நீட் அனிதா நினைவாக 'aNEETa' செயிலியை உருவாக்கிய மாணவி!
மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வில் தேர்ச்சிப் பெறமுடியாமல் அரியலூரைச் சேர்ந்த மாணவி அனிதா தற்கொலை செய்துக்கொண்டது பெரும் சர்ச்சையாக மாறி தமிழக மக்களையே சோகத்தில் ஆழ்த்தியது. இதனையொட்டி இன்றும் நீட் தேர்வை தடை செய்யக் கோரி பல தமிழக மக்கள் குரல் கொடுத்துக்கொண்டுதான் உள்ளார்கள்.
இதனிடையே அனிதாவின் சோக முடிவை கருத்தில்கொண்டு அவரின் நினைவாக அவரது பேரில் நீட் தேர்வுக்கான ஆப் ஒன்றை உருவாக்கியுள்ளார் ஓர் மாணவி.
டெல்லியைச் சேர்ந்த தமிழ் பெண் இனியாள் கண்ணன் ’aNEETa’ என்னும் செயிலியை உருவாக்கியுள்ளார். 12ஆம் வகுப்பு படிக்கும் இவர், ஐஎஎஸ் அதிகாரி ஜெகதீசனின் மகள். இவர் உருவாக்கியுள்ள இந்த ஆப் மூலம் நீட் தேர்வுக்கு தயாராகி வரும் மாணவர்கள் மாதிரி தாள்கள், நுழைவுத் தேர்வுக்கான மற்ற தகவல்களை இதில் பெறலாம். இது குறித்து ஊடகங்களுக்கு பேட்டி அளித்த இனியாள்,
“12ஆம் வௌப்பு பொதுத் தேர்வில் நல்ல மதிப்பெண் எடுத்த அனிதாவால் ஏன் நுழைவுத் தேர்வில் தேர்ச்சிப்பெற முடியவில்லை? காரணம் தேர்வின் முறை, கேள்விகளின் வகைப் பற்றிய போதிய விழிப்புணர்வு இல்லாததே. அதற்கான தீர்வை வழங்கவே இந்த செயலியை உருவாக்கியுள்ளேன்,” என்றுள்ளார்.
மாணவர்கள் பயிற்சி செய்ய 2017 மற்றும் 2018ம் ஆண்டின் தேர்வு வினாத்தாள்கள் இதில் இணைக்கப்பட்டுள்ளது. மேலும் மாணவர்கள் இந்த செயிலியில் கொடுக்கப்பட்டுள்ள மாதிரி தேர்வை எழுதியப்பின் முடிவுகளுடன் ஒரு பகுப்பாய்வு வரைபடமமும் அவர்களுக்கு வழங்கப்படுகிறது. இதன் மூலம் மாணவர்கள் கவனம் செலுத்த வேண்டிய பகுதிகள் பற்றிய ஒரு தெளிவான கருத்தை பெறலாம். இந்த மாதிரித் தேர்வுகளை ஆன்லைன் மற்றும் பதிவிறக்கம் செய்து ஆஃப்லைனிலும் எழுதலாம்.
இந்த செயிலி மூலம் நீட் தேர்வு பயிற்சி மையங்கள் இல்லாத கிராமங்களும், பயிற்சிக்கு செல்ல முடியாத எளிய மாணவர்களும் பயன்பெறலாம். மாணவர்களுக்கு உதவ பயிற்சியாளர்கள் நேரடியாக கேள்விகளை ஆப்-ல் பகிரவும் முயற்சி செய்து வருவதாக தெரிவிக்கிறார் இனியாள்.
மருத்துவப் படிப்பிற்காக ஆப் உருவாக்கினாலும் மருத்துவராகும் கனவு இல்லை என்கிறார், 12ஆம் வகுப்பிற்கு பிறகு பொறியியல் படிக்க விரும்பும் இந்த மாணவி.
செயிலி பதிவிறக்கம் செய்ய: aNEETa