Brands
YSTV
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Yourstory
search

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

Videos

ADVERTISEMENT
Advertise with us

கொரோனாவில் இருந்து மீண்டு 9 முறை பிளாஸ்மா தானம் வழங்கியுள்ள தப்ரேஸ் கான்!

ஜஹாங்கீர் புரியைச் சேர்ந்த தப்ரேஸ் கான் இந்தக் கொடிய நோயின் பிடியில் இருந்து நோயாளிகள் மீள உதவும் வகையில் ஒன்பது முறை பிளாஸ்மா தானம் வழங்கியுள்ளார்.

கொரோனாவில் இருந்து மீண்டு 9 முறை பிளாஸ்மா தானம் வழங்கியுள்ள தப்ரேஸ் கான்!

Monday September 21, 2020 , 2 min Read

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் பரவத் தொடங்கியபோது இத்தனை உயிர்கள் பறிபோகும் என்று யாரும் நினைத்துக்கூட பார்க்கவில்லை. இந்தியாவில் இந்த வைரஸ் தாக்கம் குறித்த சரியான புரிதல் இல்லாத காரணத்தால் தொற்று பாதிக்கப்பட்டவர்கள் ஒதுக்கி வைக்கப்படுகின்றனர். இவர்களால் சுற்றியிருப்பவர்களுக்கு தொற்று ஏற்படக்கூடும் என்கிற பயமே இதற்குக் காரணம்.


புதுடெல்லியைச் சேர்ந்த தப்ரேஸ் கான் மற்றும் அவரது குடும்பத்தினர் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு மீண்டுள்ளனர். ஜஹாங்கீர் புரியைச் சேர்ந்த தப்ரேஸ் கானுக்கு மார்ச் மாதம் 18-ம் தேதி தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது.

அவர் ஏஎன்ஐ-இடம் கூறும்போது,

“எனக்கு தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டபோது ஒட்டுமொத்த சமூகமும் என்னைக் குற்றவாளி போன்றே நடத்தியது. எந்த நேரத்திலும் வெடித்துச் சிதறும் வெடிகுண்டு போன்றே என்னைப் பார்த்தார்கள். என் குடும்பத்தை ஒதுக்கினார்கள்,” என்றார்.
“மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட பிறகும் மக்கள் என்னை மோசமாகவே நடத்தினார்கள். இந்த வலி மறக்கமுடியாதது. மருந்தகங்களிலும் கடைகளிலும் என்னைப் புறக்கணித்தார்கள். நானோ என் குடும்பத்தினரோ வீட்டை விட்டு வெளியில் வந்தால் உடனே காவல்துறைக்கு தகவலளித்தனர்,” என்றார்.

ஆனால் தப்ரேஸ் இதுபோன்று மோசமாக நடத்தப்படுவதைக் கண்டு மனம் தளர்ந்துவிடவில்லை. இதுவரை இவர் ஒன்பது முறை பிளாஸ்மா தானம் கொடுத்துள்ளார். தேவை இருப்பினும் மீண்டும் கொடுக்கவும் தயாராக உள்ளார்.


கோவிட்-19 பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு பிளாஸ்மா சிகிச்சை பலனளிப்பது மருத்துவ ரீதியாக நிரூபிக்கப்பட்டதாக பல மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். கோவிட்-19 தொற்றில் இருந்து மீண்டவர்கள் பிளாஸ்மா தானம் கொடுக்க முன்வருமாறு மாநில அரசாங்கங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.


இந்தியாவின் முதல் பிளாஸ்மா வங்கியான 'டெல்லி பிளாஸ்மா வங்கி’ ஜூலை மாதம் 5-ம் தேதி Institute of Liver and Biliary Sciences (ILBS) வளாகத்தில் நிறுவப்பட்டுள்ளது. ஒரு நிறுவனத்தில் இருந்து அழைப்பு வந்ததை அடுத்து தப்ரேஸ் இந்த வங்கிக்கு இரு முறை பிளாஸ்மா தானம் செய்துள்ளார்.


தப்ரேஸ் மனமுவந்து பிளாஸ்மா தானம் கொடுத்து வந்தாலும் அவரது குடும்பத்தினர் அவரது ஆரோக்கியம் குறித்த பயத்தால் தயக்கம் காட்டுகின்றனர்.

"பிற்காலத்தில் ஏதேனும் பாதிப்பு ஏற்படலாம் என்று என் குடும்பத்தினரும் மற்றவர்களும் பயப்படுகின்றனர். இதனால் நான் பிளாஸ்மா தானமளிப்பதைத் தடுக்கின்றனர். ஆனால் மற்றவர்களின் மகிழ்ச்சிக்காகவே நான் இதைச் செய்கிறேன்,” என்று 'என்டிடிவி’ இடம் தெரிவித்துள்ளார்.

இவரது மனைவி குசுமிற்கு தொற்று இல்லை என்று பரிசோதனை முடிவுகள் வந்தபோதும் அக்கம்பக்கத்தினர் அவரைக் கடுமையாக விமர்சித்துள்ளனர். இருப்பினும் தப்ரேஸின் முயற்சி குறித்து அவர்கள் முழுமையாகத் தெரிந்துகொண்ட பிறகு நிலைமை மாறியது. 

“அவர் பிளாஸ்மா தானம் கொடுக்கத் தொடங்கிய பிறகு அனைவரும் பாகுபாடு பார்ப்பதை நிறுத்திக்கொண்டனர். பிளாஸ்மா தானம் வழங்குவது நல்லது என்று மருத்துவர்கள் எங்களிடம் தெரிவித்தனர். இதனால் சோர்வு ஏற்படாது. இது ஒரு உயிரைக் காப்பாற்றும். எனவே இதைத் தொடர விரும்புகிறோம்,” என்றார் குசும்.

கொரோனா தொற்றில் இருந்து மீண்டவர்கள் முன்வந்து பிளாஸ்மா தானம் வழங்கவேண்டும் என்று தர்பேஸ் கேட்டுக்கொள்கிறார்.


கட்டுரை: THINK CHANGE INDIA