ஐஐடி மெட்ராஸ் ‘ஆன்லைன்-நேரடி கலப்பு’ பட்டமளிப்பு விழா: 2,346 பேர் பட்டங்கள் பெற்றனர்!
இந்திய தொழில்நுட்பக் கழகம் மெட்ராஸ் (ஐஐடி மெட்ராஸ்) வரலாற்றிலேயே முதல் தடவையாக `ஆன்லைன் கலப்பு’ முறையில் பட்டமளிப்பு விழா நடத்தப்பட்டது.
ஐஐடி மெட்ராஸ் முதன்முதலாக நடத்திய 'ஆன்லைன் பட்டமளிப்பு விழா'வில் 2,346 பட்டங்கள் வழங்கப்பட்டன. இவற்றில் ஒரு கல்வியாண்டிலேயே மிக அதிக எண்ணிக்கையிலான 353 பிஎச்டி பட்டங்கள் அடங்கும். இந்தப் பட்டங்களில் பிஎச்டி, வெளிநாட்டு நிறுவனங்களுடன் இணைந்த பிஎச்டி மற்றும் இரட்டை டிகிரி பிஎச்டி ஆகியன அடங்கும்.
இந்திய தொழில்நுட்பக் கழகம் மெட்ராஸ் (ஐஐடி மெட்ராஸ்) வரலாற்றிலேயே முதல் தடவையாக 'ஆன்லைன்-நேரடி கலப்பு' முறையில் பட்டமளிப்பு விழாவை நடத்தப்பட்டது. இந்த விழா நேரடியான பட்டமளிப்பு மற்றும் ஆன்லைன் பட்டமளிப்பு இரண்டும் கலந்ததாக முழுக்கமுழுக்க ஆன்லைனிலேயே நடைபெற்றது.
பட்டம் பெறுபவர்கள் எப்படி கலந்துரையாட முடியும் என்பது இதன்மூலம் எடுத்துக் காட்டப்பட்டது. அக்டோபர் 25-ம் தேதி நடைபெற்ற 57வது பட்டமளிப்பு விழாவில் மொத்தம் 2,346 பட்டங்கள் வழங்கப்பட்டன.

நோபல் பரிசு பெற்றவரும் கலிஃபோர்னியா பல்கலைக் கழகத்தின் கோட்பாடு இயற்பியல் இருக்கையின் வேந்தருமான பேராசிரியர் டேவிட் ஜே.குரோஸ் தலைமை விருந்தினராக இந்த விழாவில் கலந்து கொண்டார். ஐஐடி மெட்ராஸ் ஆளுநர்கள் குழுவின் தலைவரும், மகிந்திரா அண்டு மகிந்திரா நிறுவனத்தின் மேலாண் இயக்குநருமான டாக்டர் பவர் கோயங்கா பட்டமளிப்பு விழாவுக்குத் தலைமை ஏற்றார்.
’ஆன்லைன் கலப்பு’ பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவரின் பதக்கம் வழங்கப்பட்ட காட்சியின் வீடியோவை http://fromsmash.com/Presidents-Medal-Winner-Video-IIT-M-Convocation என்னும் லிங்க் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பட்டமளிப்பு விழாவின் வீடியோ முழுவதையும் http://fromsmash.com/IIT-Madras-Convocation-2020-Full-Video-25th-Oct-2020 என்னும் வீடியோ மூலம் பதிவிறக்கம் செய்யலாம்.
