#HBDKamal : 'நீ பெரும் கலைஞன்; நிரந்தர இளைஞன்; உன்னைப் பெற்றதில் பெருமை கொள்ளுது நாடு'
நடிகர் கமல் இன்று தனது 66வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இவருக்கா இத்தனை வயது என பார்ப்பவர்களை ஆச்சர்யப்படுத்தும் வகையில் இப்போதும் கலைத் துறையிலும், அரசியலிலும் சுறுசுறுப்பாக இயங்கி வருகிறார். சகலகலா வல்லவனாக விஸ்வரூபம் எடுத்து நிற்கிறார் கமல்.
இந்தியத் திரையுலகின் பொக்கிஷம் நடிகர் கமல். உலக சினிமா வரலாற்றில் நிச்சயம் கமலைப் பற்றி எழுத ஓராயிரம் விசயங்கள் இருக்கிறது. தன் குழந்தைப் பருவத்திலேயே நடிகராக சினிமாவிற்குள் நுழைந்து, இயக்குநராக, தயாரிப்பாளராக, பாடகராக, கவிஞராக, எழுத்தாளராக, சின்னத்திரை தொகுப்பாளராக என பன்முகத் திறமையாளராக தன்னைத் தானே செதுக்கிக் கொண்டவர்.
1954ம் ஆண்டு நவம்பர் 6ம் தேதி இராமநாதபுரம், பரமக்குடியில் பிறந்தவர் கமல். அப்பா சீனிவாசன் வழக்கறிஞர். தாயார் பெயர் ராஜலட்சுமி. கமலுடன் உடன் பிறந்தவர்கள் இரண்டு சகோதரர்கள் ஒரு சகோதரி. கமல் பிறக்கும் போது அவரது மூத்த சகோதரரான நடிகர் சாருஹாசனுக்கு 24 வயது.
பரமக்குடியில் ஆரம்பக்கல்வி கற்றார் கமல். சகோதரர்களின் உயர்கல்விக்காக குடும்பம் சென்னைக்கு இடம்பெயர, கமலும் சென்னை பள்ளிக்கு மாறினார். மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு கமல் பிறந்ததாலும், வயோதிகத்தின் காரணமாகவும் கமலின் தாயாருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதனால் அவர் ஏவிஎம் மெய்யப்ப செட்டியாரின் மனைவியிடம் வைத்தியம் பார்த்தார். அப்போது தாயுடன் சென்ற கமலுக்கு 1960ம் ஆண்டு களத்தூர் கண்ணம்மாவில் குழந்தை நட்சத்திரமாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
அப்போது தொடங்கியது கமலின் திரைப்பயணம். கமலுக்கு வயது 66 என்றால், அவரது திரை வாழ்க்கைக்கு வயது 60. அறிமுக படத்திலேயே குடியரசுத்தலைவர் விருதைப் பெற்றார் கமல். தொடர்ந்து குழந்தை நட்சத்திரமாக ஆறு படங்களில் நடித்தார். எம்.ஜி.ஆர்., சிவாஜி, ஜெமினி என அப்போது தமிழ் சினிமாவின் ஜாம்பவான்களாக இருந்தவர்கள் படங்களில் நடித்தார். சினிமாவோடு மேடை நாடகங்கள், நடனம் என தனது நீண்ட கலைப்பயணத்திற்கான அஸ்திவாரங்களைப் போட ஆரம்பித்தார்.
நடிப்பைப் போலவே நடனத்தின் மீதும் கொண்ட தீராக்காதலால் பரதம், கதகளி, குச்சுப்புடி போன்றவற்றை முறைப்படி கற்றார். பின்னர் நடிப்பதற்கு சிறிய இடைவெளி கொடுத்தவர், துணை நடன ஆசிரியராக தங்கப்பன் என்பவரிடம் சில படங்களுக்கு பணியாற்றினார்.
பின்னர் இளைஞனாக தனது 19வது வயதில் பாலச்சந்தரின் 'அரங்கேற்றம்' படத்தின் மூலம் மீண்டும் நடிக்கத் தொடங்கினார். சிறுவயது முதலே தமிழில் நடித்து வந்தாலும், நாயகனாக அறிமுகமானது ‘கன்னியாகுமரி’ எனும் மலையாள படத்தில் தான். அத்திரைப்படதிற்காக முதல் பிலிம்பேர் விருதும் பெற்றார் கமல்.
