தீப்பற்றி எரியும் எலெக்ட்ரிக் பைக்குகள்: தவிர்ப்பது எப்படி? சில டிப்ஸ்!
எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்களை சார்ஜ் செய்யும் போது கவனிக்க வேண்டியவை..
கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஹைதராபாத் நகரில் இயங்கி வந்த எலெக்ட்ரிக் இருசக்கர வாகன ஷோரூமில் ஏற்பட்ட தீவிபத்தினால் 8 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்து சிகிச்சையில் உள்ளனர். போலீசார் இந்த விபத்து குறித்து விசாரித்து வருகின்றனர். அதே நேரத்தில் எலெக்ட்ரிக் இருசக்கர வாகன பேட்டரி வெடித்த காரணத்தால் இந்த விபத்து ஏற்பட்டதா என்ற சந்தேகம் தங்களுக்கு இருப்பதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும் தீயணைப்பு துறை, மின்துறை மற்றும் தடயவியல் நிபுணர்கள் அளிக்கும் அறிக்கையை பொறுத்தே இந்த விபத்துக்கான காரணம் என்ன என்பது தெரியவரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
உலக அளவில் மக்கள் தொகை அதிகம் கொண்ட நாடு இந்தியா. அதன் காரணமாக இந்திய சந்தையில் அனைத்துக்குமே டிமாண்ட் அதிகம். அதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டி உள்நாடு மற்றும் வெளிநாடு என பல நிறுவனங்கள் போட்டி போட்டு வருகின்றன.
இதே போக்கு எலெக்ட்ரிக் வாகன விற்பனையிலும் தொடர்ந்து வருகிறது. 10 அல்லது 15 ஆண்டுகளுக்கு முன்னர் இந்த வாகன சந்தையில் இருந்த நிறுவனங்களை காட்டிலும் இப்போது அதிக அளவில் பல நிறுவனங்கள் மும்முரமாக இயங்கி வருகின்றன. மக்களும் அதனை ஆர்வமுடன் கவனித்து வருகின்றனர். அதன் காரணமாக எலெக்ட்ரிக் வாகன விற்பனையும் படிப்படியாக அதிகரித்து வருகிறது.
இருந்தாலும் கடந்த ஏப்ரல், மே மாதங்களில் எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள் தீப்பற்றி எரிந்த விபத்து குறித்த செய்திகளை நாம் கடந்து வந்துள்ளோம். தமிழகம் உட்பட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள் தனித்தனி சம்பவங்களில் தீ விபத்தில் சிக்கி இருந்தன.
சார்ஜ் செய்த போது, வண்டியை நிறுத்தி வைத்திருந்த போது என அந்த சம்பவங்கள் தொடர்ந்தன. அதையடுத்து, இந்த விஷயத்தில் மின்சார வாகன உற்பத்தி நிறுவனங்கள் கவனம் செலுத்த வேண்டும் என அரசு தரப்பில் தெரிவித்ததாக தகவல்.
தொடர்ந்து தீ விபத்துக்கு காரணமான சில நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளின் குறிப்பிட்ட பேட்ச் வாகனங்களை மறு ஆய்வுக்கு உட்படுத்தி இருந்தன.
இந்த நிலையில் தான் ஹைதராபாத் நகரில் எலெக்ட்ரிக் இருசக்கர வாகன ஷோரூம் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்துக்குக் காரணம் இருசக்கர வாகனம் சார்ஜ் செய்தபோது ஏற்பட்ட மின் கசிவா? அல்லது பேட்டரி வெடித்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.
இ-பைக் தீப்பற்றி எப்படி?
இது தொடர்பாக எலெக்டரிக் வாகன துறையில் அனுபவம் வாய்ந்த வல்லுனரான கார்த்திக் உடன் பேசினோம். “நான் பணியாற்றும் நிறுவனம் டிசி கரண்ட் மூலமாக மின்சார நான்கு சக்கர வாகனங்களுக்கு சார்ஜ் செய்து கொடுக்கும் பணியை செய்து வருகிறது. இதற்கும் இருசக்கர வாகன சார்ஜிங் முறைக்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. இருந்தாலும் மின்சார வாகன பயன்பாட்டின் மீது ஆர்வமுள்ளவராக சில கருத்துகளை பகிர்ந்து கொள்கிறேன்.