பட்டம் பெற்றவர்களிடையே அமெரிக்காவின் ஸாந்த்தா பார்பெராவில் இருந்து உரையாற்றிய நோபல் பரிசு பெற்றவரும் கலிஃபோர்னியா பல்கலைக் கழகத்தின் கோட்பாடு இயற்பியல் இருக்கையின் வேந்தருமான பேராசிரியர் டேவிட் ஜே. குரோஸ்,
“இன்று கல்வியை முடிக்கும் உங்களில் பலர் அடுத்த சில ஆண்டுகளில் என்ன நிகழுமோ என நினைக்கலாம். உங்களுக்கு யாராலும் எந்த ஒரு விடையும் தரமுடியாது என்பது எனக்கு நிச்சயமாகத் தெரியும். உலகில் வேகவேகமாக மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. கடந்த சில மாதங்களில் நிகழ்ந்த நிகழ்வுகளைப் பார்க்கும்போது அடுத்த வாரம் மட்டுமல்ல, அதற்கு முன்பே கூட, என்ன நிகழப்போகிறது என்பதை யாராலும் கணிக்க முடியாது. அறிவியலிலும், அறிவியலில் ஒருவர் பெறும் வேலையிலும் அப்படித்தான்,” என்று கூறினார்.

பேராசிரியர் டேவிட் ஜே. குரோஸ் மேலும் பேசுகையில், “வாழ்க்கை என்பது ஆண்டுகளினால் ஆனது அல்ல; அது தருணங்களினால் ஆனது. நமது வாழ்க்கையைத் திரும்பிப் பார்க்கையில், நமக்கு நினைவில் வருவது எல்லாம் தருணங்களின் தொகுப்பே, நமது ஆரம்பம் என்ன என்று என்பது நம்மில் யாருக்குமே நினவில் வருவதில்லை. நமது முடிவு என்னவாக இருக்கும் என்பதும் நமது நிலையில் இராது. இந்தத் தருணம்தான் உங்களுக்கு முதலும் முடிவுமாக இருக்கும்.
உங்களில் பலருக்கு இது கல்லூரிப் படிப்பின் முடிவாகவும், கல்விக் கடனைத் திருப்பிச் செலுத்தும் நடைமுறையின் தொடக்கமாகவும் இருக்கும். உங்களில் பலருக்கு, பரந்து விரிந்த அறிவை உள்ளிழுத்துக் கொண்ட ஒரு நடைமுறையின் முடிவாகவும், அந்த அறிவைப் பயன்படுத்தத் தொடங்கும் ஒரு நடைமுறையின் அல்லது அதை அடுத்த தலைமுறைக்கு வழங்கும் ஒரு நடைமுறையின் தொடக்கமாகவும் இருக்கும். உங்களில் பலருக்கு இதுதான் முறைசார் கல்வியின் முடிவாகவும், ‘நிஜ வாழ்க்கையின்’ ஆரம்பமாகவும் இருக்கும்,” என்று குறிப்பிட்டார்.
நிகழ்ச்சியில் உரையாற்றிய ஐஐடி மெட்ராஸ் ஆளுநர் குழுவின் தலைவர் டாக்டர் பவன் கோயங்க்கா பேசுகையில்,
“2020 வகுப்பில் பயின்ற உங்களுக்கு ஒரு தனிச்சிறப்பு உள்ளது. இந்தியாவில், தொடர்ந்து ஐந்து ஆண்டுகளாக #1 பொறியியல் கல்லூரியாக இருந்து வரும் ஒரு கல்விக்கழகத்தில் சேர்ந்து படித்து பட்டம் பெற்ற தனிச்சிறப்பு உங்களுக்கு உள்ளது. ஐஐடி மெட்ராஸ் புத்தாக்க சாதனைகளுக்காக அடல் ரேங்க்கிங் பெற்று நெ.1 நிலையில் தொடர்ந்து இருந்து வருகிறது. இது நமது ஆசிரியர்கள், நிர்வாகம், ஊழியர்கள் மற்றும் மாணவர்களின் கூட்டு முயற்சிகளையும், கடமைப்பற்றையும் உண்மையான முறையில் பிரதிபலிக்கிறது. ஐஐடி மெட்ராஸ் இந்தச் சாதனை புரிந்ததற்காக, ஆளுநர்கள் குழு சார்பாக, உங்கள் ஒவ்வொருவருக்கும் நன்றி தெரிவிக்கிறேன்,” என்று கூறினார்.