அடிக்கடி அவர் பிக் பாஸ் மேடையில் கூறும் ஒரு விசயம்,
‘இப்போது உங்களுக்குக் கிடைப்பது போன்ற திரைத்துறைக்குள் செல்லும் வாய்ப்பு எங்களுக்கு அவ்வளவு எளிதாக கிடைத்து விடவில்லை. உங்களைப் பார்த்தால் பொறாமையாக இருக்கிறது’ என்பது. இது வெறும் வார்த்தைகள் அல்ல.. அவர் கடந்து வந்த பாதையில் கிடைத்த அனுபவம்.
குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்த போதும், நாயகனாக அறிமுகமான முதல் படத்திலேயே விருது பெற்ற போதும், தொடர்ந்து அவருக்கு பட வாய்ப்புகள் குவிந்து விடவில்லை. தன்னை அடையாளப் படுத்திக் கொள்ள கமல் ரொம்பவே பாடுபட வேண்டி இருந்தது. வெற்றியாளரின் வாழ்க்கையைத் திருப்பிப் பார்த்தால் அதில் நிச்சயம் நிறைய அவமானங்கள் இருக்கும் என்பார்கள், கமல் வாழ்க்கையும் அப்படித்தான்.
அப்போதெல்லாம் நாயகன், நாயகி போன்றோர் இப்போது இருப்பது போல் ஒல்லியாக இருக்க மாட்டார்கள். சற்று பூசிய உடல்வாகுடன் பார்ப்பதற்கே பக்குவமான ஆளாக இருந்தால் தான் நாயகனாக இருக்க முடியும். ஆனால் கமலோ ஒல்லியாக சிறு பையன் போன்ற தோற்றத்தில் இருந்ததால் அவர் சந்தித்த பரிகாசங்கள் ஏராளம். ஆனால் தன்னைப் பற்றிய மற்றவர்களின் கணிப்பு தவறு என தன் வெற்றிகளால் நிரூபித்துக் காட்டினார் கமல்.
வித்தியாசம் வித்தியாசமான கதாபாத்திரங்களாகத் தேர்வு செய்தார். கமலின் நடிப்பு பயணத்தில் மாபெரும் திருப்புமுனையைத் தந்தது பாரதிராஜா இயக்கத்தில் அவர் நடித்த ‘16 வயதினிலே’ படம். உயிரைக் கொடுத்து நடிப்பது என்பார்களே அந்தளவிற்கு தன்னால் முடிந்தளவிற்கு தான் நடிக்கும் கதாபாத்திரங்களுக்கு உயிர் கொடுத்தார். அதனால் தான் இப்போதும் விருமாண்டி என்றால் ஒரு முகமும், பம்மல் கே சம்பந்தம் என்றால் வேறு முகமும், வேட்டையாடு விளையாடு என்றால் கெத்து முகமும் அவரால் காட்ட முடிகிறது.
நாயகனாகத்தான் நடிப்பேன் என அடம் பிடிக்காமல் துணைக் கதாபாத்திரமாக இருந்தாலும் சரி, வில்லனாக இருந்தாலும் சரி துணிந்து நடித்தார். நாகேஷ், சௌகார் ஜானகி என மூத்த நடிகர்களை வைத்து படம் கொடுத்துக் கொண்டிருந்த பாலச்சந்தரின் ஆஸ்தான நாயகன் ஆனார் கமல். பாலச்சந்தரின் இயக்கத்தில் மட்டும் சுமார் 23 படங்களில் நடித்துள்ளார். ரஜினி சிறிய கதாபாத்திரத்தில் அறிமுகமான ‘அபூர்வ ராகங்கள்’ படமே தமிழில் கமல் நாயகனாக அறிமுகமான முதல் படம்.
தொடர்ந்து மூன்று முடிச்சு, அவர்கள், 16 வயதினிலே, நினைத்தாலே இனிக்கும் என ரஜினியும், கமலும் சேர்ந்து நடித்து பல வெற்றிப்படங்களைக் கொடுத்தனர். ஒரு கட்டத்தில் இருவருக்குமே தனித்தனியே பெரிய ரசிகர் வட்டம் உருவாகி விட்டதை உணர்ந்து, இனி சேர்ந்து நடிக்க வேண்டாம் என இருவரும் முடிவெடுத்தனர். ஆனால் மீண்டும் அவர்கள் இருவரையும் ஒன்றாக திரையில் பார்க்க வேண்டும் என்பதே அவர்களது ரசிகர்களின் கனவாக இருக்கிறது. அதற்கான முயற்சிகளும் ஒருபுறம் நடந்துதான் வருகிறது.
