1.2 லட்சம் சதுர அடியில் 90% பெண் ஊழியர்களுடன் கோவையில் Flipkart தொடங்கிய மையம்!
1,200 பேருக்கு நேரடி வேலைவாய்ப்பு!
நாட்டின் முன்னணி இணையவழி சந்தையான ஃபிளிப்கார்ட், கோயம்புத்தூரில் தனது மளிகை சேவைகளை பூர்த்தி செய்யும் விதமாக இப்பகுதியில் தனது முதல் பூர்த்தி மையம் அல்லது கிடங்கை திறந்துள்ளது.
1.2 லட்சம் சதுர அடி பரப்பளவில் தொடங்கப்பட்டுள்ள இந்த மையம் மூலமாக 1,200 பேருக்கு நேரடி வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள ஃபிளிப்கார்ட்டின் அறிக்கை ஒன்று, ஆரம்ப கட்டங்களில், இந்த மையத்தின் ஒரு பகுதி மட்டுமே பயன்படுத்தப்படும், என்றது.
இதற்காக 500க்கும் மேற்பட்டோர் பணியமர்த்தப்படுவார்கள். எனினும், ஒட்டுமொத்த தொழிலாளர்களில் 90 சதவிகிதம் பெண்களால் இந்த மையம் இனி இயக்கப்படும். பெண்களையும் அவர்களின் தொழில் முன்னேற்றத்தையும் ஆதரிக்கும் பணியிடக் கொள்கைகளை கொண்ட Vividhta கீழ், பெண்களை இந்த மையத்தில் வேலைக்குஅ சேர்க்க திட்டமிடப்பட்டுள்ளது.
பெண்கள் பணியமர்த்தப்பட இருப்பதால் திருமணமான பெண்கள் தங்கள் குழந்தைகளுக்கு கவனிக்க வேண்டி வரலாம். இதற்காக குழந்தைகளைப் பார்த்துக்கொள்ளும் குழந்தைகள் காப்பகம், மற்றும் உணவு வழங்குமிடம், போக்குவரத்து வசதிகள் ஏற்பாடு செய்து தரப்படும்.
புதிய பூர்த்தி மையம் (எஃப்சி) தென் பிராந்தியத்திலிருந்து அதிகமான நுகர்வோரைப் பூர்த்தி செய்வதற்கான ஃபிளிப்கார்ட்டின் திறன்களை மேலும் அதிகரிக்கும், என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, சென்னைக்குப் பிறகு தமிழ்நாட்டில் ஃபிளிப்கார்ட்டின் இரண்டாவது மளிகை பூர்த்தி மையம் இதுவாகும். அதேபோல் தென்னக மாநிலங்களில் 9வது மையமாகும்.
இந்த மையம் தொடர்பாக பேசியுள்ள தமிழக அரசின் தகவல் தொழில்நுட்பத் துறை முதன்மைச் செயலாளர் நீரஜ் மிட்டல்,
“கோயம்புத்தூரில் புதிதாக திறக்கப்பட்ட ஃபிளிப்கார்ட்டின் இந்த மையம் உள்ளூர் சுற்றுச்சூழல் அமைப்பிற்கான பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும். அதே நேரத்தில் ஊழியர்களை டிஜிட்டல் முறையில் உயர்த்தும். வளர்ந்து வரும் ஐடி அடிப்படையிலான வணிகங்களுக்கு ஐடி துறை தொடர்ந்து ஆதரவை வழங்கும் மற்றும் அவற்றின் வளர்ச்சிக்கு ஏதுவான கொள்கைகளை உருவாக்கும்," என்று பேசியிருக்கிறார்.
இதற்கிடையே, புதிய பூர்த்தி மையம் தொடங்கப்பட்ட பின் பேசிய ஃபிளிப்கார்ட்டின் தலைமை நிறுவன விவகார அதிகாரி ரஜ்னீஷ் குமார்,
“மளிகை என்பது மின்வணிகத்திற்குள் வேகமாக வளர்ந்து வரும் வகைகளில் ஒன்றாகும், மேலும் நாட்டின் உள்நாட்டு மின்வணிக சந்தையாக, வாடிக்கையாளர்களின் அத்தியாவசியத் தேவைகளை அவர்களின் வீட்டு வாசல்களில் பாதுகாப்பான மற்றும் சுகாதாரமான முறையில் பூர்த்தி செய்வதில் நாங்கள் முன்னணியில் உள்ளோம்.
”கோவை, ஒரு பொருளாதார மையமாக இருக்கும்போது, அருகிலுள்ள பிராந்தியங்களையும் உள்ளடக்கி திறம்பட சேவை செய்வதற்கான ஒரு இடத்தையும் வழங்குகிறது. இதனால் தான் இந்த நகரத்தில் எங்கள் முதல் மளிகைக் கிடங்கைத் திறப்பது அதற்கு ஒரு சான்றாக அமைகிறது," என்றுள்ளார்.
அவரைத் தொடர்ந்து பேசிய ஃபிளிப்கார்ட்டின் மளிகைப் பிரிவு துணைத் தலைவர் ஸ்மிருதி ரவிச்சந்திரன், ”ஒரு உள்நாட்டு மின்வணிகச் சந்தையாக, ஆன்லைன் வர்த்தகத்தின் வசதியை நாடு முழுவதும் உள்ள வாடிக்கையாளர்களின் வீட்டு வாசலில் கொண்டு வருவதில் ஃபிளிப்கார்ட் ஒரு முக்கியப் பங்கைக் கொண்டுள்ளது," என்று பெருமை தெரிவித்துள்ளார்.
ஃபிளிப்கார்ட் நிறுவனத்துக்கென மொத்த பரப்பளவு 1.5 மில்லியன் சதுர அடி கொண்ட எட்டு பூர்த்தி மையங்கள் உள்ளன. அதேபோல், 150 விநியோக மையங்கள் உள்ளன. இதன் மூலம் மாநிலத்தில் 52,000 க்கும் மேற்பட்ட மக்களுக்கு நேரடி வேலைவாய்ப்பு கிடைத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆங்கில கட்டுரையாளர்: திம்மையா | தமிழில்: மலையரசு