தமிழக ஊரகப் பகுதிகளில் சலூன் கடைகள் திறக்க அனுமதி!
பெருநகர சென்னை காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதி, இதர மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகள் தவிர ஏனைய ஊரக பகுதிகளில் முடி திருத்தம் நிலையங்கள் 19 மே முதல் இயங்குவதற்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.
கொரோனா நோய் தொற்றின் தாக்கத்தை கட்டுப்படுத்த தொடர்ந்து பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக, தற்போது அறிவிப்பு வெளியிட்டுள்ளது அரசு.
தற்போது முடி திருத்தும் தொழிலாளர்களின் தொடர் கோரிக்கையை பரிசீலித்து, பெருநகர சென்னை காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதி, இதர மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகள் தவிர ஏனைய ஊரக பகுதிகளில் முடி திருத்தம் நிலையங்கள் 19 மே முதல் இயங்குவதற்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.
இந்த முடிதிருத்தம் நிலையங்களில் பணிபுரியும் பணியாளர்கள் மற்றும் வரும் வாடிக்கையாளர்கள் கண்டிப்பாக சமூக இடைவெளி பின்பற்றுமாறும், கையுறை அணிந்து முடி திருத்தம் செய்யுமாறும், முகக்கவசம் அணிவதை சலூன் கடை உரிமையாளர்கள் உறுதிப் படுத்த அரசு வலியுறுத்தியுள்ளது.
அதே போல் இயங்கும் அனைத்து சலூன் கடைகளும் ஒரு நாளைக்கு குறைந்தது ஐந்து முறையாவது கிருமிநாசினி கொண்டு சானிடைஸ் செய்யுமாறும், பணிபுரிபவர்கள் அனைவரும் அடிக்கடி சோப்பு போட்டு கைக்கழுவுவதை உறுதி செய்யவும் கடை உரிமையாளர்களை அறிவுறுத்தியுள்ளது தமிழக அரசு.
முடிதிருத்தகங்களுக்கு இயங்குவது தொடர்பான இன்னும் சில விரிவான வழிமுறைகளை விரைவில் தமிழக அரசு வழங்கும் என்றும் அறிக்கையில் தெரிவித்துள்ளது தமிழக அரசு.
கொரோனா வைரஸ் நோய் தொற்றை தடுப்பதற்காக மாநில பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ், ஊரடங்கு உத்தரவு மே 31ம் தேதி நள்ளிரவு 12 மணிவரை ஏற்கனவே நடைமுறையில் உள்ள பல்வேறு வழிமுறைகள் மற்றும் தளர்வுகளுடனும் நீட்டிப்பு செய்யப்படுவதாக நேற்று அறிவிப்பு வெளிவந்துள்ளது. அதில் நோய் தொற்று அதிகமுள்ள 12 மாவட்டங்களில் ஏற்கனவே நடைமுறையில் உள்ள கட்டுப்பாடுகளில் எந்த மாற்றமும் இல்லாமல் ஊரடங்கு தொடரும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
தகவல்: டிஐபிஆர்