இந்தியாவில் முதல் முறையாக உற்பத்தி ஆலை: சென்னையில் கால்பதிக்கும் அமேசான்!
அமேசானின் பலே திட்டம்!
உற்பத்தித் துறையில் புதிய உச்சத்தை இந்தியா எட்டி வருகிறது. அந்தவகையில் ஆப்பிள், சாம்சங் உட்பட உலகின் பல முன்னணி ஸ்மார்ட்போன் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பொருட்களைத் தயாரிக்க உற்பத்தி தளங்களை இந்தியாவின் பல பகுதிகளில் அமைத்து வருகிறது.
மேலும், உற்பத்தி தளத்தை இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் அமைக்க ஆர்வம் காட்டும் நிறுவனங்களுக்குப் பல்வேறு சிறப்புச் சலுகைகளை மத்திய அரசு அளித்து வருகிறது. இந்த நிலையில்தான் உலகின் பிரபல கம்பெனியான அமேசான் இந்தியாவில் ஆலை தொடங்க உள்ளது.
Foxconn-ன் துணை நிறுவனமான கிளவுட் நெட்வொர்க் டெக்னாலஜியுடன் இணைந்து இந்த ஆண்டு இறுதியில் சென்னையில் ஃபயர் டிவி ஸ்டிக் உள்ளிட்ட சாதனங்களைத் தயாரிக்க உள்ளதாக அமேசான் தெரிவித்துள்ளது.
மத்திய அரசின் ஆத்மநிர்பர் பார்த் திட்டத்தின் கீழ் இந்தியாவிலேயே முதல் முறையாக சென்னையில் தனது ஆலை தொடங்க இருக்கிறது. இந்த ஆலையின் மூலம் ஒவ்வொரு ஆண்டும் 'நூறாயிரக்கணக்கான' ஃபயர் டிவி ஸ்டிக் சாதனங்களை உற்பத்தி செய்ய முடியும். இது இந்திய வாடிக்கையாளர்களின் தேவையை பூர்த்தி செய்யும் என்று அமேசான் நிறுவனம் ஒரு வலைப்பதிவில் தெரிவித்துள்ளது.
"இது இந்திய அரசாங்கத்தின் மேக் இன் இந்தியா முன்முயற்சிக்கான எங்கள் உறுதிப்பாட்டை மேலும் வலியுறுத்துகிறது, என்று அமேசான் இந்தியாவின் தலைவரான அமித் அகர்வால் கூறினார். மேலும், உள்நாட்டு தேவையைப் பொறுத்து கூடுதல் சந்தைகள் / நகரங்களுக்கான அளவிடுதல் திறனை தொடர்ந்து மதிப்பீடு செய்யும்," என்றும் கூறியிருக்கிறார்.
லாக்டவுனிலிருந்து இந்தியாவில் டிவி சாதனங்களுக்கு போதுமான தேவை உள்ளது என்று மீடியா பார்ட்னர்ஸ் ஆசியாவின் துணைத் தலைவர் மிஹிர் ஷா கூறினார்.
"அமேசான் ஆண்டுதோறும் ஒரு மில்லியனுக்கும் அதிகமான ஃபயர் டிவி ஸ்டிக்கை விற்கிறது, இது இந்தியாவில் உள்நாட்டில் உற்பத்தி செய்வதற்கான அளவிலான பொருளாதாரங்களை அவர்களுக்கு வழங்குகிறது," என்று ஷா கூறினார்.
இதற்கிடையே, மத்திய அமைச்சரான ரவி சங்கர் பிரசாத் தனது டிவிட்டர் கணக்கில் அமேசான் திட்டம் குறித்துக் குறிப்பிட்டு இருந்தார்.
"இந்தியா ஒரு கவர்ச்சிகரமான முதலீட்டு இடமாகும், மேலும் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் தயாரிப்புத் துறையில் உலகளாவிய விநியோகச் சங்கிலியில் முக்கியப் பங்கு வகிக்க தயாராக உள்ளது. உற்பத்தி இணைக்கப்பட்ட ஊக்கத் திட்டத்தை தொடங்குவதற்கான எங்கள் அரசாங்கத்தின் முடிவு உலகளவில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. அமேசான் எடுத்த முடிவு உள்நாட்டு உற்பத்தி திறனை மேம்படுத்தி வேலைவாய்ப்புகளை உருவாக்கும்,” என்றார் பிரசாத்.
அமேசானின் தற்போதைய திட்டத்தின் மூலம் இந்தியாவில் இருந்து சுமார் 10 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்களை வெளிநாட்டுச் சந்தையில் விற்பனை செய்வது என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்தியாவை அதன் முக்கிய சந்தைகளில் ஒன்றாகக் கருதும் அமேசான், 2025 ஆம் ஆண்டிற்குள் இந்தியாவில் 1 மில்லியன் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. ஏறக்குறைய 7,00,000 வேலை வாய்ப்புகளை நிறுவனம் ஏற்கனவே இந்தியாவில் உருவாக்கியுள்ளது.
கடந்த ஆண்டு, ஜெஃப் பெசோஸ் இந்தியாவில் 1 பில்லியன் டாலர் அதிகரிக்கும் முதலீட்டை அறிவித்திருந்தார், இவற்றில் பெரும்பகுதி சிறு மற்றும் நடுத்தர வணிகங்களை டிஜிட்டல் மயமாக்கப் பயன்படும் என்று கூறப்பட்டது.