ஏர்டெல் Wifi காலிங் சேவை: 10 லட்சம் பயனர்கள் பயன்பாடு!
கடந்த மாதம், வைஃபை மூலம் காலிங் அழைப்பு வசதியை அறிமுகம் செய்த ஏர்டெல், இந்த வசதியை ஒரு மில்லியன் பேருக்கு மேல் பயன்படுத்துவதாக தெரிவித்துள்ளது.
முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான பார்தி ஏர்டெல் நாடு முழுவதும் உள்ள தனது மொபைல் சேவை வாடிக்கையாளர்கள் இப்போது எந்த ஒரு வை-ஃபை வலைப்பின்னல் மூலமும் தனது வை-ஃபை அழைப்பு வசதியை பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளது.
கடந்த மாதம் வை-ஃபை வாய்ஸ் ஓவர் சேவையை அறிமுகம் செய்த ஏர்டெல், இதன் பயனாளிகள் எண்ணிக்கை ஒரு மில்லியனுக்கும் மேல் அதிகரித்திருப்பதாக தெரிவித்துள்ளது.
இந்த சேவை, வாடிக்கையாளர்கள் வீடு அல்லது அலுவகத்தில் இருக்கும் போது எல்.டி.இ.யில் இருந்து வை-ஃபை அடிப்படையிலான அழைப்பு வசதிக்கு மாறிக்கொள்ள வழி செய்து, உள் அழைப்புகள் தரத்தை மேம்படுத்துகிறது. ஏர்டெல் வை-ஃபை காலிங் மூலம் அழைப்புகளை செய்ய கூடுதல் கட்டணம் கிடையாது.
"வாடிக்கையாளர்களிடம் இருந்து வந்த நல்ல வரவேற்பை அடுத்து, நிறுவனம் இந்த சேவையை நாடு முழுவதும் அறிமுகம் செய்துள்ளது. இந்தியா முழுவதும் உள்ள ஏர்டெல் மொபைல் வாடிக்கையாளர்களுக்கு இப்போது, வை-ஃபை அழைப்பு வசதி கிடைக்கிறது,” என நிறுவனம் ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.
இந்த சேவையை வாடிக்கையாளர்கள் வீடு அல்லது பொது வை-ஃபை வசதி மூலம் பெறலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து ஸ்மார்ட்போன் மாதிரிகளிலும் இது செயல்படக்கூடிய வகையில் ஸ்மார்ட்போன் நிறுவனங்களுடன் பேசி வருவதாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.
தற்போது 16 பிராண்ட்களைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட போன் மாதிரிகளில் ஏர்டெல் வை-ஃபை வசதியை அணுகலாம்.
"இந்த தொழில்நுட்பம், ஏர்டெல் மொபைல் வாடிக்கையாளர்களுக்கு, உள்ளுக்குள் இருக்கும் போது, குறிப்பாக நகர்புறத்தின் நெரிசல் மிக்க பகுதிகளில், வலைப்பின்னல் தரத்தை மேம்படுத்தியுள்ளது. இந்த சேவையை நாடு முழுவதும் அறிமுகம் செய்துள்ள முதல் நிறுவனமாக ஏர்டெல் விளங்குகிறது. எங்கள் வாடிக்கையாளர்கள் எந்த வை-ஃபையிலும் இந்த வசதியை பயன்படுத்தலாம் என பார்தி ஏர்டெல் தொழில்நுட்ப அதிகாரி ரந்தீப் ஷெக்டன் கூறியுள்ளார்.
இந்த வார துவக்கத்தில் ரிலையன்ஸ் ஜியோ, வை-ஃபை மூலமான வாய்ஸ் மற்றும் வீடியோ அழைப்பு வசதியை அறிமுகம் செய்தது. ஜியோ வை-ஃபை, பயனாளிகள் வை-ஃபை மூலம் வீடியோ அழைப்புகளை மேற்கொள்ள வழி செய்வதாகவும் நிறுவனம் தெரிவித்தது.
தில்லி என்.சி.ஆர் பகுதியில் போட்டி நிறுவனமான ஏர்டெட் இதே போன்ற சேவையை அறிமுகம் செய்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியானது. ஜியோ வை ஃபை காலிங் சேவை விரைவில் நாடு தழுவிய அளவில் அறிமுகம் ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொலைத்தொடர்பு டாரிப் மறுசீரமைப்பு தொடர்பாக அரசுடன் ஆலோசனையைத் தொடர்ந்து வருவதாகவும், அனைத்து பங்குதாரர்களும் இதில் பங்கேற்க எதிர்பார்ப்பதாக ஜியோ தெரிவித்துள்ளது. வோடோபோன் ஐடியா மற்றும் ஏர்டெல் ஆகிய நிறுவனங்களும் மொபைல் கட்டணத்தை உயர்த்த இருப்பதாக அறிவித்திருந்தன.
செய்தி : பிடிஐ | தமிழில்: சைபர்சிம்மன்