'கொரோனா வைரஸ் தொடர்பான வதந்திகளை நம்ப வேண்டாம்' - பிரதமர் மோடி வேண்டுகோள்!
கொரோனா வைரஸ் தொடர்பான பாதிப்பு இந்தியாவில் அதிகரித்து வரும் நிலையில், மக்கள் வந்ததிகளை நம்ப வேண்டாம் என பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
உலகம் மற்றும் இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், மக்கள் வதந்திகளுக்கு செவி சாய்க்காமல் இருக்க வேண்டும் என்றும், மருத்துவர்கள் சொல்வதை பின்பற்ற வேண்டும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.
மக்கள் கைகுலுக்குவதை தவிர்த்து, ஒருவருக்கு ஒருவர் வணக்கம் சொல்லிக்கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
“கொரோனா வைரஸ் தொடர்பான வதந்திகளை நம்ப வேண்டாம் என நாட்டு மக்களை கேட்டுக்கொள்கிறேன். இது தொடர்பாக மருத்துவர்கள் சொல்வதை பின்பற்ற வேண்டும்,” என்று மோடி கூறியுள்ளார்.
பிரதான் மந்திரி பாரதிய ஜனயுஷாதி பரியோஜனா திட்டத்தில் பலன் பெற்றவர்களுடன் வீடியோ கான்பிரன்ஸ் மூலம் உரையாடிய போது பிரதமர் இவ்வாறு கூறினார். கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக பி.எஸ்.என்..எல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ செய்திகள் மூலம் விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டு வருவதாக சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதனிடையே, முகமுடிகள் மற்றும் கிருமிநாசினிகள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், கள்ளச்சந்தையில் ஈடுபடுவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ வர்தன் கூறியுள்ளார்.
“முகமுடிகளை கள்ளச்சந்தையில் விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,” என்று அவர் டிவிட்டரில் இந்தியில் தெரிவித்துள்ளார்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் ஒரு பகுதியாக, 30 இந்திய விமான நிலையங்களில் இதுவரை 6.5 லட்சம் பயணிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளனர்.
சில மாதங்களுக்கு முன்னர் சீனாவின் வூஹான் நகரில் கோவிட்-19 வைரஸ் பாதிப்பை ஏற்படுத்திய பிறகு உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கானோரை பாதித்துள்ளது.
இந்த வைரஸ், 85 நாடுகளுக்கு பரவியுள்ளது. ஒரு லட்சம் பேருக்கு மேல் பாதித்துள்ளது, 3,3000 பேர் பலியாகியுள்ளனர். இதை ஒரு சர்வதேச அவசர நிலை என உலகச் சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது.
செய்தி: பிடிஐ| தமிழில்: சைபர்சிம்மன்