தந்தையின் வர்த்தகத்தை டிஜிட்டல் பாதையில் வளர்த்தெடுக்கும் பாலிவுட் நடிகர்!
நடிகரான ஹைபில் மேத்யூ, நடிப்பில் இருந்து விலகி தந்தையின் வர்த்தகத்தை டிஜிட்டல்மயமாக்கல் மூலம் புதிய திசையில் கொண்டு செல்கிறார்.
ஹைபில் மேத்யூ, 2013ல் வெளியான சிக்ஸ்டீன் திரைப்படம் மூலம் பாலிவுட்டில் தொடர்ந்து வாய்ப்புகளை பெற்றாலும், 2018ல் அவரது தந்தையின் உடல்நிலை மோசமானதை தொடர்ந்து நடிப்புத்துறையில் இருந்து விலகினார்.
ஹைபில் மேத்யூ தந்தை டாக்டர்.மேத்யூ பூச்சி கட்டுப்பாடு சேவையை வழங்கும் மார்கோ பெஸ்ட் கண்ட்ரோல் ஆப்பரேஷன்ஸ் நிறுவனத்தை 1977ம் ஆண்டு முதல் நடத்தி வந்தார்.
புற்றுநோயுடன் போராடிய இறுதி காலத்தில் கூட, 2020ல் கோவிட்-19 சானிடைசருக்கான கெமிக்கல் பார்முலாவை உருவாகியிருந்தார்.
பி.எச்.டி பெற்றவரான மேத்யூ, விஜய் ரத்னா விருது, மில்லினியம் விருது உள்ளிட்ட விருதுகளை பெற்றிருக்கிறார். இந்த ஆண்டு மே மாதம் அவர் காலமானார். அதன் பின், தனது தந்தையின் பாதையை பின்பற்றி வர்த்தகத்தில் ஈடுபட்டு வருவது குறித்து, ஹைபில் மேத்யூ எஸ்.எம்.பிஸ்டோரியிடம் பேசினார். வர்த்தகத்தை நவீனமயமாக்கும் தேவை பற்றியும் அவர் கருத்துகளை பகிர்ந்து கொண்டார்.
வர்த்தகம்
கொசுக்கள், கரப்பான், மூட்டைப்பூச்சி மற்றும் எலிகள் ஆகியவற்றை கட்டுப்படுத்துவதற்கான பூச்சி கட்டுப்பாடு நிர்வாகத்தை அளிப்பதற்காக மார்கோ பெஸ்ட் கண்ட்ரோல் நிறுவனம் துவக்கப்பட்டது.
தந்தை தனி நபராக இந்தத் தொழிலை துவக்க, ஹோண்டா நிறுவனம், முத்தூட் பைனான்ஸ், தில்லி நீதிமன்றம் உள்ளிட்ட வாடிக்கையாளர்களை பெறும் அவளவுக்கு வளர்ந்ததாக ஜைபில் கூறுகிறார்.
“பூச்சி கட்டுப்பாடு மற்றும் ஆலை நிர்வாகத்தில் உலகத்தரத்தை பின்பற்றுகிறோம். அனைத்து ரசாயணங்களும் ஜெர்மனியில் இருந்து தருவிக்கப்படுகின்றன. சிறப்பான சேவையில் கவனம் செலுத்தி கடந்த 30 ஆண்டுகளில் பல வாடிக்கையாளர் நிறுவனங்களை பெற்றிருக்கிறோம்” என்கிறார்.
நிறுவனத்தின் வருவாய் தகவல்களை பகிர்ந்து கொள்ள மறுத்தாலும் ஹைபில், நிறுவனம் பி2பி மாதிரியை பின்பற்றுவதாகவும், 50 ஊழியர்களைக் கொண்டிருப்பதாகவும் தெரிவிக்கிறார்.
நிறுவனம் அரசுத் திட்டங்களையும் எடுத்து நடத்துகிறது. பொதுமுடக்கத்தின் போது உயர்நீதிமன்ற வளாகத்தை சானிடைஸ் செய்யும் பொறுப்பை ஏற்றது.
சந்தை
மார்கோ நிறுவனம் பாரம்பரிய வழிகளில் செயல்பட்டு வந்தது, டிஜிட்டல் மாற்றத்தை எதிர்கொள்ளவில்லை.
“என் தந்தை பாரம்பரிய வழிமுறைகளைப் பின்பற்றினார். அதில் வெற்றியும் கண்டார். இப்போது பல தொழில்கள் கட்டிட மாதிரியை விட்டு வெளியேறுகின்றன. ஆனால், எங்களைப்போன்ற பழைய பாணி வர்த்தகத்திற்கு ஒரு முகமதிப்பு இருக்கிறது. அதைத் தான் முன்னெடுத்துச் செல்ல இருக்கிறேன்,” என்கிறார் ஹைபில்.
2020ல் இந்திய பூச்சி கட்டுப்பாடு துறை ரூ.232 பில்லியன் மதிப்பு பெற்றிருந்தது. அடுத்த ஐந்தாண்டுகளில் இந்தத் துறை மிதமான வளர்ச்சி காணும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் வர்த்தகத்தை மேம்படுத்த தொழில்நுட்பத்தை அதிகம் பயன்படுத்திக்கொள்ள ஹைபில் திட்டமிட்டுள்ளார்.
“என் தந்தை பணியை வழிபட்டார். ஒரு முறை தான் ஓய்வு பெறுவேன் என கூறிக்கொண்டிருந்தார். அதற்கு உண்மையாகவும் இருந்தார். கடைசி மூச்சு நிற்கும் போது தான் ஓய்வு பெற்றார். இந்த வர்த்தகம் புதிய உயரத்தை அடைய அவரது ஐடியாக்களை செயல்படுத்தி வருகிறேன்,” என்கிறார் ஹைபில்.
சவால்கள்
பூச்சி கட்டுப்பாடு துறை டிஜிட்டலுக்கு மாறுவதில் வேகம் காட்டவில்லை. ஆனால் வாடிக்கையாளர்களை அடைய தொழில்நுட்பத்தை நாடுவதாக ஹைபில் கூறுகிறார்.
பொதுமுடக்கத்தின் போது சில மாதங்களுக்கு நிறுவனம் சவாலான சூழலை எதிர்கொண்டது. அலுவலங்கள் மூடப்பட்ட நிலையில் நிறுவனம் செயல்படுவது கடினமாக இருந்தது, எனினும், வர்த்தக நிறுவனங்கள் பூச்சி கட்டுப்பாடு சேவையை நாடிய போது தேவை அதிகரித்தது. சானிடைஸ் செய்யும் வாய்ப்பும் கிடைத்தது.
பி2பி பரப்பில் செயல்பட்டு வந்த நிறுவனம் தற்போது டிஜிட்டல் பாதையை நாடி வருகிறது. வாடிக்கையாளர்கள் வீட்டில் இருந்தே பூச்சி கட்டுப்பாடு சேவையை பெரும் வகையிலான செயலியை உருவாக்கவும் திட்டமிட்டுள்ளது. மருத்துவ நுகர்வுத் துறையில் நுழைய திட்டமிட்டிருப்பதோடு, ஹான்ட் சானிடைசரையும் அறிமுகம் செய்ய உள்ளது.
ஆங்கிலத்தில்: பலக் அகர்வால் | தமிழில்: சைபர் சிம்மன்