இந்திய மதுபான நிறுவனத்தின் முதல் பெண் சிஇஓ ஆன ஹினா நாகராஜன்!
இந்தியாவின் மகிப்பெரிய மதுபான நிறுவனத்தை வழிநடத்த முதல்முறையாக ஒரு பெண் நியமிக்கப்பட்டிருக்கிறார்
இந்தியாவின் மிகப்பெரிய மதுபான நிறுவனமான யுனைடெட் ஸ்பிரிட்ஸ் லிமிடெட் (United Spirits Limited (USL))–ன் புதிய நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார் ஹினா நாகராஜன்.
இந்த நிறுவனமானது அடுத்தாண்டு ஜூலை முதல் பிரிட்டிஷின் மிகப்பெரிய நிறுவனமான டியாஜியோவுக்கு சொந்தமாக உள்ளது. ₹28,500 கோடி மதிப்புள்ள மதுபான நிறுவனத்துக்கு தலைமை தாங்கும் பெண்மணி என்ற பெருமையைப் பெற்றுள்ளார் ஹினா நாகராஜன்.
”இந்தியாவின் மகிப்பெரிய மதுபான நிறுவனத்தை வழிநடத்த முதல்முறையாக ஒரு பெண் நியமிக்கப்பட்டிருக்கிறார். இது தொழில்துறைக்கு சாதகமாக இருக்கும்,” என்று மதுபானங்கள் துறையின் பொருளாதார ஆலோசகர் சஞ்சய் ஜெயின் தெரிவித்துள்ளார் .
பன்முகத் திறைமை வாய்ந்த ஒருவர் மிகவும் பிரபலமான நிறுவனத்தின் தலைமை சவாலை எதிர்கொள்கிறார். அவரது இந்த உயர்வுக்கு, அவரின் கடந்தகால வெற்றிகரமான நிலையான வரலாறுகள் தான் காரணம், என்று Multiversal Advisory நிர்வாக பங்குதாரர் பிரியா செட்டி-ராஜகோபால் கூறியுள்ளார்.
பொதுவாக மதுபானத் துறையை பொறுத்தவரை ஆண்கள் ஆதிக்கம் நிறைந்ததாகத்தான் பார்க்கப்படுகிறது. யு.எஸ்.எல் இன் முன்னாள் தலைவர் விஜய் மல்லையா மற்றும் அலையட் பிளெண்டர்ஸ் (Allied Blenders) ன் கிஷோர் சாப்ரியா உள்ளிட்ட பலரும் இந்தத் துறையில் ஆதிக்கம் செலுத்துபவர்களாக இருக்கிறார்கள். இதை உடைத்து பெண்கள் தற்போது இந்த துறையில் முன்னேறி வருகிறார்கள். பலரும் இதற்கு முன்னுதாரணமாக இருந்திருக்கிறார்கள்.
அந்தவகையில் 2012ம் ஆண்டு Diageo-வின் நிர்வாக இயக்குநராக பொறுப்பேற்றார் அபந்தி சங்கரநாராயணன். முதன்முறையாக பெண் ஒருவர் அப்போது அந்த நிறுவனத்தின் முக்கியப் பொறுப்பை பெற்றார். தற்போது, யு.எஸ்.எல். நிறுவனத்தின் முக்கிய ஆலோசகர் மற்றும் கார்ப்பரேட் விவகார அலுவலராக அபந்தி சங்கரநாராயணன் உள்ளார். 2012 முதல் 2015ம் ஆண்டு வரை ஃபார்ச்சூன் Fortune இந்தியாவின் சக்திவாய்ந்த பெண்கள் பட்டியலில் நான்கு முறை அவர் இடம்பெற்றுள்ளார்.
அதேபோல ரோஷினி சனா ஜெய்ஸ்வால். இவர் தனது குடும்பத்தின் சார்பில் நடத்தப்படும் Jagatjit Industries Limited-ன் விஸ்கி தயாரிப்பாளராக கடந்த 2015ம் ஆண்டு பொறுப்பேற்றார். ஜகத்ஜித் இண்டஸ்ட்ரீஸின் விளம்பரதாரரும் தலைமை மறுசீரமைப்பு அதிகாரியுமான ரோஷினி சனா ஜெய்ஸ்வால், பெரும்பாலும் ஆண் ஆதிக்கம் செலுத்தும் மதுபானத் துறையில் தனது அடையாளத்தை வெளிப்படுத்தும் ஒரு பெண்ணாக இருந்து வருகிறார்.
ஹினா நாகராஜன் கடந்த 2018ம் ஆண்டு டியாஜியோ நிறுவனத்தில இணைந்தார். அப்போது கானா, கேமரூன், எத்தியோப்பியா, அங்கோலா மற்றும் பல நாடுகளில் செயல்படும் இந்நிறுவனத்தின் ஆப்பிரிக்கா பிராந்திய சந்தைகளுக்கு (ARM) தலைமை தாங்கினார்.
முன்னதாக Reckitt Benckiser, நெஸ்லே இந்தியா மற்றும் Mary Kay India ஆகிய நிறுவனங்களில் சீனியர் மார்க்கெட்டிங் மற்றும் ஜென்ரல் மேனேஜ்மெண்ட் பதவிகளை வகித்துள்ளார்.
தொகுப்பு: மலையரசு