‘ஜூலை 31 வரை தமிழகம் முழுதும் ஊரடங்கு நீட்டிப்பு’ - தொடரும் தடைகள்?
ஜூலை 5ம் தேதி வரை சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் மதுரையில் முழு ஊரடங்கு தொடரும். ஜூலை 31 வரை தமிழகம் முழுவதும் தளர்வுகளுடன் ஊரடங்கு நீடிக்கப்படும்.
29.6.2020 அன்று மருத்துவ நிபுணர்கள் மறறும் பொது சுகாதார வல்லுநர்கள் குழுவுடன் முதலமைச்சர் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில், நோய் தடுப்பு கட்டுப்பாட்டு பகுதிகளில் நோய் தடுப்பு பணிகளும் கட்டுப்பாடுகளும் தீவிரப்படுத்த வேண்டும் என கருத்துகளை தெரிவித்தார்கள். பல்வேறு தினங்களில் முதலமைச்சர் நடத்திய ஆய்வுக் கூட்டங்களின் அடிப்படையில், குறிப்பாக 22.6.2020 அன்று நடத்தப்பட்ட காணொலிக் காட்சியில், மாவட்ட ஆட்சித் தலைவர்கள் தெரிவித்த கருத்துகளின் அடிப்படையிலும், ஊரடங்கை தளர்த்துவதற்காக நிதித்துறை கூடுதல் தலைமை செயலாளர் அவர்களின் தலைமையில் அமைக்கப்பட்ட வல்லுநர் குழு அளித்த பரிந்துரையின் அடிப்படையிலும்,
29.6.2020 அன்று பொது சுகாதார வல்லுநார்களுடன் நடத்தப்பட்ட ஆலோசனைகளின் அடிப்படையிலும்,
கொரோனா வைரஸ் தொற்றை தடுப்பதற்காக பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழும் ஏற்கனவே நடைமுறையில் உள்ள பல்வேறு கட்டுப்பாடுகளுடனும், தளர்வுகளுடனும் தற்போது 30.6.2020 முடிவடைய உள்ள ஊரடங்கு உத்தரவு, 31.7.2020 நள்ளிரவு 12 மணி வரை தமிழ்நாடு முழுவதும் மேலும் நீட்டிப்பு செய்யப்படுகிறது.
எனினும் முழு ஊரடங்கு உத்தரவு தற்போது அமலில் உள்ள பகுதிகளான பெருநகர சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகள், திருவள்ளூர், செங்கல்பட்டு, மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களிலும், நோய்த்தொற்று அதிகம் உள்ளதை கருத்தில் கொண்டு, நோய்ப்பரவலை தடுக்க நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ள நிலையில் பேரிடர் மேலாண்மை சட்டம், 2005ன் கீழ்,
19.6.2020 அதிகாலை 00 மணி முதல் 30.6.2020 இரவு 12 மணி வரை 12 நாட்களுக்கு சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் அமல்படுத்திய முழு ஊரடங்கு உத்தரவு 5.7.2020 வரை தொடரும்.
அதே போல் மதுரை மாவட்டம் மதுரை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகள், பரவை பேரூராட்சி, மதுரை கிழக்கு, மதுரை மேற்கு மற்றும் திருப்பரங்குன்றம் வட்டாரங்களுக்கு உட்பட்ட அனைத்து கிராம ஊராட்சிகளிலும்
24.6.2020 முதல் 30.6.2020 இரவு 12 மணி வரை 7 நாட்களுக்கு அமல் படுத்திய முழு ஊரடங்கு, கொரோனா நோயத்தொற்றை ஒரு கட்டுக்குள் கொண்டு வருவதற்கு உதவியதால், மேற்கண்ட பகுதிகளில் மட்டும் 5.7.2020 வரை தொடரும்.