ஹைதராபாத் நகரில் நடைபெற்ற விபத்து துரதிர்ஷ்டவசமானது. இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்கள் தீ விபத்து குறித்து ஊடகங்களில் அதிக கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. ஆனால் மின்சார வாகனங்களை காட்டிலும் பெட்ரோல், டீசல் வாகனங்கள் தான் அதிகம் தீப்பற்றி எரிகின்றன. அது நமக்கு பழக்கப்பட்ட செய்தி என்பதால் அதை யாரும் கவனிப்பதில்லை. அதே நேரத்தில் மின்சார வாகன விபத்தில் இந்த துறையை சார்ந்தவர்களுக்கு சில விசாரங்கள் இருக்கின்றன. அதை இல்லை என மறுப்பதற்கு இல்லை.
> தீ விபத்தில் சிக்கிய பெரும்பாலான மின்சார இருசக்கர வாகனங்களில் சில பொதுவான காரணங்கள் உள்ளன. விபத்துகளில் சிக்கிய வாகனங்கள் ARAI ஒழுங்குமுறைக்கு கீழ் வரதாவை. இந்த வகை வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டவையாக இருக்கும். அல்லது வெளிநாட்டில் உற்பத்தி செய்து இந்தியாவில் அசெம்பிள் செய்த வாகனங்களாக கூட இருக்கும். இதன் மலிவான விலை காரணமாக சந்தையில் டிமாண்ட் இருக்கும். ஆனால் அதன் பேட்டரி தொடங்கி அனைத்து கிட்களும் தர நிலைக்கு கீழ் இருக்கும்.
> அதுவே ARAI ஒழுங்குமுறைக்கு கீழ் வரும் வாகனங்களில் இந்த விபத்துகள் நடைபெறுவது அரிதினும் அரிது.
> மின்சார வாகனங்களை சார்ஜ் செய்யும் போது சில வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்.
1. முதலாவது வீடு அல்லது பணி செய்யும் இடமோ எதுவாயினும் அங்கு முறையான மின் இணைப்புக்கான ஒயரிங்க பணிகளை கவனிக்க வேண்டும். இது மின்சார வாகனம் மட்டுமல்லாது மின்சாதன பொருட்களுக்கும் பொதுவான பாதுகாப்பு அம்சம்.
2. 15 AMP கொண்ட 3 பின் சார்ஜரில் மின்சார இருசக்கர வாகனத்தின் பேட்டரியை சார்ஜ் செய்யலாம். அதில் எந்தவித சிக்கலும் இல்லை.
3. பயனர்கள் மலிவு விலையில் 35 கிலோ மீட்டருக்கும் குறைவான வேகத்தில் செல்லும் மின்சார இருசக்கர வாகனங்களை தவிர்க்க வேண்டும். இந்த வகை வாகனங்கள் ARAI ரெகுலேஷனின் கீழ் வராது, என அவர் தெரிவித்துள்ளார்.
எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்களை சார்ஜ் செய்யும் போது கவனிக்க வேண்டியவை
> எலெக்ட்ரிக் இருசக்கர வாகன பேட்டரியை முதல் முறை சார்ஜ் செய்யும் போது 12 மணி நேரம் சார்ஜ் செய்ய வேண்டும்.
> பெரும்பாலான எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள் lithium-ion பேட்டரியாக இருக்கும். முழுவதுமாக சார்ஜ் தீர்ந்து போனால் அந்த பேட்டரி ரெஸ்பாண்ட் செய்யாது எனச் சொல்லப்படுகிறது. அதனால் அதனை அடிக்கடி சார்ஜ் செய்ய வேண்டியது அவசியம்.
> முதல் முறையை தவிர பேட்டரியை நீண்ட நேரம் சார்ஜ் செய்யக்கூடாது.
> அதீத வெப்பத்தை தவிர்க்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Edited by Induja Raghunathan