'அதானிக்கு கடன் கொடுக்காதே’ - ஆஸ்திரேலிய கிரிக்கெட் கிரவுன்டில் கண்டனக் குரல் எழ என்ன காரணம்?
இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான முதல் ஒருநாள் போட்டியின்போது, `அதானிக்கு கடன் கொடுக்காதே’ என்ற பதாகையுடன் மைதானத்துக்குள் இருவர் நுழைந்தது ஏன் என்பது தெரியுமா?
இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான முதல் ஒருநாள் போட்டியின்போது, 'அதானிக்கு கடன் கொடுக்காதே’ என்ற பதாகையுடன் மைதானத்துக்குள் இருவர் நுழைந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. அவர்கள் அப்படி ஏன் இந்தியாவின் எஸ்பிஐ வங்கி மற்றும் அதானியை எதிர்த்து போராடினார்கள் என்பது தெரியுமா?
போராட்டங்கள் ஏன்?
கடந்த ஒருவாரத்துக்கு முன்பு ஆஸ்திரேலியாவில் மாணவர்கள் பள்ளிகளை புறக்கணித்து, வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தினர். அவர்களுடன் சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் கைகோர்த்தனர். இந்த போராட்டம் 2018-ம் ஆண்டு 30ம் தேதி நடைபெற்ற மாணவர்கள் போராட்டத்தை நினைவுபடுத்தியது.
2018 போராட்டத்தில் ஏறத்தாழ 15 ஆயிரம் மாணவர்கள் இதேபோல வீதிகளில் போராட்டம் நடத்தினர். இந்த இரண்டு போராட்டங்களுக்கு ஒரு ஒற்றுமையிருக்கிறது. அவர்கள் எதிர்த்து போராடியது ஒரேயொருவரைத்தான். அவர் தான் தொழிலதிபர் அதானி. பிரதமர் மோடி பிறந்த மண்ணைச் சேர்ந்தவர்.
ஏன் அதானியை எதிர்க்கிறார்கள்?!
ஆஸ்திரேலியா அரசின் உத்தரவுடன் அதானி ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து பகுதியில் நிலக்கரி சுரங்கம் தோண்ட இருக்கிறார். இதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டது முதல் ஆஸ்திரேலியாவில் அதானியை எதிர்த்து அவ்வப்போது போராட்டங்கள் நடந்து வருகிறது. இந்தப் போராட்டங்கள் தற்போது தீவிரமடைந்துள்ளன.
நிலக்கரி சுரங்கம் தோண்ட இருக்கும் அதானியின் கார்மைக்கேல் நிலக்கரி நிறுவனத்துக்கு இந்தியாவின் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா 1 பில்லியன் டாலர் கடனை கொடுக்க இருக்கிறது. இந்தத் தகவல்தான் இப்போது போராட்டங்கள் உச்சம் பெறுவதற்கான காரணம்.
ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா கடன் கொடுக்கக் கூடாது என்ற கோரிக்கையுடன் போராட்ட களத்தில் இறங்கியுள்ளனர் அந்நாட்டு மக்கள். இந்தப் போராட்டத்தின் ஒரு பகுதியாகத் தான் இந்தியா - ஆஸ்திரேலியா ஒரு நாள் போட்டியில் மைதானத்திலேயே இருவர் எதிர்ப்பு தெரிவித்தது.
முதலில் ஆஸ்திரேலிய மக்களின் வரிப்பணத்தின் மூலமும், ஆஸ்திரேலிய வங்கிகள் மூலமும் தன்னுடைய நிலக்கரி சுரங்கத்துக்கான தேவையான நிதியை திரட்ட முயற்சித்தது அதானி நிறுவனம். ஆனால் அதானி நிறுவனம் எதிர்பார்த்தபடி அப்படி எதுவும் நடக்கவில்லை.
ஆஸ்திரேலியாவின் முக்கிய வங்கிகளான காமன்வெல்த் பேங்க் ஆஃப் ஆஸ்திரேலியா (Commonwealth Bank of Australia), ஏ.என்.செட் (ANZ), வெஸ்ட்பாக் (Westpac) மற்றும் என்.ஏ.பி (NAB) என அனைத்தும் மக்களின் எதிர்ப்பு காரணமாக அதானி நிறுவனத்துக்கு கடன் கொடுக்க மறுத்தன.
இதையடுத்து உலக வங்கிகளை நம்பினார் அதானி. பார்கிலேஸ் (Barclays), ஜேபி மோர்கன் (JP Morgan), ஹெச்எஸ்பிசி (HSBC), பிஎன்பி பரிபாஸ் (BNP Paribas), சிட்டி பேங்க் (Citibank), ஆர்பிஎஸ் (RBS), மார்கன் ஸ்டான்லி (Morgan Stanley) இப்படி அவர் ஏறி இறங்கிய உலக நிறுவனங்களெல்லாம் கைவிரித்துவிட்டன.
இந்த அனைத்து நிறுவனங்களும் அதானியின் திட்டத்தை புறக்கணித்ததுக்கு மக்கள் எதிர்ப்பு, சுற்றுச்சூழல் பிரச்னை மட்டுமல்ல. மற்றொன்றும் இருக்கிறது. அது, இந்த திட்டத்தில் பொருளாதார சாத்தியக்கூறு இல்லை என்பதுதான்.
உலகின் பெரும் வங்கிகள், தனியார் நிதி நிறுவனங்கள் என 89 நிறுவனங்கள் புறக்கணித்த திட்டத்துக்குதான் எஸ்பிஐ வங்கி 1 பில்லியன் டாலர் கடன் கொடுக்க முன்வந்துள்ளது. இதனையொட்டிதான் எஸ்பிஐ வங்கிக்கு எதிராக ஆஸ்திரேலிய மக்கள் போராடி வருகின்றனர்.
உயிருக்கு அச்சம் ஏற்படுத்தும் இந்தக் கொரோனா காலகட்டத்திலும் உயிர்களை பற்றி கவலைப்படாமல், சுற்றுச்சூழல் நலனுக்காக வீதிகளில் இறங்கியுள்ளனர் ஆஸ்திரேலிய மக்கள்.
ஏற்கனவே மல்லையாவுக்கு கொடுத்த ஆயிரக்கணக்கான கோடிகளை வாங்க முடியாத ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, உலகின் 89 பெருநிதி நிறுவனங்கள் புறக்கணித்த ஒரு திட்டத்துக்கு, எஸ்பிஐ 1 பில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் 6,200 கோடி) வரை கடன் கொடுப்பது ஏன், என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
தகவல் உதவி - Business insider | தொகுப்பு: மலையரசு