19.6.2020க்கு முன்னர் சென்னை மற்றும் அதை ஒட்டியுள்ள மாவட்டங்களில் உள்ள பகுதிகளில் இருந்த ஊரடங்கின் நிலையே,
6.7.2020 அதிகாலை 00 மணி முதல் 31.7.2020 நள்ளிரவு 12.00 மணிவரை தொடரும். அதேபோல் மதுரை மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதிகளில் 24,6.2020க்கு முன்னார் இப்பகுதிகளில் இருந்த ஊரடங்கின் நிலையே 6.7.2020 அதிகாலை OO மணி முதல் 31.7.2020 நள்ளிரவு 12.00 மணிவரை தொடரும்.
ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட காய்கறி/பழக்கடைகளைப் போன்று, பெருநகர சென்னை மாநகராட்சி, மாநகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் கிராம ஊராட்சிகளிடம் இருந்து முறையான வியாபார அனுமதி பெற்ற மீன் கடைகள், கோழி இறைச்சி கடைகள் மற்றும் முட்டை விற்பனை கடைகள் சமூக இடைவெளி நடைமுறைகளுக்கு உட்பட்டு அனுமதிக்கப்படுகிறது.
முழு ஊரடங்கு:
5.7.2020, 12.7.2020, 19.7.2020 மற்றும் 26.7-2020 ஞாயிற்றுக் கிழமைகளில் எந்தவிதமான தளர்வுகளும் இன்றி தமிழ்நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமல் படுத்தப்படும்.
ஏற்கனவே நடைமுறையில் உள்ள கீழ்காணும் செயல்பாடுகளுக்கான தடைகள், மறு உத்தரவு வரும் வரை தொடர்ந்து அமலில் இருக்கும்:-
- நகர்ப்புர வழிபாட்டுத் தலங்களிலும், பெரிய வழிபாட்டுத் தலங்களிலும் பொதுமக்கள் வழிபாடு.
- அனைத்து மதம் சார்ந்த கூட்டங்கள்.
- நீலகிரி மாவட்டத்திற்கும், கொடைக்கானல், ஏற்காடு போன்ற சுற்றுலாத் தலங்களுக்கும், வெளியூர் சுற்றுலாப் பயணிகள் செல்லத் தடை விதிக்கப்படுகிறது.
- தங்கும் வசதியுடன் கூடிய ஹோட்டல்கள், ரிசாரட்டுகள், பிற விருந்தோம்பல் சேவைகள். எனினும், மருத்துவத் துறை, காவல் துறை, அரசு அலுவலர்கள், உள்ளிட்ட வெளி மாநிலத்தவர் மறறும் தனிமைப்படுத்தப்படும் பணிகளுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்படுகிறது.
- வணிக வளாகங்கள் (Shopping Malls)
- பள்ளிகள், கல்லூரிகள், பயிற்சி நிறுவனங்கள், ஆராயச்சி நிறுவனங்கள் மற்றும் அனைத்துக் கல்வி நிறுவனங்கள். எனினும், இந்நிறுவனங்கள் இணைய வழிக் கல்வி கற்றல் தொடர்வதுடன், அதனை ஊக்கப்படுத்தலாம்.
- மத்திய உள் துறை அமைச்சகத்தால் அனுமதிக்கப்பட்ட பணிகளைத் தவிர சர்வதேச விமான போக்குவரத்திறகான தடை நீடிக்கும்.
- மெட்ரோரயில் / மின்சார ரயில்.
- திரையரங்குகள், உடற்பயிற்சிக் கூடங்கள், நீச்சல் குளங்கள், கேளிக்கைக் கூடங்கள், மதுக்கூடங்கள் (Bar), பெரிய அரங்குகள், கூட்ட அரங்குகள், கடற்கரை, சுற்றுலாத் தலங்கள், உயிரியல் பூங்காக்கள், அருங்காட்சியகங்கள் போன்ற பொது மக்கள் அதிகம் கூடும் இடங்கள்.
- அனைத்து வகையான சமுதாய, அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, கலாச்சார நிகழ்வுகள், சமய, கல்வி, விழாக்கள், கூட்டங்கள் மற்றும் ஊர்வலங்கள்.
- மாநிலங்களுக்கு இடையேயான பேருந்து போக்குவரத்து.