நிதி நெருக்கடியை சமாளிக்க அலுவலகங்களை காலி செய்யும் Byju's!
பைஜூஸ் நிறுவனம், நாடு முழுவதும் உள்ள அலுவகல கட்டிடங்களுக்கு மாதம் ரூ.10 கோடி வரை வாடகை செலுத்தி வந்தது. இப்போது இவற்றில் இருந்து வெளியேற தீர்மானிக்கப்பட்டு ஊழியர்கள் வீட்டில் இருந்து பணியாற்ற கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
கல்வி நுட்ப நிறுவனமான பைஜூஸ் பெங்களூருவில் உள்ள தலைமையகம் தவிர, நாடு முழுவதும் உள்ள அனைத்து அலுவலக இடங்களையும் காலி செய்ய தீர்மானித்துள்ளது. நிதி நெருக்கடியில், தவிப்பதால், செலவுகளை குறைப்பதில் கவனம் செலுத்தி வரும் நிறுவனம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
இந்த நடவடிக்கையை அடுத்து, நிறுவனம் தனது 20 ஆயிரம் ஊழியர்களை வீட்டில் இருந்து பணியாற்றுமாறு கூறியுள்ளதாக, நிறுவனத்திற்கு நெருக்கமானவர்கள் Captable-இடம் தெரிவித்தனர். நிறுவனத்தின் தலமையகமாக விளங்கும் பெங்களூருவில் உள்ள ஐபிசி நாலட்ஜ் பார்க் தவிர, நாடு முழுவதும் உள்ள மற்ற அலுவலக இடங்களையும் விட்டு தற்காலிகமாக வெளியேற நிறுவனம் தீர்மானித்துள்ளதாக இந்த நடவடிக்கை பற்றி அறிந்தவர்கள் தெரிவித்தனர். வாடகை மூலம் கோடிகளை மிச்சமாக்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
பைஜூஸ் தற்போது, தில்லி மற்றும் பெங்களூரு உள்ளிட்ட முக்கிய நகரங்களில் 100க்கும் மேற்பட்ட அலுவலகங்களைக் கொண்டுள்ளது. கடந்த ஆண்டு ஜூலை மாதம் பெங்களூருவில் உள்ள கல்யாணி டெக் பார்க்கில் இருந்து நிறுவனம் தனது அலுவலகத்தை காலி செய்த போது, மூன்று லட்சம் சதுர அடிக்கே மேலான இடத்தை வாடகை அலுவலகமாக கொண்டிருந்ததாக தகவல் வெளியானது.
கடந்த மாதம் பைஜூஸ், கட்டிட உரிமையாளர்களால் நோட்டீஸ் அனுப்பபட்டதை அடுத்து மேலும் வாடகை இடங்களை குறைத்தாக எக்கனாமிக் டைம்ஸ் செய்தி வெளியிட்டிருந்தது.
2022ம் ஆண்டுக்கான நிறுவன நிதி நிலை முடிவுகளில் வாடகை செலவு மாதம் ரூ.10 கோடி அளவில் குறிப்பிடப்பட்டிருந்தது. எனினும், இந்த தொகை அலுவலக இடம் மட்டும் அல்லாமல், டேப்லெட் போன்ற கல்வி சாதனங்களை இருப்பு வைப்பதற்கான இடத்தையும் உள்ளடக்கியது.
மேலும், கோவிட் கட்டுப்பாடு தளர்த்தப்பட்ட பிறகு, பைஜூஸ் மேலே குறிப்பிடப்பட்ட கல்யாணி டெக்பார்க் உள்ளிட்ட அலுவலகங்களை துவக்கியது.
தற்போது அலுவலக இடங்களில் இருந்து வெளியேறும் முடிவு நிறுவனத்தின் சிக்கலான நிதி நிலையை உணர்த்துகிறது. ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதம் நிறுவனம் ஊழியர்களுக்கு ஊதியத்தை தாமதம் செய்ததாகவும் கூறப்படுகிறது.
ஊதியம் வழங்கல்
இதனிடையே, பைஜூஸ் பிராண்டை கொண்டுள்ள திங்க் அண்ட் லேர்ன், 25 சதவீத ஊழியர்களுக்கு முழு ஊதியத்தை அளித்துள்ளதாகவும், மற்றவர்களுக்கு பகுதி ஊதியம் வழங்கியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நிறுவனம் ஞாயிறு அன்று ஊதிய நிலை குறித்து ஊழியர்களுக்கு இரண்டு கடிதம் எழுதியது. அதில், மாற்று வழிகள் மூலம் நிதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது பற்றியும், முதலீட்டாளர்கள் நெருக்கடியால் ஏற்பட்டுள்ள நிதி சிக்கல் பற்றியும் குறிப்பிட்டுள்ளது.
”உங்கள் பிப்ரவரி மாத ஊதியத்தை வெள்ளிக்கிழமை அளித்துள்ளோம். எனினும் வார இறுதி விடுமுறை காரணமாக திங்கள் அன்று இது வங்கி கணக்கில் பதிவாகும்,” என்று நிறுவனம் முழு ஊதியம் பெறும் ஊழியர்களுக்கு தெரிவித்துள்ளது. 25 சதவீத ஊழியர்களுக்கு முழு ஊதியம் கிடைத்துள்ளதாகத் தெரிகிறது.
உரிம பங்குகள் மூலம் திரட்டப்பட்ட நிதியை முதலீட்டாளர்களில் இரு பிரிவினர் முடக்கியுள்ளதை நீங்கள் அறிந்திருக்கலாம். இது உடனடி நிதி நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சூழலை சீராக்க முயன்று வருகிறோம், என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது.
பைஜூசின் நான்கு முதலீட்டாளர்கள், தேசிய கம்பெனி சட்ட தீர்ப்பாயத்திடம், நிர்வாக முறைகேடு தொடர்பான மனு தாக்கல் செய்துள்ளனர். நிறுவனர் பைஜூ ரவீந்திரன் உள்ளிட்டோரை வெளியேற்றும் வகையில் இந்த வழக்கு தொடர்ந்துள்ளனர். மேலும், உரிம வெளியீட்டையும் செயலிழக்க வைக்க கோரியுள்ளனர்.
புரோசஸ், ஜெனரல் அட்லாண்டிக், சோபினார், பீக்XV உள்ளிட்ட முதலீட்டாளர்கள் டைகர் மற்றும் அவுள் வென்சர்ஸ் உள்ளிட்ட பங்குதாரர்கள் ஆதரவுடன் இந்த வழக்கை தொடர்ந்துள்ளனர். 200 மில்லியன் டாலர் உரிம வெளியீட்டின் முடிவு தேதியை தள்ளி வைக்குமாறு தீர்ப்பாயம் நிறுவனத்திடம் தெரிவித்தது. முதலீட்டாளர்கள் முட்டுக்கட்டையால் இது சாத்தியம் இல்லை என நிறுவனம் தெரிவித்தது.
உரிம வெளியீடு மூலம் கிடைத்த தொகையை நிறுவனம் பயன்படுத்தாமல் தனி கணக்கில் வைத்திருக்க உத்தரவிட்ட தீர்ப்பாயம் ஏப்ரல் 4ம் தேதி வழக்கை தள்ளி வைத்துள்ளது. இதனிடையே, பைஜூஸ் ஊழியர்கள் ஊதியத்திற்காக மாற்று நிதி ஏற்பாடு செய்திருப்பதாக கூறியுள்ளது.
நிகில் பட்வர்த்தன் – பிடிஐ செய்தி
Edited by Induja Raghunathan