76 நாட்கள் லாக்டவுனுக்கு பிறகு மறுஉயிர் பெற்ற வூஹான் நகரம்!
கொரோனா தோன்றிய இடமான வூஹானில் வீடுகளில் முடங்கியிருந்த மக்கள் மெல்ல வானம் பார்த்து, வெளிக்காற்றை சுவாசிக்கத் துவங்கியுள்ளனர். இயல்பு நிலைக்கு திரும்ப முயலும் நகரின் நிலை இது தான்...
ஆள்அரவமற்ற வீதிகள்... வெறுமையின் பரவலில் சாலைகள்... நிசப்தத்திற்கு மத்தியில் ஒலிக்கும் ஆம்புலன்ஸ் ஹாரன்கள் என 76 நாட்கள் தன் எல்லைகள் அடைக்கப்பட்ட நிலையில் உலகையே அச்சுறுத்திய வூஹான் நகரம் லாக்டவுனிற்கு பிறகு மறுஉயிர் பெற்றுள்ளது. வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த மக்கள் மெல்ல வானம் பார்த்து, வெளிக்காற்றை சுவாசிக்கத் துவங்கியுள்ளனர்.
உயிர்காக்க வந்த ரட்சகர்களாகவும், தேவதைகளாகவும் மாறிய மருத்துவர்களும், செவிலியர்களும் தத்தமவர்களது இருப்பிடத்தை அடைய தொடங்கியுள்ளனர். 76 நாட்கள் பிறகு சேவையை தொடங்கிய வூஹான் விமான நிலையத்திலிருந்து பறந்த விமானத்தில் பயணித்த முதல் பயணிகளும் அவர்கள் தான்!
ஆம், கொரோனா வைரஸ் தாக்குதலில் வூஹான் சிக்கிக்கொண்ட போது, சீனாவின் பிற பகுதியிலிருந்து வந்து சிகிச்சையளித்த மருத்துவர்களும், சுகாதார ஊழியர்களும் அவர்களது இருப்பிடத்தை நோக்கி கடந்த புதன்கிழமை (ஏப்ரல் 8ம் தேதி) பயணித்தனர்.
ஜனவரி 23, வியாழக்கிழமை - வூஹான் நகரம் முழுமையாய் முடக்கப்பட்டது. அந்நகரத்தை நோக்கி கிளம்பும் போக்குவரத்துகளும், வூஹானிலிருந்து கிளம்பும் போக்குவரத்துகளும் முற்றிலும் நிறுத்தப்பட்டன. பள்ளி, அலுவலகங்களுக்கு காலவரையற்ற விடுப்பு வழங்கப்பட்டது.
ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக் கழக கொரோனா தடம் காணும் பிரிவின் தரவுகளின்படி, சீனாவில் கொரோனா வைரசால் 82,940 பேர் பாதிக்கப்பட்டனர். 3,340 பேர் பலியாகினர். பாதிக்கப்பட்டவர்களில் 50,000க்கும் அதிகமானோரும், இறந்தோரில் 2,500 பேரும் வூஹான் நகரை மட்டும் சேர்ந்தவர்கள். அதாவது, சீனாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் மூன்றில் இரண்டு பங்கை அந்நகரம் தன்வசம் கொண்டிருந்தது.
அதே சமயம், இருநாட்களில் (ஜனவரி, 25ம்தேதி) சீனா புத்தாண்டு தினம் என்பதால், வூஹான் மக்களின் விருந்தினர்களும், சொந்தகளும் நகரத்தை அடைந்திருந்ததால், பிரிவில் தவித்த பல நெஞ்சங்களையும் கொண்டிருந்தது வூஹான். கொரோனா வைரஸ் தொற்றின் உச்சத்தால், வூஹான் நகரிலிருந்த அனைத்து மருத்துமவனைகளிலும் நிரம்பி வழிந்தன கொரோனா நோயாளிகள். இத்தாலி முதல் நியூயார்க் வரையென உலகெங்குமுள்ள மருத்துவமனைகளிலும் இதே காட்சிகள் தான்.
உயிரைப் பணயம் வைத்து நாட்டைக் காக்கும் ராணுவ வீரர்களுக்கு நிகராய் குடும்பத்தை பிரிந்து பணியாற்றினர் மருத்துவர்களும், செவிலியர்களும். அவர்களது தியாகம் மற்றும் அர்பணிப்பிற்கு கிடைத்த பரிசாய் கொரோனாவை முக்கால்வாசி தோற்றுகடித்துவிட்டனர். ஏனெனில், கடந்த 3 வாரங்களில் 3 புதிய தொற்றுகள் மட்டுமே ஏற்பட்டிருப்பதாக சீன அரசு அறிவித்துள்ளது.
நிலைமை கட்டுக்குள் கொண்டுவந்ததை அடுத்து வூஹானில் பல கட்டுபாடுகளுடன் ஊரடங்கு உத்தரவும் தளர்த்தப்பட்டுள்ளது. பள்ளிகள் மீண்டும் திறக்கப்படாத நிலையில், பொது போக்குவரத்து சேவை மீண்டும் தொடங்கியது. விமான நிறுவனங்கள் உள்நாட்டு சேவையைத் துவக்கின. கோவிட்-19 வெடிந்தெழுந்த சமயத்தில் ஹீபே மகாணத்தில் பணிபுரிந்த பிற மகாணத்தைச் சேர்ந்த மருத்துவர்களுக்கும், செவிலியர்களுக்கும் தத்தமது இருப்பிடங்களை நோக்கி பயணிக்க முதலுரிமை அளிக்கப்பட்டது.
