1 ஆண்டு வருவாயை; 20 நாள் லாக்டவுனில் ஈட்டிய நிறுவனம்!
லாக்டவுனில் ஊழியர்கள் Work from home செய்யத் தொடங்கியதால் 10 மடங்கு சேல்ஸ் மற்றும் வருவாயை பெற்றது இந்த சென்னை ஃபர்னிச்சர் நிறுவனம்!
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலானது ஊழியர்கள் புதிய முறையில் புதிய சூழலில் பணிபுரியும் கலாச்சாரத்தை உருவாக்கியது. தொலைதூரத்தில் இருந்தும் சிறப்பாக இயங்குவதற்கான சாத்தியக்கூறுகளை தொழில்நுட்பம் ஏற்படுத்தியுள்ளது. ஆனால் அதிக நேரம் தவறான நிலையில், சரியான நாற்காலியில் உட்காராமல் பணிபுரிவதால் முதுகுவலி உள்ளிட்ட மோசமான உடல்நிலைக் கோளாறுகள் ஏற்படலாம்.
சென்னையைச் சேர்ந்த ஃபர்னிச்சர் மேஜிக் (Furniture Magik) என்ற நிறுவனம் ஃபர்னிச்சர் பிரிவில் செயல்படும் இந்தியாவின் ஒரே ஹைப்பர் லோக்கல் மின் வணிக தளமாகும்.
வாடிக்கையாளர்கள் தங்களுக்குத் தேவைப்படும் ஃபர்னிச்சர்களை வலைதளத்தின் மூலம் ஆர்டர் செய்து வீடு அல்லது அலுவலகத்தில் நேரடியாக பெற்றுக் கொள்ளலாம். இதனால் விநியோகச் சங்கிலி தொடர்புடைய செலவுகள் குறைகிறது. பொருட்களை வாடிக்கையாளர்களிடம் கொண்டு செல்லும்போது வழியில் பொருட்களுக்கு ஏற்படும் சேதங்களும் தவிர்க்கப்படுகிறது. முக்கியமாக ஓரிரு நாட்களில் டெலிவர் செய்யப்படுகிறது.
2017-ம் ஆண்டு 'Furniture Magik', சத்யா பிரதீப் மற்றும் கோகுல் ரவிகுமார் ஆகியோரால் சென்னையில் நிறுவப்பட்டது. இந்த ஸ்டார்ட் அப் பி2சி வணிகம் மூலம் நிலையான வருவாய் ஈட்டி வருகிறது. Zolo ஸ்டார்ட் அப்பின் மிகப்பெரிய சப்ளையர் என்பதில் ஃபர்னிச்சர் மேஜிக் பெருமை கொள்கிறது.
கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கினால் நேரடியாக சில்லறை வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள கடைகள் அனைத்தும் மூடப்பட்டன. அமேசான், ஃப்ளிப்கார்ட் உள்ளிட்ட மின்வணிக நிறுவனங்களும் அத்தியாவசியமற்றப் பொருட்களை விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டிருந்தது.
ஃபர்னிச்சர் அத்தியாவசியமற்றப் பொருட்கள் என்கிற பிரிவில் வகைப்படுப்படுத்தப்பட்டது.
அதே சமயத்தில் பல நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை வீட்டிலிருந்து பணிபுரிய கேட்டுக் கொண்டனர். ஆனால் அந்த சூழலில் வீட்டில் வசதியாக உட்கார்ந்து பணிபுரிய அலுவலக நாற்காலி மற்றும் டெஸ்க் இல்லாமல் பலர் தவித்தனர்.
அதனால் சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டுள்ள ஃபர்னிச்சர் மேஜிக் நிறுவனத்தை தொடர்பு கொண்டு, சேர் மற்றும் டெஸ்க் வீட்டில் டெலிவர் செய்ய முடியுமா என்றும் பலர் விசாரிக்கத் தொடங்கியுள்ளனர்.
