தையூரில் 65,000 சதுர அடியில் 'ஹைட்ரஜன் புத்தாக்க மையம்' - அடிக்கல் நாட்டிய தமிழக முதலமைச்சர்!
இந்தப் புதிய மையம் ஐஐடி மெட்ராஸ், கைடன்ஸ் தமிழ்நாடு கூட்டாண்மையில் தமிழக அரசின் ஆதரவுடன், ஐஐடி மெட்ராஸ் தையூர் வளாகத்தில் உருவாக்கப்படுகிறது.
சென்னையில் நடைபெற்ற தமிழ்நாடு முதலீட்டாளர்கள் 2024 மாநாட்டில் ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனத்தின் ஹைட்ரஜன் புத்தாக்க மையத்திற்கான அடிக்கல்லை நாட்டினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
இந்தப் புதிய மையம் ஐஐடி மெட்ராஸ், கைடன்ஸ் தமிழ்நாடுடன் கூட்டாண்மையுடன் தமிழக அரசு ஆதரவுடன் உருவாக்கப்படுகிறது. ஹைட்ரஜன் டெக்னாலஜி துறையில் இந்தப் புதிய இன்னொவேஷன் மையம் புதுமையைப் புகுத்தலுக்கான கிரியா ஊக்கியாக செயல்படுகிறது.
ஐஐடி மெட்ராஸ் தையூர் வளாகத்தில் 65,000 சதுர அடியில் ஹைட்ரஜன் புத்தாக்க மையம் ரூ.180 கோடி செலவில் அமைக்கப்படும். இது 2026-ம் ஆண்டில் செயல்படத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த மையத்துக்கான அடிக்கல்லை முதல்வர் மு.க.ஸ்டாலின் மெய்நிகர் சந்திப்பில் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் தமிழக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, தொழிற்துறை செயலர் அருண் ராய், ஐஏஎஸ், கைடன்ஸ் நிர்வாக இயக்குநர் விஷ்ணு ஐஏஎஸ், மற்றும் ஹூண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் முழுநேர இயக்குனரும், தலைமை உற்பத்தி அதிகாரியுமான கோபாலகிருஷ்ணன் சாத்தபுரம் சிவராமகிருஷ்ணன் மற்றும் பிற அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு மற்றும் நாட்டின் இதர பகுதிகளில் ஹைட்ரஜன் சுற்றுச்சூழல் மேம்பாடு மற்றும் ஆதரவை இத்திட்டம் விரைவுபடுத்தவுள்ளது. இது குறித்து ஹூண்டாய் நிறுவனத்தின் கோபாலகிருஷ்ணன் சாத்தபுரம் சிவராமகிருஷ்ணன் கூறுகையில்,
“மாற்று எரிபொருள் மூலம் நீடித்த சுற்றுச்சூழல் பாதுகாப்பை உருவாக்குதற்கான தமிழ்நாடு அரசின் திட்டத்தில் ஹூண்டாயும் இணைந்துள்ளது. ஹைட்ரஜன் புத்தாக்க மையம் தமிழ்நாட்டில் ஹைட்ரஜன் பயன்பாட்டுக்கு மாறுவதை விரைவுபடுத்தும்," என நம்புகிறோம்.
ஐஐடி தையூர் வளாகத்தில் ஆய்வக வசதிகளை உருவாக்குவதற்காக எச்எம்ஐஎல் முதலீடு செய்யவிருக்கிறது. சுற்றுச்சூழலுக்கு உகந்த, கரியமில வாயு உமிழ்வைக் குறைக்கும் எதிர்கால உந்துசக்தியாகவும், மக்கள் பயன்பாட்டுத் தீர்வுகளைக் கொண்டதாகவும் இந்த ஆய்வகம் இயங்கும், என்றார்.
ஐஐடி மெட்ராசின் இயக்குனர் காமகோடி கூறும்போது,
“சென்னை புறநகரில் அமைந்துள்ள ஐஐடி தையூர் வளாகத்திற்குள் 65 ஆயிரம் சதுர அடியில் ஹைட்ரஜன் புத்தாக்க மையம் அமைக்கப்படும். தொழில்நுட்பத்திலும் புதிய கண்டுபிடிப்புகளிலும் இந்தியாவை வல்லரசாக உருவெடுக்கச் செய்வதில் ஐஐடி தொடர்ந்து ஒரு முன்னோடியாகச் செயல்பட்டு வருகிறது. இந்த வகையில் ஹைட்ரஜன் பயன்பாட்டுத் துறையில் புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கும் வகையில் பிரத்யேக ஆராய்ச்சிக்கான ஆய்வகத்தை உருவாக்குவதில் பெருமிதம் கொள்கிறது," என்றார்.
ஹைட்ரஜன் தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகளுக்கு ஒரு ஊக்கியாக ஹைட்ரஜன் கண்டுபிடிப்பு மையம் செயல்படும். ஸ்டார்ட்அப்கள், ஆராய்ச்சியாளர்களுக்கு வலுவான சுற்றுச்சூழல் அமைப்பை இது உருவாக்கும், எனத் தெரிவித்தார்.