ஜமாத் இஸ்லாமியர்கள் கொரோனா சிகிச்சைக்கு ப்ளாஸ்மா தானம் செய்ய விருப்பம்!
தப்லிகி ஜமாத் கூட்டத்துக்கு டெல்லி சென்று திரும்பியவர்களில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு குணமடைந்தவர்கள் தங்களின் ப்ளாஸ்மாவை கொரோனா நோயாளிகளுக்கு கொடை செய்ய முன்வந்துள்ளனர்.
டெல்லியில் கடந்த மாதம் நடைப்பெற்ற தப்லிகி ஜமாத் கூட்டத்தில் பங்குபெற தம்ழகத்தில் இருந்து டெல்லி சென்ற சில இஸ்லாமியர்களுக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டு அவர்கள் சிகிச்சைப் பெற்று வந்தனர். அதில் பலர் வேகமாக குணமடைந்து நலமுடன் வீடு திரும்பினர்.
இந்நிலையில் கொரோனாவுக்கு எதிரான ‘ப்ளாஸ்மா தெரபி’ சிகிச்சைக்கு, தங்களின் ரத்த ப்ளாஸ்மாவை கொடை தருவதாக அறிவித்து தங்களின் மனிதநேயத்தை வெளிப்படுத்தி உள்ளனர்.
ப்ளாஸ்மா தெரபி என்பது கோவிட்-19 பூர்ணமாகக் குணமடைந்த ஒருவரின் உடலில் இருந்து எடுக்கப்படும் ரத்த ப்ளாஸ்மா-வை கொரோனா பாதிப்பில் இருக்கும் ஒருவருக்கு செலுத்துவதாகும். கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் உடலில் ஆன்டி-பாடீஸ் அதாவது நோய் எதிர்ப்பு உண்டாகியிருக்கும், அதனை தற்போது சிகிச்சைப் பெற்று வரும் நோயாளி உடம்பில் செலுத்தினால், குறிப்பாக கொரோனா தாக்கத்தால் மிகவும் கவலைக்கிடமாக இருக்கும் நபர்களின் உடலில் செலுத்தினால் அவர்கள் சீக்கிரம் குணமடைய உதவி செய்யும்.
திருப்பூரில் இருந்து கொரோனா பாதித்து சிகிச்சை மேற்கொண்டு வந்த 38 வயதான தொழிலதிபர் மொஹமத் அப்பாஸ் என்பவர் கடந்த ஞாயிறு கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் இருந்து குணமடைந்து வீட்டுக்கு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். அப்போது அவர் அங்குள்ள மாவட்ட நிர்வாக அதிகாரியைச் சந்தித்து தனது ப்ளாஸ்மாவை தானம் தர விருப்பப்படுவதாக கூறினார்.
“நான் டிஸ்சார்ஜ் ஆனவுடன், மாவட்ட அதிகாரி மற்றும் மருத்துவமனை டீனை சந்தித்து, அவர்களுக்கு ரத்த ப்ளாஸ்மா எப்போது தேவைப்பட்டாலும் என்னை உடனடியாக தொடர்பு கொள்ள கேட்டுக்கொண்டேன். ப்ளாஸ்மா தேவைப்படும் நோயாளிகளுக்கு நான் உதவ விரும்புகிறேன்,” என்றார் அப்பாஸ்.
அப்பாஸ் தான் மட்டுமல்லாமல், ஜமாத்தில் உள்ள மற்ற குணமடைந்த உறுப்பினர்களிடமும் பேசிவிட்டு, அவர்கள் அனைவரும் ப்ளாஸ்மா கொடை செய்ய தயாராக இருப்பதாகவும் மாவட்ட நிர்வாகத்திடம் தெரிவித்தார்.
இதே சமயத்தில், தேனியைச் சேர்ந்த முகமது உஸ்மான் அலி என்பவரும் கொரோனா வைரசில் இருந்து குணமடைந்தார்.
“எனக்கு கொரோனா அறிகுறிகள் ஏதும் இல்லை, ஆனால் பாசிடிவ் என்று வந்தது. உடனே சிகிச்சை எடுத்துக்கொண்டு தற்போது நலமடைந்து விட்டேன். கொரோனாவில் இருந்த மீண்ட நான் அதிகளவு தைரியத்துடன் இருக்கிறேன். எங்களை, அரசு ப்ளாஸ்மா தானம் செய்ய அழைத்தால் உடனே செல்லத் தயாராக இருக்கிறோம்,” என்றார்.
என்னைப் பொறுத்தவரை சுமார் 42 பேர் தமிழகத்தில் ப்ளாஸ்மா தானம் செய்யத் தயாராக உள்ளனர் என்றார் மேலும்.
சென்னையைச் சேர்ந்த சுல்தான் என்ற எலெக்ட்ரிகல் எஞ்சினியர், ஜமாத் சார்பில் டெல்லி சென்று வந்த இஸ்லாமியர்கள் பற்றிய விவரங்களை கையாண்டு வந்தார். சுல்தான் இவர்களுடன் டெல்லி செல்லாத நிலையிலும், அவர் அரசுக்கு உதவி வந்தார். அதுபற்றி கூறுகையில்,
“டெல்லி சென்று திரும்பிய ஜமாத்தை சேர்ந்த இஸ்லாமியர்களை பலரும் எதிர்மறையான விமர்சனங்கள் கொண்டு பேசி வந்தனர். ஆனால் யாரும் வேண்டும் என்றே இதைச்செய்யவில்லை என்றும் அதை மக்களுக்கு எடுத்துக்காட்ட ப்ளாஸ்மா தானம் செய்வது மூலம் தெரியப்படுத்த முடியும் என்று எங்கள் ஜமாத் உறுப்பினர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினேன்,” என்றார் சுல்தான்.
தொடக்கத்தில் பயந்த சிலர், அதைப்பற்றி சரியாக விளக்கியவுடன் அனைவரும் ரத்த ப்ளாஸ்மா தர ஒப்புக்கொண்டனர் என்றார்.
இதுவரை தானம் செய்ய முன்வந்துள்ள இஸ்லாமியர்களுக்கு நன்றி தெரிவித்த சுல்தான், மாநிலத்தில் உள்ள அனைத்து இஸ்லாமியர்களை ரமதான் மாதமான தற்போது மசூதிக்கு செல்லவேண்டாம் என்றும் வீட்டில் இருந்தே தங்களின் தொழுகையைச் செய்வது, கொரோனா பரவலைத் தடுத்து, நாட்டின் நலனுக்கும் மக்களுக்கும் நன்மை செய்யும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.
தகவல் உதவி: தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்