இந்தியாவிலேயே முதன்முறை: சென்னை மாநகராட்சியின் வாட்ஸ் அப் முயற்சி!
பெருநகர சென்னை மாநகராட்சி இந்தியாவிலேயே முதன்முறையாக மக்களுடன் தொடர்பில் இருக்க பிரத்யேக வாட்ஸ்அப் தகவல் தொடர்பு முறையைத் தொடங்கியுள்ளது.
சென்னை பெருநகர மாநகராட்சி பிரத்யேக வாட்ஸ்அப் கம்யூனிகேஷன் சிஸ்டம் ஒன்றை புதிதாக அறிமுகப்படுத்தியுள்ளது.
உலகின் இரண்டாவது பழமையான மாநகராட்சி என்ற புகழைப்பெற்றுள்ள பெருநகர சென்னை மாநகராட்சி இந்தியாவிலேயே முதன்முறையாக பிரத்யேக வாட்ஸ்அப் தகவல் தொடர்பு முறையைத் தொடங்கியுள்ளது. இதன்மூலம்,
குடிமக்கள் இந்த வாட்ஸ் அப் மூலம் தங்களின் கேள்விகளையும், குறைகளையும் அதிகாரிகளுக்குத் தெரிவிக்க முடியும். மேலும், மக்களுக்கான குறைகள் விரைவில் தீர்க்கப்படும் என்றும் மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெருநகர மாநகராட்சி இதற்கான வாட்ஸ்அப் எண்ணையும் வெளியிட்டுள்ளது.
மாநகராட்சியின் அதிகாரப்பூர்வ எண்ணான ‘9499933644’ இந்த எண்ணுக்கு தங்களுடைய வாட்ஸ்அப்’ இல்லிருந்து பொதுமக்கள் ஒரு ‘ஹாய்’ என்று அனுப்பினால் போதும். இதன்வழியாக மக்கள் தங்கள் பிரச்னைகளை எழுப்பவும், அதற்கான தீர்வுகளை பெறவும் முடியும். இந்த வாட்ஸ்அப் வசதி தற்போது ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழிகளில் பயன்பாட்டில் இருக்கிறது.
இந்த வாட்ஸ்அப் வசதி ஒருங்கிணைப்பு மூலம், மாநகராட்சி அதிகாரிகளுக்கும் பொதுமக்களுக்கும் இடையில் உடனடி மற்றும் பயனுள்ள தகவல்தொடர்புகளை எளிதாக்குவதை ஜி.சி.சி நோக்கமாகக் கொண்டுள்ளது. தானியங்கி முறையில் (Automatic) மக்களின் குறைகளை பதிவு செய்யும் இந்த முறையின் மூலம், மக்கள் தாங்கள் பதிவிட்ட பிரச்னைகளுக்கான நிலை என்ன என்பது குறித்தும் டிராக் செய்துகொள்ளும் வசதியும் இதில் உள்ளது.
முக்கியமான அறிவிப்புகள், நிகழ்வுகள், அப்டேட்ஸ்கள், ஹெல்ப்லைன்கள் போன்றவை குறித்த தகவல்களை அறிந்து கொள்ள இது வழி வகுக்கும். சென்னையில் கொரோனா தடுப்பூசி தொடர்பான தகவல்களையும் இதன்மூலம் பெற முடியும்.
இந்த முயற்சி குறித்து சென்னை கார்ப்பரேஷனின் கமிஷனர் திரு.ஜி. பிரகாஷ் ஐ.ஏ.எஸ் கூறுகையில்,
“நாங்கள் எப்போதும் அனைத்து தொழில்நுட்ப முன்னேற்றங்களிலும் முன்னணியில் இருக்க விரும்புகிறோம். மேலும் சென்னையிலுள்ள குடிமக்களுக்கு தடையற்ற தகவல் தொடர்பு முறையை வழங்க விரும்புகிறோம். அனைத்து இடங்களிலும் பரவலாக இருக்கும் வாட்ஸ்அப், குடிமக்களுடன் தகவல்களைப் பரிமாறிக்கொள்வது மிகவும் வசதியானதாகவும் விரைவாகவும் மாறிவிட்டது. தொடர்ந்து மாநகர மக்களுக்கு சிறப்பான சேவைகளை வழங்க இதுபோன்ற பல்வேறு புதிய முயற்சிகளை நாங்கள் உருவாக்குவோம்” என்றார்.
வாட்ஸ்அப் இந்தியாவின் பொது கொள்கை இயக்குனர் திரு. சிவநாத் துக்ரால் பேசுகையில்,
“ஜி.சி.சி உடனான எங்கள் தொடர்பு டிஜிட்டல் இந்தியாவை மேலும் இணைக்கவும் விழிப்புணர்வுடனும் ஊக்குவிக்கவும் கட்டமைக்கவும் உதவும் எங்கள் பார்வையை பிரதிபலிக்கிறது. தொற்றுநோய் காலத்தில், பலர் டிஜிட்டல் கருவிகளை நம்பியிருப்பதைக் காட்டுகிறது மற்றும் நிர்வாகத்திற்கான தொழில்நுட்பத்தை மேம்படுத்துவது இன்னும் முக்கியமானதாகிவிட்டது. இந்த முயற்சியின் ஒரு பகுதியாக இருப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம், எங்கள் தளம் நாட்டிற்கு மதிப்பைக் கொண்டு வர முடியும் என்பதில் உறுதியுடன் இருக்கிறோம்,” என்றார்.
பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்களை உருவாக்குதல், வரி செலுத்துதல் குறித்த சரியான நேரத்தில் நினைவூட்டல்கள் மற்றும் தேர்தல் சேவைகள் போன்ற, குடிமக்களை மையமாகக் கொண்ட சேவைகளை வழங்க ஜி.சி.சி வாட்ஸ்அப் தொடர்பு முறையைப் பயன்படுத்தும். இந்தியாவில் நிர்வாக அமைப்புகளுடன் பயனுள்ள கூட்டாண்மையுடன், நாட்டில் சாதகமான மாற்றத்தைக் கொண்டுவர வாட்ஸ்அப் உறுதிபூண்டுள்ளது.