இந்திய ராணுவத்திற்கு அதி நவீன ரோபோ வாகனங்களை வழங்கும் சென்னை ஸ்டார்ட் அப்!
2019ல் நிறுவப்பட்ட ஸ்டார்ட் அப் நிறுவனமான டோரஸ் ரோபோடிக்ஸ் இந்திய ராணுவத்திற்காக ஆள் இல்லாமல் இயங்கும், முழுவதும் மின்மயமான வாகனங்களை வடிவமைத்து அளிக்கிறது.
பாதுகாப்புத் துறைக்கான தீர்வுகளை வழங்க தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திக்கொள்ளும் புதுமையாக்கத்திற்கு இந்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. பிப்ரவரி மாத துவக்கத்தில் நடைபெற்ற பாதுகாப்புத் துறை நிகழ்ச்சியில், 2022ம் வாக்கில் பாதுகாப்புத் துறை இறக்குமதியை 2 பில்லியன் அளவுக்காவது குறைக்க அரசு திட்டமிட்டிருப்பதாக பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறினார்.
எஸ்.ஆர்.எம் பல்கலை மாணவர்களான விக்னேஷ், அபி விக்னேஷ் மற்றும் விபாகர் செந்தில் குமார் மெகட்ரானிக்ஸ் படித்துக்கொண்டிருந்த போது, இந்திய பாதுகாப்பு துறைக்கான சேவைகளை உருவாக்கத் தீர்மானித்தனர்.
2019 மூவரும் இணைந்து, இந்திய ராணுவம் ’ஆளில்லா தரை வாகனங்களை’ (Unmanned Ground Vehicles (UGV)) பெறுவதற்கான சேவை அளிக்க ‘டோரஸ் ரொபோடிக்ஸ்’ ‘Torus Technologies' நிறுவனத்தை துவக்கினர்.
மூவரும் கேம்ப்ஸ் நேர்காணல் வாய்ப்புகளை தவிர்த்து, பாதுகாப்புத் துறைக்கான ரோபோ சேவைகளை உருவாக்க தீர்மானித்தது பற்றி இணை நிறுவனர்களில் ஒருவரான விக்னேஷ் பகிர்ந்து கொள்கிறார்.
“2016 செப்டம்பரில், உரியில் ராணுவ முகாமில் தீவிரவாதிகள் நடத்திய கையெறி குண்டு தாக்குதலில் 20 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய இழப்பு ராணுவத்திற்கு உண்டானது. இந்த சம்பவத்தை அடுத்து தான், இந்த ராணுவ வீரர்கள் உயிர்களைப் பாதுகாக்கும் வகையில் ஆளில்லாத வாகன அமைப்புகளை உருவாக்க தீர்மானித்தோம்,” என்கிறார் அவர்.
உரி தாக்குதலுக்கு மூன்று ஆண்டுகள் கழித்து டோரஸ் நிறுவனம் செயல்படத்துவங்கியது. இந்திய ராணுவத்துடன் பல முறை உரையாடி, தீவிர ஆய்வுக்கு பின் தங்களை தயார் செய்து கொண்டனர்.
பாதுகாப்புத் துறை தீர்வுகள்
டோரஸ் ரோபோடிக்ஸ் இந்தியா பாதுகாப்புப் படைக்காக, ஆளில்லாத மின் தரை வாகனங்களை வடிவமைத்து உருவாக்கித் தருகிறது. இந்த வாகனங்கள், ஆறு டிகிரி சுதந்திரம், ஆபத்தான பொருட்களைக் கண்டறிந்து நீக்குவதற்கான ரோபோ கரம் ஆகியவற்றை கொண்டுள்ளது.
பாதுகாப்பு ஆய்வு மற்றும் அபிவிருத்தி அமைப்பிற்காக, மொபைல் ஆட்டனாமஸ் ரோபோடிக்ஸ் சிஸ்டமை இந்த ஸ்டார்ட்-அப் உருவாக்கித் தந்துள்ளதாக இணை நிறுவனர் கூறுகிறார்.
ஸ்டார்ட் அப் இந்தியா திட்டத்தின் அங்கீகாரமும் பெற்றுள்ள நிறுவனம், முன்னோடி பாதுகாப்பு படைப்பாக்க நிறுவனம் எனும் அடையாளத்தையும் IDEX-DIO அமைப்பிடம் இருந்து பெற்றுள்ளது.
இது தவிர, நிறுவனம் லேசுரக, கையடக்க மின் மோட்டார்களை வழங்கி வருகிறது. இந்தியாவில் உருவாக்கப்படும் பவர்டிரைனுக்காக இதை அளிக்கிறது.
