும்.
ராதாகிஷனின் இளைய சகோதரர் கோபிகிஷன் தமானியின் சொத்து மதிப்பு 5 மில்லியன் டாலர்கள் அளவிற்கு சரிந்துள்ளது. 6.1 பில்லியன் டாலர் சொத்துக்களுடன் ஃபோர்ப்ஸ் பணக்காரர்கள் பட்டியலில் 412வது இடத்தில் உள்ளார். ப்ளூம்பெர்க்கின் குறியீட்டில் அவர் இடம்பெறவில்லை.
பங்குச்சந்தை முதலீடுகள் மூலமாக கோடிகளில் லாபம் ஈட்டி, டி-மார்ட் என்ற மிகப்பெரிய சாம்ராஜ்யத்தை கட்டமைத்த ராதாகிஷன் தமானி இந்த ஆண்டு அதிக சொத்துக்களை இழந்த கோடீஸ்வரர்கள் பட்டியலில் 3வது இடம் பிடித்துள்ளது முதலீட்டாளர்களுக்கு பேரதிர்ச்சியாக அமைந்துள்ளது.
தொகுப்பு: கனிமொழி