“பலர் சோபா, கட்டில் போன்ற இடங்களில் அதிக நேரம் உட்கார்ந்து பணிபுரிகின்றனர். இதனால் முதுகுவலி ஏற்படுவதாக கவலை தெரிவித்தனர். எனவே வீடுகளில் வசதியாக உட்கார்ந்து பணிபுரியும் சூழல் பலருக்குத் தேவைப்படுகிறது என்பதை உணர்ந்தோம்,” என்றார் ஃபர்னிச்சர் மேஜிக் நிறுவனர் மற்றும் சிஇஓ சத்யா பிரதீப்.
அவர் மேலும் கூறும்போது,
“முறையான அனுமதி பெற்று முதலில் ஒரே ஒரு ட்ரக் மூலம் நாற்காலிகளை வீட்டில் டெலிவர் செய்யத் தொடங்கினோம். விரைவிலேயே நாள் ஒன்றிற்கு 8-10 ட்ரக் மூலம் சேவையளிக்கும் அளவிற்கு தேவை அதிகரித்தது,” என்றார்.
ஃப்ரெஷ்வொர்க்ஸ், Relx-Elsevier, ஷெல், டிசிஎஸ், அக்சென்சர், சிடிஎஸ் என சென்னையில் உள்ள பல்வேறு நிறுவனங்களின் ஊழியர்கள் ஆர்டர் செய்யத் தொடங்கியுள்ளனர். இந்தத் தேவைகள் உடனடியாக பூர்த்திசெய்யப்பட்டது. ஃபர்னிச்சர் மேஜிக் தயாரிப்புகளைப் பயன்படுத்திய இந்த ஊழியர்கள் திருப்தியடைந்து மற்றவர்களுக்கும் பரிந்துரை செய்துள்ளனர். இவ்வாறு பரிந்துரைகள் மூலம் ஆர்டர் அதிகரிக்கத் தொடங்கியது.
விரைவாக டெலிவர் செய்யப்பட்டதாலும் பொருட்கள் மிகவும் வசதியாக இருந்ததாலும் அதிகளவில் ஃபர்னிச்சர்கள் விற்பனையானது. பல நிறுவனங்கள் தங்களது ஊழியர்கள் வீட்டிலிருந்து பணிபுரிவதற்குத் தேவையான ஃபர்னிச்சர் செலவுகளில் ஒரு பகுதி அல்லது மொத்தத் தொகையையும் வழங்குகிறது.
ஊழியர்கள் வீட்டிலிருந்து பணிபுரியவேண்டிய தற்போதைய சூழல் எதிர்பார்த்ததைவிட நீண்ட நாட்களுக்கு நீடிக்கலாம் என்பதை நிறுவனங்கள் நன்குணர்ந்துள்ளன. உதாரணத்திற்கு டிசிஎஸ் நிறுவனம் அதன் 80% ஊழியர்களை வீட்டிலிருந்து பணிபுரிய திட்டமிட்டுள்ளது.
நேரடி அனுபவம் பெறலாம்
சிலர் நேரடியாக பார்த்து தங்களுக்கு வசதியாக இருக்கும் நாற்காலியைத் தேர்வு செய்ய விரும்பினார்கள். ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில் வாடிக்கையாளர்கள் அவற்றைத் தொட்டுணர்ந்து நேரடி அனுபவம் பெற உதவும் வகையில் சென்னையில் முதல் ஃபர்னிச்சர் ஸ்டோர் துரைப்பாக்கத்தில் திறக்கப்பட்டுள்ளது.
மக்கள் இங்கு சென்று நாற்காலியில் உட்கார்ந்துப் பார்த்து தங்களுக்கு வசதியானதைத் தேர்வு செய்துகொள்ளலாம். பின்னர் ஆன்லைனில் ஆர்டர் செய்யலாம். முறையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு இங்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு முகக்கவசங்களுகும் சானிடைசரும் வழங்கப்படுகிறது.