டாக்டர் பவன் கோயங்க்கா மேலும் பேசுகையில், “பேரார்வம் மிக்கத் திட்டப்பணிகளை மேற்கொள்ளும்போது இளைஞர்களின் திறமையிலும், ஒத்துழைப்பு சக்தியின் மீதும் நம்பிக்கைதான் இன்றைக்கு நமது நாட்டிற்குத் தேவைப்படுகிறது. கோவிட்-19 மனிதகுலம் எதிர்நோக்கியுள்ள மாபெரும் உடல்நல மற்றும் பொருளாதார நெருக்கடி என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் உங்கள் முன்னால் சற்றே வித்தியாசமான ஒரு கண்ணோட்டத்தை முன்வைக்க விரும்புகிறேன்.
இந்த உலகளாவிய கிருமித் தொற்றால் நமக்கு ஒரு புதிய வாய்ப்பு கிடைத்துள்ளது. நாம் எப்படி பணியாற்ற வேண்டும், எப்படி வாழவேண்டும் என்பது பற்றிய இயல்பு நிலையை புதிதாக வரையறுக்கும் ஒரு வாய்ப்பு நமக்குக் கிடைத்திருக்கிறது. கிருமித் தொற்று நம்மைத் தொற்றிக் கொள்ளும் என்ற அச்சத்தில் இருந்து நாம் விடுபடும்போது, இந்தப் புதிய இயல்புநிலை என்பது பழைய இயல்புநிலையைக் காட்டிலும் மேம்பட்டதாக இருக்கும். வாழ்க்கையின் பல துறைகளில் தொழில்நுட்பங்களை சேர்த்துக் கொள்ளும் வேகத்தை கோவிட் விரைவுப் படுத்தியுள்ளது. 5-6 ஆண்டுகளில் ஏற்படக்கூடிய மாற்றங்கள் வெறும் 3-4 மாதங்களிலேயே ஏற்பட்டுவிட்டன,” என்று குறிப்பிட்டார்.
ஐஐடி மெட்ராஸ் இயக்குநர் பேராசிரியர் பாஸ்கர் ராமமூர்த்தி தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு ஆன்லைனில் பட்டங்களை வழங்கினார். இந்த ஆண்டில் மொத்தம் 2,346 பட்டங்கள் வழங்கப்பட்டன. இவற்றில் ஒரு கல்வியாண்டிலேயே மிக அதிக எண்ணிக்கையில் 353 பிஎச்டி பட்டங்கள் அடங்கும், 103 எம் எஸ் பட்டங்கள், 431 எம்.டெக் பட்டங்கள், 14 வலைதள அடிப்படையிலான எம்.டெக் பட்டங்கள், 19 பிஜிடிஎம்ஆர்ஐஎம், 122 எம் எஸ்ஸி பட்டங்கள், 3 கூட்டு எம்பிஏ பட்டங்கள், 48 எம்பிஏ பட்டங்கள், 37 இஎம்பிஏ பட்டங்கள், 33 எம் ஏ பட்டங்கள், 680 இரட்டைப் பட்டங்கள், 406 பிடெக் பட்டங்கள் ஆகியன அடங்கும்.
2020 பட்டமளிப்பு விழாவில் முதல் தடவையாக, இருவேறு பாடங்களை இணைந்த 59 இரட்டைப் பட்டங்கள் 59 மாணவர்களுக்கு வழங்கப்பட்டன. அவர்கள் இளநிலைப் பட்டபடிப்பை முடித்து, டேட்டா அறிவியல், கம்ப்யூடேஷனல் இன்ஜினியரிங், ரோபோவியல், நேனோடெக்னாலஜி, எரிசக்தி சிஸ்டம்கள் ஆகிய பாடங்களில் முதுநிலைப் பட்டங்களும் பெற்றனர். தொழில்துறை நிறுவனங்களில் பணியாற்றிக் கொண்டே எமது வலைதளங்கள் மூலமான எக்ஸ்கியூட்டிவ் புரோக்கிராம்களில் பொறியியல் சிறப்பாய்வு மற்றும் வணிக மேலாண்மை படிப்புப் படித்த 51 பேர் முதுநிலைப் பட்டங்களைப் பெற்றனர்.
