கார் விபத்தில் டாடா சன்ஸ் முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்திரி உயிரிழப்பு!
போலீஸ் அறிக்கையின்படி, சைரஸ் மிஸ்திரி அகமதாபாத்தில் இருந்து மும்பைக்கு காரில் சென்று கொண்டிருந்தபோது பால்கர் மாவட்டம் அருகே இந்த விபத்துக்குள்ளாகியுள்ளது.
டாடா சன்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்திரி (Cyrus Mistry), மும்பை அருகே உள்ள மகாராஷ்டிராவின் பால்கர் மாவட்டத்தில் காரில் பயணித்துக் கொண்டிருக்கும் போது, டிவைடரில் மோதியதில் சாலை விபத்தில் உயிரிழந்தார்.
இந்த சம்பவம் பற்றி மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் உறுதி படுத்தியுள்ளார். மிஸ்திரி அகமதாபாத்தில் இருந்து மும்பைக்கு மெர்சிடிஸ் பென்ஸ் காரில் சென்று கொண்டிருந்தபோது இந்த விபத்து நிகழ்ந்ததாக அவர் தெரிவித்தார்.
சாலை விபத்தில் இறந்த சைரஸ் மிஸ்திரி
இன்று பிற்பகல் 3:15 மணியளவில் அகமதாபாத்தில் இருந்து மும்பைக்கு மிஸ்திரி பயணம் செய்தபோது இந்த விபத்து ஏற்பட்டது. சூர்யா ஆற்றின் மீதுள்ள பாலத்தில் அவர் பயணித்து கொண்டிருந்தபோது இந்த விபத்து நடந்துள்ளது. தற்போதைக்கு இது விபத்து போல் தெரிகிறது என பால்கர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாசாகேப் பாட்டீல் தெரிவித்தார்.
அவருடன் பயணித்த கார் டிரைவர் உட்பட மற்ற இருவர் படுகாயம் அடைந்தனர். காயமடைந்த அனைவரும் குஜராத்தில் உள்ள மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து கூடுதல் விவரங்கள் பெறப்படும் என எஸ்பி மேலும் தெரிவித்தார்.
காசா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சூர்யா நதிப் பாலத்தில் உள்ள சரோதி நாகா என்ற இடத்தில் இந்த விபத்து நிகழ்ந்ததாக காசா காவல் நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மிஸ்திரியின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக காசா கிராமப்புற மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளது.
54 வயதான மிஸ்திரிக்கு மனைவி ரோஹிகா சாக்லா மற்றும் குழந்தைகள் ஃபிரோஸ் மிஸ்திரி மற்றும் ஜஹான் மிஸ்திரி உள்ளனர். ஜூலை 4, 1968ல் பிறந்த மிஸ்திரி, ஷபூர்ஜி பல்லோன்ஜி குழுமத்தின் முன்னாள் தலைவரும், இந்திய-ஐரிஷ் தொழிலதிபருமான பல்லோன்ஜி மிஸ்ட்ரியின் இளைய மகனாவார். டாடா குழுமத்தின் மிகப்பெரிய பங்குதாரர் குழுவாக இருந்தது.
டாடா குழுமத்தின் தலைவராக பணியாற்றிய டாடா குடும்பத்திற்கு வெளியே இரண்டாவது நபர் மிஸ்திரி ஆவார். டாடா குழுமத்தின் செயல் தலைவராக 2012 இல் ரத்தன் டாடாவுக்குப் பதிலாக 2016 வரை பதவியில் இருந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் இவரது தந்தை ஷபூர்ஜி பல்லோன்ஜி மரணம் அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.