நான்கு ஏக்கர் பரப்பளவு பசுமையான இடத்தில் இந்த ஸ்டோர் அமைக்கப்பட்டுள்ளது. இன்றைய சூழலில் இதுபோன்ற இடங்களின் மூலதன செலவுகளை சமாளிப்பது கடினமாக இருப்பதால் ஒப்பந்த அடிப்படையில் இங்கு ஸ்டோர் அமைக்கப்பட்டது.
கார்ப்பரேட் நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுகிறது
ஃபர்னிச்சர் மேஜிக் வலைதளத்தின் மூலம் விற்பனை செய்வதுடன் பேபால், லாஜிடெக், ஆஸ்ட்ரா ஜெனிகா போன்ற நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட்டு அவர்களது ஊழியர்கள் வீட்டிலிருந்து பணிபுரிவதற்கான வசதியை ஏற்படுத்திக் கொடுக்கிறது.
விரைவாக டெலிவர் செய்யும் எங்களது திறன், எம்.எஸ்.எம்.ஈ பதிவுகள் ஆகியவற்றைக் கண்டு நிறுவனங்கள் எங்களது செயல்பாடுகள் குறித்து அவர்களது ஊழியர்களுக்கு இ-மெயில் அனுப்புகின்றன. ஒருபுறம் பயனர்கள் மற்றவர்களுக்கு பரிந்துரை செய்தனர். மற்றொருபுறம், நிர்வாகத்தின் தரப்பில் பரிந்துரை செய்யப்பட்டது. இதனால் எங்கள் விற்பனை விரைவாக அதிகரித்தது, என்றார் சத்யா பிரதீப்.
கடந்த ஒரு ஆண்டில் எங்கள் நிறுவனம் செய்த ஃபர்னிச்சர் சேல்ஸ் அளவை இந்த லாக்டவுன் 20 நாட்களில் செய்தோம். கடந்த நிதியாண்டில் பெற்ற வருவாயைக் இந்த 20 நாட்களில் ஈட்டிவிட்டோம்,” என்றார் சத்யா.
சென்னையைத் தாண்டி மற்ற பகுதிகளுக்கும் டெலிவர் செய்யத் தொடங்கியுள்ளனர். வாடிக்கையாளர்களுக்கு நாற்காலி, டெஸ்க் ஆகியவற்றிற்கான DIY பேக்கேஜ் வழங்கப்படுகிறது. வெறும் இரண்டு நிமிடங்களில் நாற்காலியின் பாகங்களை ஒன்றிணைக்க முடிவதாகவும் டெஸ்க் ஒன்றிணைக்கும் பணி ஐந்து நிமிடங்களில் முடிந்துவிடுவதாகவும் வாடிக்கையாளர்கள் தெரிவிக்கின்றனர். இவற்றை ஒன்றிணைப்பதற்கான வழிகாட்டல்கள் வீடியோ வடிவில் அனுப்பப்பட்டது பலனளித்தது.
“ஒரு வகையில் கோவிட்-19 எங்கள் வளர்ச்சியை துரிதமாக்கியுள்ளது. குழு உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரிக்காமல் கூடுதலாக 10,000 ஆர்டர்களைப் பூர்த்தி செய்யும் அளவிற்கு தொழில்நுட்ப ரீதியாக வளர்ச்சியடைந்துள்ளோம். கொரோனா எங்கள் பயணத்தில் மிகப்பெரிய மாற்றத்தைக் கொண்டு சேர்த்துள்ளது. முதல் நிலை நகரங்களில் வீட்டில் இருந்து பணிபுரிவதற்கான ஃபர்னிச்சர் தேவை அதிகளவில் உள்ளது. அந்த நகரங்களில் செயல்பாடுகளைத் தொடங்க விரும்புகிறோம்,” என்றார்.
கட்டுரையாளர்: ஸ்ரீவித்யா