2021ம் ஆண்டுக்கான ‘சிறந்த கிரிக்கெட் வீராங்கனை’ ஸ்மிருதி மந்தனா; ஐசிசி அறிவிப்பு!
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் 2021ம் ஆண்டுக்கான சிறந்த வீராங்கனையாக ஸ்மிருதி மந்தனாவை அறிவித்துள்ளது.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் 2021ம் ஆண்டுக்கான சிறந்த கிரிக்கெட் வீராங்கனையாக ஸ்மிருதி மந்தனாவை அறிவித்துள்ளது.
இந்திய மகளிர் அணியின் தொடக்க ஆட்டக்காரரான ஸ்மிருதி மந்தனா, 2021ம் ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீராங்கனை ஆக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இந்திய கிரிக்கெட் என்றாலே கங்குலி, சேவாக், சச்சின், டிராவிட், தோனி, கோலி என ஆண்களை மட்டுமே தலையில் தூக்கிவைத்து கொண்டாடி வந்த ரசிகர்கள் பட்டாளத்தின் கவனத்தை பெண்கள் அணி மீதும் திரும்பிய அதிரடி ராணி ஸ்மிருதி மந்தனா. 2021ம் ஆண்டில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி படைத்த சாதனைகளில் ஸ்மிருதி மந்தனாவின் பங்கு அளப்பறியது.
யார் இந்த ஸ்மிருதி மந்தனா?
மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஸ்மிருதியின் குடும்பத்தில் அப்பா, அண்ணன், உறவினர்கள் என பலரும் கிரிக்கெட் வீரர்களாக டிவிஷினல் போட்டிகளில் விளையாடியுள்ளனர். சிறிய வயதில் இருந்தே அதைப் பார்த்து, ரசித்து வளர்ந்த ஸ்மிருதிக்கு, இயல்பாகவே கிரிக்கெட் மீதான ஆர்வம் அதிகரித்தது. அதன் மூலமாக இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்கு கில்லியாக விளையாடும் வீராங்கனை கிடைக்கப்பெற்றார்.
2013ம் ஆண்டு மகாராஷ்டிரா - குஜராத் இடையிலான வெஸ்ட் சோன் ஹன்டர் 90 ஒருநாள் போட்டியில் கையில் ‘த வால்’ என ராகுல் டிராவிட் கையெழுத்து போட்டுக்கொடுத்த பேட் உடன் களமிறங்கினார் 18 வயதே ஆன ஒரு வீராங்கனை. அப்போ சுற்றி இருக்கும் பார்வையாளர்கள் எதிர்பார்த்திருக்கமாட்டார்கள் இவர் தான் நாளை இந்திய மகளிர் கிரிக்கெட்டையே மிரள வைக்கப்போகிறார் என்று.
களத்தில் புகுந்த நேரத்தில் இருந்து அவுட் ஆகும் வரை 32 பவுண்ட்ரிக்களை விளாசிய ஸ்மிருதி மந்தனா, அந்த போட்டியில் 150 பந்துகளில் 224 ரன்களை எடுத்து, இரட்டை சதம் அடித்து முதல் இந்திய வீராங்கனை என சாதனை படைத்தார்.
ஸ்மிருதி அடித்த விளாசிய ஒவ்வொரு பந்தும் இந்திய மகளிர் அணிக்கான வெற்றி படிக்கட்டுக்களாக மாறியது. அதுவரை ஆடவர் கிரிக்கெட் அணியை கொண்டாடியவர்கள் எல்லாம் மகளிர் கிரிக்கெட் போட்டிகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்தனர்.
தற்போது 25 வயதான ஸ்மிருதி மந்தனா இந்திய அணிக்காக 62 சர்வதேச ஒருநாள் போட்டிகள், 84 டி20 போட்டிகள் மற்றும் 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ளார். ஒருநாள் போட்டிகளில் 2,337 ரன்களும், டி20 போட்டிகளில் 1,971 ரன்களும் சேர்த்துள்ளார். 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ஸ்மிருதி 325 ரன்களை சேர்த்துள்ளார்.
2018ம் ஆண்டு ஸ்மிருதி மந்தனா ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அதிக ரன்கள் குவிந்து சாதனை படைத்தார். அந்த கடின உழைப்பிற்கு பரிசாக ஐசிசி-யின் சிறந்த கிரிக்கெட் வீராங்கனை மற்றும் சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீராங்கனை ஆகிய இரண்டு விருதுகளை ஸ்மிருதி மந்தனா பெற்றார்.
2021-ல் கெத்து காட்டிய ஸ்மிருது மந்தனா:
இந்திய அணிக்காக மொத்தம் நான்கு டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே ஸ்மிருதி விளையாடி உள்ளார். அதில், ஒரு சதம் மற்றும் இரண்டு அரை சதங்கள் அடங்கும். ஆஸ்திரேலிய மண்ணில் அந்த நாட்டு அணிக்கு எதிராக நடைபெற்ற பகலிரவு டெஸ்ட் போட்டியில் தனது முதல் சதத்தை பதிவு செய்திருந்தார்.
22 பவுன்டரி, 1 சிக்ஸர் என 216 பந்துகளில் 127 ரன்களை குவித்தார். இரண்டாம் நாள் ஆட்டத்தின் போது, 144 பந்துகளில் 86 ரன்கள் எடுத்தார். இந்த போட்டிக்கான ஆட்ட நாயகன் விருதும் மந்தனாவிற்கே வழங்கப்பட்டது.
கடந்த ஆண்டு இந்திய மகளிர் அணிக்கு கஷ்டமான ஆண்டாகவே அமைந்தது. சொந்த மண்ணில் கடந்த ஆண்டு நடைபெற்ற தென் ஆப்பிரிக்காவுடனான ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 8 போட்டிகளில் இரண்டில் மட்டுமே இந்திய மகளிர் கிரிக்கெட் அணி வெற்றி பெற்றது.
அந்த இரண்டு போட்டிகளில் மட்டுமே இந்திய அணி வெற்றி வாகை சூடவும் ஸ்மிருதி மந்தனாவின் சிறப்பான பேட்டிங் காரணமாக அமைந்தது. இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்தியா அணிக்கு 158 ரன்கள் இலக்காக நியமிக்கப்பட்ட நிலையில், ஆட்டமிழக்காமல் 80 ரன்கள் எடுத்த மந்தனா, அந்தத் தொடரை சமன் செய்ய உதவினார்.
இங்கிலாந்துடன் நடந்த டெஸ்ட் போட்டியிலும் முதன் இன்னிங்ஸில் 78 ரன்கள் எடுத்து இந்திய அணி டிரா செய்ய உதவினார்.
2021ம் ஆண்டுக்கான சிறந்த வீராங்கனை விருதுக்கான பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. அதில், இங்கிலாந்தின் டாமி பியூமண்ட், தென் ஆப்பிரிக்காவின் லிசெல் லீ மற்றும் அயர்லாந்தின் கேபி லூயிஸ் ஆகியோருடன் இந்தியாவின் ஸ்மிருதி மந்தனாவும் இடம்பெற்றுள்ளார். ஐசிசி மகளிர் அணியில் இடம்பெற்ற முதல் இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா என்பது குறிப்பிடத்தக்கது.
தகவல் உதவி: ட்விட்டர் | தொகுப்பு: கனிமொழி