1960ல் தொடங்கிய ஓட்டம் தொடர்ந்து இன்றளவும் இளம் நாயகர்களுக்கு போட்டியாக காதல், ஆக்சன், ரொமான்ஸ், செண்டிமெண்ட் என எல்லா தளங்களிலும் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி முன்னணி நடிகர் என்ற இடத்திலேயே நீடித்திருக்கிறார்.
தனது 25வது படமான அபூர்வ ராகங்கள் படத்திற்காக தமிழுக்கான முதல் ஃபிலிம்பேர் விருது வென்றார். 1983 ஆம் ஆண்டு இயக்குநர் பாலு மகேந்திரா இயக்கிய மூன்றாம் பிறை, 1987ல் மணிரத்னம் இயக்கிய ’நாயகன்’ மற்றும் 1996ல் ஷங்கர் இயக்கிய ’இந்தியன்’ என தேசிய விருதுகளைப் பெற்றார்.
1992 ஆண்டு சிறந்த மாநில மொழி திரைப்படத்திற்கான தேசிய விருதை தேவர் மகன் படம் பெற்றது, அப்படத்தின் தயாரிப்பாளர் என்ற முறையில் கமல் அந்த தேசிய விருது பெற்றார். 1979 ஆம் ஆண்டு தமிழக அரசின் கலைமாமணி விருதும், 1990ல் இந்திய அரசு பத்மஸ்ரீ விருதும், 2014 இல் பத்ம பூசண் விருதும் வழங்கி கமலைக் கௌரவித்தது. 2016 இல் செவாலியே விருது பெற்றார் கமல்.
தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் என ஐந்து இந்திய மொழிகளில் கமல் நடித்துள்ளார். ஐந்து மொழிகளிலும் சேர்த்து 19 பிலிம்பேர் விருதுகளைப் பெற்ற கமல்,
‘தயவுசெய்து இனி எனக்கு ஃபிலிம்பேர் விருது வேண்டாம். புதியவர்களுக்கு அதைக் கொடுங்கள்’ என 2000ம் ஆண்டு கேட்டுக் கொண்டார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
இதுவரை 220க்கும் மேற்பட்ட படங்களில் கமல் நடித்துள்ளார். அதில் பல முயற்சிகள் ரகம் தான். மற்ற நடிகர்கள் நடிக்கத் தயங்கும் வேடங்களாகத் தேர்வு செய்து நடித்தார். தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை கதாபாத்திரத் தேர்வில் அடுத்த சிவாஜியாக உருவானார். சில படங்கள் கமலைத் தவிர வேறு யாரும் செய்திருக்கவே முடியாது என்றளவில் திரைத்துறையைச் சேர்ந்தவர்களே பாராட்டும் வகையில் கதாபாத்திரத்திற்காக தன்னை அப்படியே மாற்றிக் கொள்ளக் கூடியவர் கமல்.
குணா படத்தில் மனவளர்ச்சி குன்றியவராக, அவ்வை சண்முகியில் பெண் கதாபாத்திரமாக, தசாவதாரம் திரைப்படத்தில் பத்து வேடங்கள் என ஒவ்வொரு படத்திலும் தனது அர்ப்பணிப்பான நடிப்பால் ரசிகர்களை அசர வைத்தவர். அதிலும் குறிப்பாக ஹீரோ என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற இலக்கணத்தை அன்பே சிவம் படம் மூலம் உடைத்தார்.
இதுவரை 27 படங்களை அவர் தயாரித்துள்ளார். ஹேராம், விருமாண்டி, விஸ்வரூபம் போன்ற படங்களை இயக்கியுள்ளார். மற்ற நடிகர்களின் படங்களில் இருந்து கமலின் படங்கள் வேறுபட்டதற்கு முக்கியக் காரணம் கதையின் களம் மட்டும் அல்ல, அதில் அவர் புகுத்திய தொழில்நுட்பம், கோணம் போன்றவை தான்.
அபூர்வ சகோதரர்கள் படத்தில் குள்ளமான கதாபாத்திரத்தில் நடித்து அசர வைத்தார். இன்றளவும் அவர் எப்படி கால்களை மடித்துக் கொண்டு நடந்தார், ஓடினார், ஆடினார், சண்டை போட்டார் என்ற ரகசியத்தை கமல் உடைக்காமல் தான் வைத்திருக்கிறார். காரணம் அதற்குப் பின்னால் அவர் தந்த உழைப்பு.
