‘கோவிட்-19 சமூக மாற்றத்திற்கான ஒரு வினையூக்கி' - நியூட்டனின் விதியை மேற்கோள்கட்டிய ஆனந்த் மஹேந்திரா!
ஆசியாவின் மிகப்பெரிய நிகழ்வுகளில் ஒன்றான பெங்களூரு தொழில்நுட்ப உச்சி மாநாடு 2020-ல் பேசிய ஆனந்த் மஹிந்திரா, சர் ஐசக் நியூட்டனின் முதல் இயக்க விதியை மேற்கோள் காட்டினார்.
"கோவிட்19 சமூக மற்றும் தொழில்நுட்ப மாற்றத்தை விரைவுப்படுத்தக்கூடிய வினையூக்கி," என்று மஹிந்த்ரா குழுமத் தலைவர் ஆனந்த் மஹிந்த்ரா தெரிவித்தார்.
தகவல் தொழில்நுட்பம், பயோடெக்னாலஜி மற்றும் எலக்ட்ரானிக்ஸ் ஆகியவற்றில் ஆசியாவின் மிகப்பெரிய நிகழ்வுகளில் ஒன்றான பெங்களூரு தொழில்நுட்ப உச்சி மாநாடு 2020 நடைபெற்றது. இதில் பேசிய ஆனந்த் மஹிந்திரா, சர் ஐசக் நியூட்டனின் முதல் இயக்க விதியை மேற்கோள் காட்டினார்.
"ஒரு பொருளின் மீது விசை ஏதும் செலுத்தாதிருந்தால், அப்பொருள் தான் இருந்த தன் அசையா நிலையிலோ அல்லது ஒரு நேர்க்கோட்டில், ஒரே சீரான விரைவோடு முன்பு சென்று கொண்டிருந்த அதே நிலையில்தான் தொடர்ந்து இருக்கும்," என்றார்.
கோவிட் 19 என்பது விசை, தொற்றுநோய்க்கு பிந்தைய காலகட்டத்தில் வாழ்வறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பின் வேகத்துக்கான தேவையை ஏற்படுத்தியுள்ளது.
"இது தகவல் தொழில்நுட்பம் மற்றும் உயிரி தொழில்நுட்பத்தின் ஒருங்கிணைக்கப்பட்ட தருணமாக இருக்கலாம். மேற்கண்ட துறைகளில் விரைவாக செயல்பட வேண்டியதன் அவசியத்தை இது உணர்த்துகிறது. மேலும், திறன்களை திரட்டுதல், அறிவை ஒன்றிணைத்தல் மற்றும் தொழில்நுட்பத்தை ஒருங்கிணைத்தல் ஆகியவற்றை ஊக்குவிக்கிறது," என்று அவர் கூறினார்.
’ஒருங்கிணைந்த பயோடெக் சுற்றுச்சூழல் அமைப்பை’ உருவாக்கவும், கொரோனா வைரசுக்கு பிந்தைய உலகில் புதுமைகளை மேம்படுத்துவதற்கான வழிகளையும் ஆனந்த் மஹிந்த்ரா மாநாட்டில் தெரிவித்தார்.
முன்னதாக கர்நாடகாவின் முதன்மை வருடாந்திர தொழில்நுட்ப நிகழ்வான பெங்களூரு தொழில்நுட்ப உச்சி மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி இன்று (நவ.19) வீடியோ கான்பரன்சிங் மூலம் தொடங்கி வைத்தார்.
தமிழில்: மலையரசு