“தற்போது, 95 சதவீத பவர் டிரைன்கள் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. சந்தையில் உள்ள வர்த்தக நோக்கிலான இறக்குமதி மோட்டார்களுக்கு மாறாக, டோராசின் மோட்டார்கள் 50 சதவீதம் லேசானது, 15 சதவீதம் கூடுதல் செயல்திறன் அளிப்பது மற்றும் 10 சதவீதம் விலை குறைவானது,” என்கிறார் விக்னேஷ்.
வர்த்தக வாய்ப்புகள்
நிறுவனர்கள் ரூ.50 லட்சத்திற்கும் மேல் முதலீடு செய்திருப்பதாகக் கூறும் விக்னேஷ், Nandan GSE Pvt Ltd நிறுவன சி.இ.ஓ ரகுநந்தன் ஜகதீஷிடம் இருந்து நிதி திரட்டியிருப்பதாகவும் கூறுகிறார். மேலும் தமிழக மற்றும் மத்திய அரசிடம் இருந்தும் நிதி உதவி கிடைத்துள்ளது.
“வன்பொருள் ஸ்டார்ட் அப்’பிற்கு அதிலும் குறிப்பாக பாதுகாப்பு அல்லது அரசுத் துறை சார்ந்த ஸ்டார்ட் அப்’பிற்கு இந்தியாவில் நிதி திரட்டுவது எளிதல்ல ஏனெனில், இதற்கு ஆரம்ப மூலதனம் தேவை. எங்கள் முன்னோட்ட மாதிரிகளை உருவாக்க நிதி திரட்ட அதிகம் கஷ்டப்பட்டோம்,” என்கிறார் விக்னேஷ்.
ஸ்டார்ட் அப்’கள் நிதி திரட்ட முன்னோட்ட மாதிரி தேவை என்றால், வன்பொருள் ஸ்டார்ட் அப்கள் முன்னோட்ட மாதிரி உருவாக்க நிதி தேவை என்பது இன்னும் சிக்கலானது என்கிறார்.
“இந்த வளையத்தில் வன்பொருள் ஸ்டார்ட் அப்’கள் சிக்கிக் கொள்கின்றன. இது வழக்கமான வன்பொருள் ஸ்டார்ட் அப்களுக்கானது என்றால், பாதுகாப்புத் துறை சார்ந்த வன்பொருள் ஸ்டார்ட் அப்களுக்கு இன்னும் கூடுதலான மூலதனம் தேவை. மானியங்கள் மட்டும் தான் ஒரே வழி. எனினும் இவை கூட மொத்த செலவில் பத்து சதவீதம் தான் இருக்கும்,” என்கிறார்.
வாடிக்கையாளர்கள் பற்றி தகவல்களை தெரிவிக்காத விக்னேஷ், அண்மையில் நிறுவனம் BEML (Bharat Earth Movers Limited) நிறுவனமுடன் ஏ.ஐ சார்ந்த வாகனனத்தை உருவாக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளதாகத் தெரிவிக்கிறார்.
யுஜிவி வாகனத் தயாரிப்பில் ஈடுபட்டிருக்கும் முதல் இந்திய ஸ்டார்ட் அப் தங்கள் நிறுவனம் என்று கூறுபவர் வெளிநாட்டு நிறுவனங்களுடன் இதில் போட்டியிடுவதாகத் தெரிவிக்கிறார்.
பாதுகாப்புத் துறைக்கான புதுமையான தீர்வுகளை வழங்கும் 194 ஸ்டார்ட் அப்கள் இத்துறையில் செயல்பட்டு வருகின்றன. டோரஸ் தவிர, கொச்சியைச்சேர்ந்த EyeROV நிறுவனம் தண்ணீருக்கடியில் ஆய்வு செய்வதற்கான தொலைதூர இயக்கு வாகனத்தை அளிக்கிறது.
“நாங்கள் உருவாக்கித்தரும் மாடுலர் யுஜிவி வாகனங்கள், இந்திய ராணுவத்தின் தற்சார்பை அதிகரிப்பதோடு, இதன் மாடுலர் அமைப்பு காரணமாக, பல்வேறு பணிகளுக்கு பயன்படுத்திக்கொள்ள வழி செய்கிறது என்கிறார் விக்னேஷ்.
நிறுவனம் தனது மின் மோட்டார்களை அடுத்த மூன்று மாதங்களில் வர்த்தக நோக்கில் அறிமுகம் செய்ய இருப்பதகாவும் அவர் கூறுகிறார்.
ஆங்கில கட்டுரையாளர்: ஸ்ரேயா கங்குலி | தமிழில்- சைபர்சிம்மன்