மத்திய பட்ஜெட்டில் ஸ்டார்ட்-அப்களுக்கு வரிப் பயன்கள் இருக்கிறதா?
பாஜக அரசின் இடைக்கால பட்ஜெட்டில் ஸ்டார்ட் அப் மற்றும் பென்ஷன் நிதிகளுக்கு சில குறிப்பிட்ட வரிப் பலன்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
2024-25ம் நிதியாண்டிற்கான இடைக்கால பட்ஜெட் நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. தேர்தல் எதிர்வரும் நிலையில் முக்கிய அறிவிப்புகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஸ்டார்ட் அப்கள் மற்றும் பென்ஷன் நிதிகளுக்கு சில வரிப் பலன்களை முன்மொழிந்துள்ளார். 2016 ஜனவரி 16ல் ஸ்டார்ட் அப் இந்தியாவிற்கான திட்டம் வகுக்கப்பட்டது. நாட்டில் ஸ்டார்ட்அப்களை ஊக்குவிக்க அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது.
சுமார் 1.17 லட்சம் ஸ்டார்ட் அப்கள் இதுவரையில் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. ஸ்டார்ட் அப்களுக்கு வரி மற்றும் ஊக்கத்தொகைகளையும் மத்திய அரசு வழங்கி வருகிறது.
இந்தியப் பொருளாதாரம் உறுதியான நிலையான வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது. அண்மையில் நடந்த நிதி அமைச்சகத்தின் மாதாந்திர பொருளாதார ஆலோசனைக் கூட்டத்தில், அடுத்த மூன்று ஆண்டுகளில் இந்தியப் பொருளாதாரம் தற்போதுள்ள 3.7 ட்ரில்லியன் டாலரில் இருந்து 5 ட்ரில்லியன் டாலரை எட்டி உலகின் மூன்றாவது பெரிய நாடாக மாறும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆறு அல்லது ஏழு ஆண்டுகளில் இந்தியப் பொருளாதாரம் ஏழு ட்ரில்லியன் டாலர் பொருளாதாரத்தை அடைவற்கான இலக்கை கொண்டுள்ளது என்றும் நிதியமைச்சர் தெரிவித்தார்.
இடைக்கால பட்ஜெட்டில் வருமான வரி விலக்கு எதுவும் அறிவிக்கப்படவில்லை. இறக்குமதி வரிகள் உள்பட நேரடி மற்றும் மறைமுக வரிகளில் இப்போதுள்ள நிலையே நீடிக்கும். எனினும், ஸ்டார்ட் அப்களுக்கு குறிப்பிட்ட சில வரிச்சலுகைகள் வழங்கப்படுகிறது. இதே போன்று பென்ஷன் நிதிகளுக்கும் அறிவிக்கப்பட்டுள்ள சில குறிப்பிட்ட வரி விலக்குகள் 2025 31 மார்ச் வரை நீட்டிக்கப்படுகிறது.
நிலுவையில் உள்ள நேரடி வரிகள் கோரிக்கைகள்
வரி செலுத்துவோரின் சேவையை அதிகரிக்கும் விதத்தில் அவர்களின் வாழ்வாதாரத்தையும் தொழிலையும் முன்னேற்றுவதே அரசின் இலக்காகும். நேரடி வருமான வரியில் நிலுவையில் உள்ள சர்ச்சைக்குரிய வரிக் கோரிக்கைகளை வாபஸ் பெறப்படுகிறது. 2009-10 நிதியாண்டில் ரூ.25,000 வரையிலும் 2010-2011 நிதியாண்டில் ரூ.10,000 வரை நிலுவை வைத்துள்ளவர்கள் என 1 கோடி வரி செலுத்துவோர் இதன் மூலம் பயனடைவார்கள்.
வரிவசூலிப்பு அதிகரிப்பு
கடந்த 10 ஆண்டுகளாக வரி செலுத்தி வருவோருக்கு நன்றி. நேரடி வரி வசூலிப்பு மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. வரிசெலுத்துவோருக்கு சிரமமின்றி வரிவிகிதங்களை அரசு குறைத்துள்ளது. சிறு தொழில்முனைவோர்கள், ஊதியதாரர்களுக்கு சரியான விகிதத்தில் வரி விகிதம் விதிக்கப்ப்டடுளளது. கடந்த 5ஆண்டுகளில் அரசின் கவனமானது வரி செலுத்துவருக்கான சேவையை அதிகரிப்பதாகவே இருந்தது. வருமான வரி தாக்கல் முறை எளிமையாக்கப்பட்டுள்ளது. வரி தாக்கல் விவரங்களை செயல்படுத்துவதற்கான அவகாசம் 14 நாட்கள் என்று இருந்தது இந்த ஆண்டு 10 நாட்களில் விரைவாக முடிக்கும் வகையில் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன என்றும் நிதியமைச்சர் தெரிவித்தார்.