பிரசவ வலியால் துடித்த பெண்ணுக்கு பிரசவம் பார்த்த ஆட்டோ ஓட்டுநர்!
கோவையைச் சேர்ந்த ஆட்டோ சந்திரகுமார் வலியால் துடித்த பெண்ணுக்கு சரியான நேரத்தில் பிரசவம் பார்த்து இரு உயிர்களையும் காப்பாற்றினார்.
உதவி என்பது பல்வேறு வடிவங்களில் அளிக்கப்படும், அல்லது பெறப்படுகிறது. மற்றவர்களுக்கு உதவ விரும்புபவர்களில் சிலர் பணம், பொருள் ஆகியவற்றைக் கொடுத்து உதவுவார்கள். மேலும் சிலர் தங்களது நேரத்தை செலவிட்டு தங்களால் இயன்ற தன்னார்வலப் பணிகளில் ஈடுபட்டு பிறருக்கு உதவுவார்கள். இன்னும் சிலர் ரத்த தானம், உறுப்பு தானம் என கொடுத்து உயிரைக் காப்பாற்றுவார்கள்.
அந்த வகையில் கோயமுத்தூரைச் சேர்ந்த சந்திரகுமார் என்ற பெரியவ்வர், பிரசவ வலியால் துடித்துக்கொண்டிருந்த ஒரு கர்ப்பிணிப் பெண்ணுக்கு சரியான நேரத்தில் உதவி செய்து இரண்டு உயிர்களைக் காப்பாற்றியுள்ளார்.
ஆட்டோ ஓட்டுநரான சந்திரகுமார் ‘லாக் அப்’ என்கிற பிரபல நாவலின் ஆசிரியர். இந்த நாவலைத் தழுவியே ‘விசாரணை’ என்கிற திரைப்படம் வெற்றிமாரனால் இயக்கப்பட்டது.
கோவையில் வசித்து வந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்களில் கர்ப்பிணிப் பெண் ஒருவர் இருந்துள்ளார். அவருக்கு திடீரென்று பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. அந்தப் பெண்ணை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல சந்திரகுமாரின் உதவியைப் பெற எண்ணினார் சந்திரகுமாரின் நண்பர் ஒருவர்.
ஆனால் அவர் சந்திரகுமாரின் வீட்டிற்குச் சென்றபோது அவர் நிவாரணப் பொருட்களை கொடுக்கச் சென்றிருப்பது அவரது மகள் ஜீவா மூலம் தெரியவந்தது. தகவலைத் தெரிவித்துவிட்டு அந்த நண்பர் சென்றுவிட்டார்.
பின்னர் ஜீவாவைத் தொடர்புகொண்ட சந்திரகுமார் தகவலறிந்து உடனடியாக அந்த இடத்திற்கு விரைந்தார். அவர் அங்கு சென்றபோது அனைவரும் ஆம்புலன்ஸ் வருவதற்காகக் காத்திருந்தனர். அந்த சமயத்தில் அந்தப் பெண்ணுக்கு ரத்தப்போக்கு அதிகமானது. வலியால் துடித்துள்ளார். சந்திரகுமார் முதலில் அந்தப் பெண்ணை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல நினைத்தார்.
ஆனால் ரத்தப்போக்கு அதிகமாவதையும் அந்தப் பெண் வலியால் அலறுவதையும் கண்ட அவர், நிலைமையைப் புரிந்துகொண்டு உடனே செயல்படத் தீர்மானித்தார். பலரும் அந்தப் பெண்ணைச் சுற்றியிருக்க சற்று நேரத்தில் குழந்தை வெளியே வரத் தொடங்கியது. சந்திரகுமார் மெல்ல குழந்தையை வெளியில் எடுத்தார்.
ஒரு சில நிமிடங்களிலேயே ஆம்புலன்ஸ் வந்தது. மருத்துவர்கள் வந்து தொப்புள்கொடியைத் துண்டித்தனர். பின்னர் அவர்கள் பத்திரமாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். சந்திரகாந்த் துரிதமாக செயல்பட்டதால் தாயையும் குழந்தையையும் காப்பாற்ற முடிந்தது.
இந்த சம்பவத்தை நேரில் பார்த்த சந்திரகுமாரின் மகள் ஜீவா இதுகுறித்து தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்துகொண்டுள்ளார்.
“நான் சிறு வயது முதலே என் அப்பா மூலம் பல்வேறு புதிய அனுபவங்களையும் படிப்பினைகளையும் கற்றுள்ளேன். இந்தச் சம்பவம் முற்றிலும் மாறுபட்ட ஒரு அனுபவத்தை எனக்குக் கொடுத்துள்ளது,” என்று தனது பதிவில் ஜீவா குறிப்பிட்டுள்ளார்.
தகவல் உதவி: ஃபேஸ்புக்