ஐஐடி மெட்ராஸ் கடந்த கல்வியாண்டில் செயல்பட்ட செயல்திறன் குறித்து அறிக்கை அளித்த ஐஐடி மெட்ராஸ் இயக்குநர் பேராசிரியர் பாஸ்கர் ராமமூர்த்தி,
“இந்த உலகளாவிய கிருமிப் பரவலால் 2020 மார்ச் மாதம் நாடு தழுவிய பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டு, கல்வி நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. ஒரு சில வாரங்களுக்குள் ஆன்லைனில் வகுப்புகள் தொடங்கப்பட்டு விட்டன. எமது ஆசிரியர்களும் மாணவர்களும் மேற்கொண்ட துணிச்சலான முயற்சிகளினால், 2000 ஜனவர்-மே செமஸ்டருக்கான வகுப்புகளை நாங்கள் உரிய நேரத்தில் முடித்து விட்டோம். இதனால் படித்துத் தேறிய மாணவர்கள் வேலைகளில் சேர முடிந்தது. பிரி-ஃபைனல் ஆண்டு மாணவர்கள் இந்தக் கோடை காலத்தில் இண்ட்டர்ன்ஷிப்களை எடுக்க முடிந்தது. அவர்களில் பெரும்பாலானோர் ஆன்லைன் மூலமாகச் சேர்ந்துள்ளனர். எமது ஆராய்ச்சி மாணவர்களும், ஸ்காலர்களும் தங்களது வீடுகளில் இருந்தே தங்களது புராஜெக்டுகளை உரிய நேரத்தில் முடித்து விட்டனர்,” என்று குறிப்பிட்டார்.
ஐஐடி மெட்ராஸ் தனது ஆராய்ச்சி மற்றும் கன்சல்டன்ஸி நடவடிக்கைகளுக்காக இந்திய அரசின் அமைச்சகங்கள் மற்றும் தொழில்துறையினரிடம் இருந்து கணிசமான நிதியுதவி பெற்று வருகிறது. கடந்த 5 ஆண்டுகளில் ஆராய்ச்சிகளுக்காகக் கிடைக்கும் சிஏஜிஆர் நிதியுதவி 17% அதிகரித்தது; கன்சல்டன்ஸிகளுக்கான நிதியுதவி 2019-2020 ஆம் ஆண்டில் மிகவும் ஆரோக்கியமாக 26% அதிகரித்துள்ளது.
மேலும், மொத்தம் ரூ.333.1 கோடி மதிப்பிலான 294 அமைச்சகங்களின் ஆதரவு பெற்ற புராஜெக்டுகள் கிடைத்துள்ளன. ரூ.249.3 கோடி மதிப்புக்கு 649 கன்சல்டன்ஸி மற்றும் தொழில்துறை நிறுவனங்களின் ஆதரவுடன் கூடிய ஆராய்ச்சி புராஜெக்டுகளும் கிடைத்துள்ளன. இந்த ஆண்டில் 191 கண்டுபிடிப்புக் காப்புரிமைக்கான பேட்டன்டுகளுக்கு நாங்கள் விண்ணப்பித்திருக்கிறோம். இவற்றில் 62 விண்ணப்பங்கள் சர்வதேச அளவிலானவை; அவற்றில் 58 பேட்டன்டுகள் கிடைத்து விட்டன,” என்று கூறி பேராசிரியர் பாஸ்கர் ராமமூர்த்தி தமது அறிக்கையை நிறைவு செய்தார்.

