ரூ.168 கோடி ஜாக்பாட் பணத்தை நண்பருடன் பகிர்ந்து கொண்ட ட்ரூ ஃப்ரெண்ட்!
என் ஃப்ரெண்டப் போல யாரு மச்சான்... என்ற பாடலுக்கு ஏற்ப வாக்கு தவறாமல் நடந்து கொண்ட டாம் குக்.
டாம் குக், ஜோசப் பீனி இருவரும் அமெரிக்காவின் விஸ்கான்சின் நகரைச் சேர்ந்தவர்கள். இவர்கள் நீண்ட நாள் நண்பர்கள். 1992ம் ஆண்டு இவர்கள் இருவரும் தங்களுக்குள் ஒரு ஒப்பந்தம் போட்டுக்கொண்டனர். அதன்படி இருவரில் யாருக்கு 'பவர்பால் ஜாக்பாட்' கிடைத்தாலும் அந்தத் தொகையை இருவரும் சமமாகப் பிரித்துக்கொள்ளவேண்டும்.
இத்தனை ஆண்டுகள் கடந்த நிலையில் போன மாதம் டாம் குக், மெனோமானி நகரில் சினெரிஜி கூப் லாட்டரி டிக்கெட் வாங்கி 22 மில்லியன் டாலர் தொகையை வென்றுள்ளார். அதாவது இந்திய மதிப்பின்படி 164 கோடி ரூபாய் வென்றுள்ளார்.
குக் என்னதான் மகிழ்ச்சியில் திளைத்தாலும் தன் நண்பருக்குக் கொடுத்த வாக்கை மறக்கவில்லை. 28 ஆண்டுகளுக்கு முன்னர் போட்ட ஒப்பந்தத்தின்படி நண்பருடன் ஜாக்பாட் தொகையைப் பகிர்ந்துகொள்ளத் தீர்மானித்தார்.
குக் இந்த மகிழ்ச்சியான செய்தியைத் தெரிவிக்க தனது நண்பர் ஜோசப் பீனியை அழைத்துள்ளார். தகவலறிந்து ஜோசப் பீனியால் அதை நம்பவே முடியவில்லை. அவர்கள் போட்ட ஒப்பந்தத்தின்படி இருவரும் இந்தத் தொகையை சமமாகப் பிரித்துக்கொள்ள உள்ளனர்.
ஜோசப் பீனி ஏற்கெனவே பணி ஓய்வு பெற்றுவிட்ட நிலையில் இந்த ஜாக்பாட் கிடைத்ததும் குக் பணி ஓய்வு பெற்றுக்கொண்டார்.
இந்தத் தொகையை எப்படி செலவிடுவது என்பது குறித்து இருவரும் பெரிதாக திட்டமிடவில்லை என்றாலும் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக நேரம் செலவிட உள்ளனர்.
“எங்களுக்கு பிடித்ததுபோல் மகிழ்ச்சியாக வாழலாம். இதைவிட சிறப்பாக பணி ஓய்வு பெறமுடியாது,” என்றார் குக். இருவரும் உல்லாசமாக ஊர் சுற்ற திட்டமிட்டுள்ளனர்.
தகவல் உதவி: The Guardian