’தோல்விகளே வெற்றியின் முதல் படி’ - மாணவர்களுக்கு ஊக்கம் தந்த பிரதமர்!
’ParikshaPeCharcha 2020' நிகழ்ச்சியில் நாடு முழுவதிலும் இருந்து 1050 மாணவர்கள், 950 ஆசிரியர்கள் முன்னிலையில் பிரதமர் மோடி உரையாற்றினார். தமிழகத்தைச் சேர்ந்த 66 மாணவர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
மாணவர்களின் பொதுத்தேர்வு பயத்தை போக்கும் விதமாக 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று கலந்துரையாடல் நடத்தினார். டெல்லியிலுள்ள டால்காட்டோரா, அரங்கத்தில் 'ParikshaPeCharcha 2020' 'பரிக்ஷா பெ சர்ச்சா 2020' என்ற பெயரில் நடைபெற்ற கருத்தரங்கத்தில் பிரதமர் உற்சாகத்தோடு பங்கேற்றார்.
இந்த நிகழ்ச்சியில் நாடு முழுவதிலும் இருந்து 1050 மாணவர்களும் 950 ஆசிரியர்களும் கலந்து கொண்டனர். மாணவர்களுக்கு மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் கட்டுரைப் போட்டி நடத்தி அதில் சிறந்த மாணவர்களை பிரதமரின் நிகழ்ச்சியை நேரில் பார்க்கும் வாய்ப்பை அளித்தது. தமிழகத்தைச் சேர்ந்த 66 மாணவர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
மாணவர்கள் மத்தியில் மிகுந்த உற்சாகத்தோடும், நம்பிக்கையோடும் உரையாற்றினார் பிரதமர். அவர் கலந்துரையாடலின் சில முக்கிய அம்சங்கள்:
நான் தவறாமல் பல நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறேன், ஆனால் ‘பரிக்ஷா பெ சர்ச்சா’ என் இதயத்திற்கு மிக நெருக்கமானது. திறமையான மற்றும் படைப்பாற்றல் கொண்ட மாணவர்களுடன் உரையாடுவதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இந்தியா சுதந்திரம் அடைந்த 100வது ஆண்டைக் கொண்டாடும் போது அதாவது 2047ல் நாட்டின் வளர்ச்சியில் முக்கியப் பங்காற்றப்போகிற எதிர்கால நம்பிக்கை நட்சத்திரங்கள் மத்தியில் நான் உரையாற்றிக் கொண்டிருக்கிறேன்.
தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவது மட்டுமே வாழ்க்கையல்ல. மாணவர்கள் என்ன உணர்கிறார்கள் என்பதை நான் எளிதாக புரிந்துகொள்வேன். நான் உங்களின் குடும்பத்தில் ஒரு உறுப்பினர். என்னுடைய வார்த்தைகள் மாணவர்களின் வாழ்வில் நேர்மறையான எண்ணத்தை உருவாக்கும் என நம்புகிறேன்.
சந்திரயான்-2 திட்டம் முழுமையான வெற்றியடையாததற்கு பிறகு, எதுவும் எளிதல்ல என்பதை புரிந்து கொண்டேன். அந்தப் பின்னடைவால் துவண்டு போய் இருந்த விஞ்ஞானிகளிடம் பேசினேன், அவர்களை ஊக்கப்படுத்தினேன். வெற்றியின் முதல் படியே தோல்வி தான். தோல்வியிலிருந்து கற்கும் பாடத்தில் தான் வெற்றி இருக்கிறது.
2001ம் ஆண்டு, இந்தியா ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியில் வெற்றி வாய்ப்பு இந்தியாவிற்கு சாதகமாக இல்லை. தொடர் தோல்விகளே இருந்த போதும் ராகுல் டிராவிட்டும், விவிஎஸ் லஷ்மனும் அசத்தல் விளையாட்டை விளையாடி அந்தத் தொடரில் திருப்புமுனையை ஏற்படுத்தினர். 2002ம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான கிரிக்கெட் போட்டியில், இந்திய சுழற்பந்து வீச்சாளர் அனில் கும்ப்ளே காயமடைந்தார். அனைவரும் அவர் இனி விளையாட மாட்டார் என கவலையடைந்தனர். ஆனால் காயத்தையும் பொருட்படுத்தாமல் கும்ப்ளே விளையாடினார், அது தான் நேர்மறை சிந்தனை.
