சென்னையில் மிகப் பெரிய விலங்குகள் காப்பகத்தை உருவாக்கி வரும் ஆர்வலர்!
சென்னையைச் சேர்ந்த பதினெட்டு வயது சாய் விக்னேஷ் சிறு வயது முதலே விலங்குகள் மீது அக்கறை காட்டி வருகிறார். கைவிடப்பட்ட விலங்குகளுக்கு மறுவாழ்வளிக்கும் வகையில் காப்பகத்தை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
கைவிடப்பட்ட நிலையில் இருக்கும் விலங்குகளைப் பார்த்து நாம் மனம் வருந்துவோம். ஆனால் ஒரு சிலர் மட்டுமே மனம் வருந்துவதுடன் நிறுத்திக்கொள்ளாமல் அவற்றிற்கு ஆதரவளிக்க முன்வருகின்றனர். சென்னையைச் சேர்ந்த பதினெட்டு வயது சாய் விக்னேஷ் சிறு வயது முதலே விலங்குகள் மீது அக்கறை காட்டி வருகிறார்.
இவர் இதுவரை நாய்கள், பூனைகள், பறவைகள், மாடுகள் என 300க்கும் அதிகமான விலங்குகளை மீட்டுள்ளார். இவர் தற்போது சென்னையில் நன்கொடையாகப் பெறப்பட்ட இரண்டு ஏக்கர் நிலப்பரப்பில் மிகப்பெரிய காப்பகத்தை உருவாக்கி வருகிறார்.
விலங்குகள் மீது அக்கறை காட்டும் இவர் விலங்குகளுக்கு எதிரான வன்முறை தொடர்பாக ஐந்து பொதுநல வழக்குகளை பதிவு செய்துள்ளார்.
சிறு வயது முதலே விலங்குகளுக்கு உதவி வரும் விக்னேஷ் 2015-ம் ஆண்டு பெரியளவில் மீட்புப்பணிகளில் ஈடுபடத் துவங்கினார். 2017-ம் ஆண்டு தன்னார்வலர்களைக் கொண்டு முறையாக மீட்புப்பணியில் ஈடுபடும் ’ஆல்மைட்டி அனிமல் கேர் ட்ரஸ்ட்’ என்கிற நிறுவனத்தைத் தொடங்கினார்.
விக்னேஷ் கூறும்போது,
”விலங்குகளுக்கான இருப்பிடத்தை உருவாக்கவேண்டும் என்பதே எப்போதும் என்னுடைய கனவாக இருந்தது. ஆனால் அனுபவமின்றி திட்டத்தைத் தொடங்க நான் விரும்பவில்லை. ஓராண்டிற்கு இது தொடர்பான செயல்முறையை ஆராய்ந்து பல்வேறு மீட்புப்பணிகள் மூலம் அனுபவம் பெற்றேன்.
”தற்போது நாய்கள், பூனைகள், பண்ணை விலங்குகள், பறவைகள் என தனிப்பட்ட இருப்பிடங்களை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம். அத்துடன் தொற்றுநோய் பாதித்துள்ள விலங்குகளுக்கென பிரத்தேயக பகுதியை அமைத்து வருகிறோம். மேலும் மருந்துகளை இலவசமாக சேமித்து வைக்கும் மருந்தகத்தையும் உருவாக்க உள்ளோம்,” என்றார்.
மாணவராகவும் ஆர்வலராகவும் பரபரப்பாக செயல்படுவது குறித்து விக்னேஷ் விவரிக்கையில், ”நான் தினமும் காலை ஆறு மணிக்கு கண்விழித்து அடுத்த மூன்று மணி நேரத்திற்கு வீட்டைச் சுத்தப்படுத்துவதில் என் அம்மாவிற்கு உதவுவேன். மற்ற நேரங்களில் விலங்குகளை சிகிச்சைக்காக கால்நடை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வேன். அவசரமாக மீட்பதற்காக ஏதேனும் அழைப்பு வந்தால் உடனே மற்ற பணிகளை ரத்து செய்துவிட்டு விலங்குகளுக்கு உதவச் சென்று விடுவேன்,” என்றார்.
இதனிடையில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை படிக்கிறார். அத்துடன் பகுதி நேரமாக வெப்சைட் டெவலப்பராக பணியாற்றுகிறார். விலங்குகளுக்கு நாம் அனைவரும் உதவலாம் என தெரிவிக்கும் விக்னேஷ்,
“நீங்கள் விலங்குகளுக்கு உணவளிக்கலாம். வீட்டின் வெளியே ஒரு பாத்திரத்தில் தண்ணீர் வைக்கலாம். மழையோ வெயிலோ அதிகமாக இருக்கும் சமயத்தில் விலங்குகளுக்கு இருப்பிடத்தை வழங்கலாம். இவ்வாறு விலங்குகளுக்கு தங்களால் இயன்ற வகையில் உதவலாம்,” என்றார்.
விலங்குகளிடம் அன்பு காட்டுவது குறித்து விக்னேஷ் கூறும்போது,
”இரக்கக் குணத்துடன் இருப்பது தவறல்ல. நாம் மனிதர்களாக இருப்பதால் உயர்ந்த பிரிவினர் என்று நினைக்கக்கூடாது. மற்ற உயிர்களுக்கு உதவ வேண்டிய கடமை நமக்கு உள்ளது,” என்றார்.
விலங்குகள் மோசமாக நடத்தப்படுவதாகவும் அவற்றை துன்புறுத்துபவர்கள் முறையாக தண்டிக்கப்படுவதில்லை என்றும் விலங்குகள் வதை தடுப்புச் சட்டம் வலுப்படுத்தப்படவேண்டும் என்றும் விக்னேஷ் கருதுகிறார்.
”விலங்குகள் குறித்த மக்களின் கண்ணோட்டத்தை மாற்றவேண்டும். விலங்குகளின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தவேண்டும். விலங்குகளின் உரிமைகள் தொடர்பான சட்டங்களை வலுப்படுத்தவேண்டும். இதுவே எனது நோக்கம்,” என்கிறார் விக்னேஷ்.