சிவப்பு நிற ஆடையில் வூஹான் விமான நிலையத்தை அடைந்த மருத்துவர்களுக்கு, நன்றி தெரிவிக்கும் பொருட்டு பூங்கொத்து வழங்கி வரவேற்கப்பட்டனர். வூஹான் நகரத்தில், பல உயர்ந்த கட்டடங்களில் மருத்துவர்களின் படங்கள் எல்.ஈ.டி விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன.
இருப்பினும், அனைவரும் பயணிக்க அனுமதிக்கப்படவில்லை. நோய் தொற்றில்லை என உறுதி செய்யப்பட்ட ‘க்ரீன் க்யூ ஆர் கோட்' கொண்டவர்களுக்கு மட்டுமே பயணிக்க அனுமதி. பயணம் செய்பவர்கள் அலிபாபாவின் ஆப்’பில், அடிப்படைத் தகவல்களை உள்ளீட்டு, பச்சைவண்ண குறியீடு கொண்டால் மட்டுமே பயணம் செய்ய முடியும்.
கொரோனா தாக்குதல் அதிகரித்த சமயத்தில் இணைய நிறுவனமான அலிபாபாவுடன் இணைந்து சீன அரசு ஒரு மென்பொருளை வடிவமைத்தது. சீனாவின் வாட்சப் ஆன ‘வீ சேட்' மற்றும் அலிபாபாவின் கட்டண ஆப்- ஆன ‘அலிபே' ஆகிய இரு ஆப்பில் இம்மென்பொருளானது நிறுவப்பட்டுள்ளது.
அதன்படி, பச்சைநிற குறியீடு இருந்தால் மட்டுமே வெளியில் பயணிப்பதற்கான அனுமதி வழங்கப்படும். சிவப்புநிற குறியீடு, நோய்த்தொற்றுக்குள்ளானவர் அல்லது காய்ச்சல் அல்லது பிற அறிகுறிகளைக் கொண்டிருப்பது உறுதிசெய்வதாகும், மஞ்சள் குறியீடு இருப்பின் பாதிக்கப்பட்ட நபருடன் தொடர்பு கொண்டிருந்தவர், ஆனால் இரண்டு வார தனிமைப்படுத்தலை முடிக்கவில்லை, அவர் மருத்துவமனையிலோ அல்லது வீட்டில் தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்பதையும் குறிக்கும்.
ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்ட ஏப்ரல் 8ம் தேதி, வூஹான் விமான நிலையத்திலிருந்து 107 விமானங்கள் புறப்பட்டன. 114 விமானங்கள் வூஹானை வந்தடைந்தன. அதில் மொத்தம் பயணித்த 11,714 பயணிகளில் 7,119 பேர் மகாணத்தை விட்டு வெளியேறியவர்கள், மற்றும் 4,595 பேர் வூஹானை வந்தடைந்தவர்கள் ஆவர்.
சீனா சதர்ன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் மேலாளர் யூகிங் ப்ளூம்பெர்க் நியூசிடம் கூறுகையில்,
‘‘வூஹானிலிருந்து ஏப்ரல் 8ம் தேதி, 28 விமானங்களை விமான நிறுவனம் இயக்கியது. சில விமானங்கள் மருத்துவ ஊழியர்களை அவர்களது வீட்டிற்கு அழைத்துச் செல்வதற்காக, பிரத்யேக விமானங்களும் இயக்கப்பட்டன. பல விமானங்களிலும் 90% டிக்கெட் நிரம்பியது,'' என்றுள்ளார்.
இருப்பினும் நகரத்தில், பல கடைகள் மூடப்பட்டிந்தன. உணவகங்கள் விநியோகத்திற்காக மட்டுமே மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. பள்ளிகள், தியேட்டர்கள் மற்றும் பிற பொழுதுபோக்கு இடங்கள் மூடப்பட்டுள்ளன. விமானப் போக்குவரத்து தவிர்த்து, வூஹான் நகரைச் சுற்றியுள்ள எல்லை சோதனைச் சாவடிகளில், மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. போக்குவரத்து தொடங்கிய அன்றைய தினத்தில் மட்டும் ரயில் வழியாக 55,000 பேர் பயணித்தனர்.
விமான நிலையம் இறுதியாக திறக்கப்பட்டுள்ளது என்பது பலருக்கு ஒரு சிறந்த செய்தியாக இருந்தாலும், கட்டுக்கடங்கா வைரஸ் மீண்டும் பாதிப்பை ஏற்படுத்திவிடுமோ என்கிற அச்சத்தில் பலரும் வீட்டிலே இருக்கிறார்கள். அனைத்தும் சரியாக நடப்பின், வரவிருக்கும் வாரங்களில் விமான நிலையம் மேலும் சர்வதேசப் பயணங்களையும் இயக்கும் என விமானநிறுவன அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
தகவல் உதவி : ப்ளூபெர்க் மற்றும் சிம்பிள்ஃப்ளையிங்