ஒவ்வொருவரும் புதிதாய் ஏதேனும் கற்றுக்கொள்ள வேண்டும். பாடத்திட்டத்தை போல மற்ற துறைகளுக்குக்கும் மாணவர்கள் சம அளவில் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். படிப்பு மட்டுமல்லாத பிற திறமைகளையும் மாணவர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் அவர்கள் எந்திரம் போலாகி விடுவார்கள்.
டெக்னாலஜி இல்லாமல் இன்றைய உலகமே இல்லை. குடும்பத்தில் 4 பேர் இருந்தால் 4 பேரும் தொலைபேசியிலேயே மூழ்கிக் கிடக்கின்றனர். டெக்னாலஜி அதிவேகமாக வளர்ந்து வருகிறது, அதற்கேற்ப நாமும் அப்டேட் ஆக வேண்டியது அவசியமாக இருக்கிறது. ஆனால் டெக்னாலஜியை நாம் எப்படி பயன்படுத்துகிறோம் என்பது மிகவும் முக்கியம்.
மாணவர்கள் குறைந்தபட்சம் ஒரு மணி நேரமாவது டெக்னாலஜியில் இருந்து விலகி இருக்க வேண்டும். ஒரு அறையை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள் அந்த அறைக்குள் எந்த காரணத்தைக் கொண்டும் டெக்னாலஜி வாசனை அறவே இருக்கக் கூடாது என்று உங்களுக்கு நீங்களே ஒரு கட்டுப்பாட்டை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.
தேர்வுக்கு நீங்கள் எப்படி தயாராகுகிறீர்களோ அதில் உறுதியாக இருங்கள். தேர்வு அறைக்குள் எந்த ஒரு மன அழுத்தத்துடனும் நுழையாதீர்கள். மற்றவர்கள் என்ன செய்கிறார்கள் என்று யோசிக்காமல் உங்கள் மீது நம்பிக்கை வையுங்கள். நாம் தேர்வு செய்யும் பாதை முன்னேற்றத்திற்கானதாக இருக்க வேண்டும், மாறாக மாணவர்களுக்கு பாறமாக இருக்கக் கூடாது.
மாணாக்கர் படிப்பு என்ற குறுகிய வட்டத்தில் சுருங்கிவிடாமல் அவர்களின் இதர திறமையை வெளிக்கொண்டு வரவும் பெற்றோர் உதவியாக இருக்க வேண்டும். உலகச்சூழல் மாறிக்கொண்டிருக்கிறது, வாய்ப்புகளும் பெருகிக் கிடக்கிறது. மதிப்பெண் மட்டும் எதிர்காலம் என்ற நிலையில் இருந்து மாறி நாம் இப்போது பயணித்துக் கொண்டிருக்கிறோம்.
தேர்வு மிக முக்கியமானது என்று பெற்றோர் பிள்ளைகளை வற்புறுத்த வேண்டாம். மாணவர்களுக்கு பிடித்த இதர திறமைகளிலும் அவர்கள் நேரம் செலவிட அனுமதிக்க வேண்டும் என்றும் பிரதமர் மோடி மாணவர்கள் மத்தியில் பேசினார்.
இடைஇடையே தேர்வை எதிர்கொள்வதில் தங்களுக்கு இருக்கும் சந்தேகங்களை மாணவர்கள் கேள்விகளாக கேட்க அதற்கு மாணவர்களுக்கு தெளிவுரை வழங்கினார் பிரதமர். 3வது ஆண்டாக மாணவர்களுடனான இந்தக் கலந்துரையாடலை பிரதமர் நிகழ்த்தியுள்ளார்.
நாடு முழுவதும் வருகிற மார்ச் – ஏப்ரல் மாதங்களில் பள்ளி மாணவர்கள் பொதுத்தேர்வை எதிர்கொள்ள இருக்கின்றனர். அவர்கள் அச்சமின்றி தேர்வை எதிர்கொள்வதற்காக இந்த நிகழ்ச்சியானது நடத்தப்பட்டது. கடந்த ஆண்டு இந்த நிகழ்ச்சியை 8.6 லட்சம் பேர் பார்த்திருந்தது குறிப்பிடத்தக்கது.