இரட்டை வேட படங்கள் என்றால் மருவை முகத்தில் ஒட்டி வித்தியாசம் காட்டினால் போதும் என நினைக்க மாட்டார் கமல். இரண்டு கதாபாத்திரத்திற்கும் இடையேயான வித்தியாசத்தைக் காட்ட மிகவும் மெனக்கெடுவார். அப்படி அவரது மெனக்கெடல்களில் தமிழ் சினிமாவிற்கு கிடைத்த பொக்கிஷங்கள் தான் அபூர்வ ராகங்கள், புன்னகை மன்னன், இந்தியன், ஆளவந்தான் போன்றவை.
நாயகன், தேவர்மகன், குருதிப்புனல், இந்தியன், ஹேராம், சுவாதி முத்யம் (தெலுங்கு), சாகர் (இந்தி) என இந்திய அளவில் ஆஸ்கருக்கு கமலின் படங்கள் அதிகம் அனுப்பப்பட்டது.
சதுரங்க விளையாட்டில் வருவது போல் தன் வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் யோசித்து நிதானமாக, அதே சமயம் தீர்க்கமான முடிவோடு அடுத்த அடி எடுத்து வைப்பவர் கமல். வெள்ளித்திரையில் இருந்து அவர் சின்னத்திரைக்கு வந்தபோதும் சரி, அரசியலில் குதித்த போதும் சரி எதிர்மறையான விமர்சனங்கள் நிறையவே வந்தது. ஆனால் தனக்கான இலக்கை நிர்ணயித்து விட்டு அதில் திட்டமிட்டபடி செல்பவர் கமல்.
2017ம் ஆண்டு பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் சின்னத்திரை நிகழ்ச்சித் தொகுப்பாளர் ஆனார். 2018ம் ஆண்டு பிப்ரவரி 21ம் தேதி தனது ‘மக்கள் நீதி மய்யம்’ கட்சியைத் தொடங்கினார். கட்சி தொடங்கிய ஓராண்டிலேயே துணிந்து லோக்சபா தேர்தலில் களமிறங்கினார்.
மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு 3.72 சதவீதம் வாக்குகள் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து தமிழகத்தில் நடந்த 21 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் அவரது கட்சி போட்டியிட்டது. 2021ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டசபைத் தேர்தலிலும் போட்டியிடுகிறது. எப்படியும் முதல்வர் நாற்காலியில் அமர்ந்தே தீருவது என சட்டசபைத் தேர்தலுக்கான வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.
தமிழகத்தைப் பொறுத்தவரை திரைத்துறைக்கும் அரசியலுக்கும் மிக நீண்டதொரு தொடர்பு உண்டு. எம்.ஜி.ஆர்., கருணாநிதி, ஜெயலலிதா தொடங்கி விஜயகாந்த் வரை திரைத்துறையில் இருந்து அரசியலுக்கு வந்தவர்கள் ஏராளம். இந்த வரிசையில் தற்போது கமலும் சேர்ந்திருக்கிறார். பிக் பாஸ் மேடையையும் தனது சாமர்த்தியமான பேச்சால் அரசியல் மேடையாகப் பயன்படுத்தி வருகிறார் கமல்.
சர்வதேச தரத்தினாலான படங்களைக் கொடுப்பதாலும், சர்வதேச அளவில் ரசிகர்களைப் பெற்றிருப்பதாலும் உலகநாயகனாக திகழ்ந்து வருகிறார் கமல். முத்தமிழ் அறிஞர் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியால் கலைஞானி என்ற படத்தைப் பெற்றவர்.
தமிழ் இலக்கியத்தின் மீது கொண்ட ஆர்வத்தால் மய்யம் என்ற பத்திரிக்கையை நடத்தினார். வறுமையின் நிறம் சிகப்பு, உன்னால் முடியும் தம்பி என தனது படங்களில் மட்டுமல்லாது நிஜ வாழ்க்கையிலும் சமூக நலன் சார்ந்த விசயங்களில் ஈடுபட்டு வருகிறார்.
இன்று தனது 66வது பிறந்தநாளைக் கொண்டாடும் கமலுக்கு திரைத்துறையைச் சேர்ந்தவர்கள் மற்றும் ரசிகர்கள் மட்டுமல்லாது கேரள முதல்வர், திமுக தலைவர் என அரசியல் கட்சிகளைச் சேர்ந்தோரும் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். ஹேப்பி பர்த்டே கமல் சார்..!