சாக்கடைகளை சுத்தம் செய்யும் ரோபோவை உருவாக்கியுள்ள சென்னை ஐஐடி மாணவர்கள்!
ஐஐடி மெட்ராஸ் மாணவர்கள் உருவாக்கியுள்ள ரோபோ, கழிவு நீர் சேகரிக்கப்படும் தொட்டிகளில் இருக்கும் அடர் கழிவுகளை அதிவேகமாக வெட்டக்கூடிய கட்டர்களைக் கொண்டு வெட்டி வாக்யூம் பம்ப் மூலம் உறிஞ்சி வெளியேற்றுகிறது. இந்த ரோபோவின் விலை 10 லட்ச ரூபாய் முதல் 30 லட்ச ரூபாய் வரை ஆகும்.
மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றும் முறை 1993-ம் ஆண்டு தடை செய்யப்பட்டது. இந்தத் தடை மீண்டும் 2013-ம் ஆண்டு வலுப்படுத்தப்பட்டது. இருப்பினும் இந்த முறை தொடர்ந்து வருகிறது. நாடு முழுவதும் கழிவுநீர் தொட்டிகளையும் சாக்கடைகளையும் சுத்தம் செய்கையில் ஒவ்வொரு ஐந்து நாட்களிலும் ஒருவர் உயிரிழப்பதாக தேசியத் துப்புறவு தொழிலாளர்கள் ஆணையத்தின் 2018-ம் ஆண்டு அறிக்கை தெரிவிக்கிறது.
சாக்கடைகள் மற்றும் கழிவுநீர் தொட்டிகளை சுத்தப்படுத்த இயந்திர பயன்பாடுகள் குறித்து மாநிலங்கள் ஆராய்ந்து வரும் நிலையில் அனைத்து பகுதிகளிலும் இன்னமும் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படவில்லை. சமீபத்தில் டெல்லி அரசாங்கம் கழிவுநீரை சுத்தம்செய்ய 200 இயந்திரங்களை நிறுவியது. ஆனால் ஒவ்வொரு இயந்திரத்தின் விலையும் 40 லட்ச ரூபாய் ஆகும்.
தற்போது ஐஐடி மெட்ராஸ் மாணவர்கள் இதற்கான தீர்வாக ஒரு ரோபோவை உருவாக்கியுள்ளனர்.
இதன் விலை 10 லட்ச ரூபாய் முதல் 30 லட்ச ரூபாய் வரை ஆகும். இந்த ரோபோ கழிவு நீர் சேகரிக்கப்படும் தொட்டிகளில் இருக்கும் அடர் கழிவுகளை அதிவேகமாக வெட்டக்கூடிய கட்டர்களைக் கொண்டு வெட்டியெடுத்து நீக்குகிறது. கழிவுகள் வெட்டப்பட்டதும் வாக்யூம் பம்ப் அவற்றை உறிஞ்சி வெளியேற்றகிறது என ’ஃபைனான்சியல் எக்ஸ்பிரஸ்’ தெரிவிக்கிறது.
இந்தத் திட்டத்தில் சுமார் நான்காண்டுகளாக பணிபுரிந்து வரும் ஐஐடி-யைச் சேர்ந்த டாக்டர் பிரபு ராஜகோபால் ’தி இந்து’ கூறுகையில்,
”திரவத்தில் நகர்ந்து செல்ல ரோபோவிற்கு ப்ரொபெல்லர் எனப்படும் சுழல்விசிறி அவசியம். ஆனால் கழிவுநீர் தொட்டியில் இது சிக்கலாக இருந்தது. ஏனெனில் விமானத்தில் பயன்படுத்துவது போன்று ரோட்டரி ப்ரொபெல்லர் பயன்படுத்தினால் அதன் இறக்கைகள் ஒன்றோடொன்று சிக்கிக்கொள்ளும்,” என்றார்.
இந்த பிரச்சனையைத் தவிர்க்க இக்குழுவினர் ஆறு இறக்கைகள் கொண்ட சுழல்விசிறி ஒன்றை உருவாக்கினர். முதுகலை மாணவரான ஸ்ரீகாந்த் தலைமையில் இது உருவாக்கப்பட்டுள்ளது. டாக்டர் ராஜகோபால் கூறுகையில்,
”சுழல்விசிறி உள்ளிழுக்கப்பட்டு கழிவுநீர் சேகரிக்கப்படும் தொட்டியில் போடப்படும். பின்னர் இது விரிவடையும். நாங்கள் இதை சுழலச்செய்யும்போது கழிவுநீர்த் தொட்டியில் இருக்கும் கழிவுகள் வெட்டப்பட்டு வாக்யூம் பம்புகள் மூலம் உறிஞ்சப்பட்டு வெளியேற்றப்படும்,” என தெரிவித்ததாக ’தி இந்து’ குறிப்பிட்டுள்ளது.
ரோபோ சோதனைக் கட்டத்தில் உள்ளது. இக்குழுவினர் சோதனைக்காக எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனங்களிடமிருந்து கழிவுநீர் தொட்டியில் இருப்பது போன்ற அடர்த்தியான கசடுகளை வாங்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். ஐஐடி மெட்ராஸ் சுற்றுச்சூழல் பொறியியல் துறையைச் சேர்ந்த பேராசிரியர் இந்துமதி நம்பி இக்குழுவை வழிநடத்துகிறார்.
Safai Karamchari Andolan (SKA) தேசிய இணை குழுத்தலைவர் தீப்தி சுகுமார் கூறுகையில்,
“இது ஒரு அற்புதமான கண்டுபிடிப்பு. தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ் தொலைதூரப் பகுதிகளில் பல கழிப்பறைகள் கட்டப்பட்டு வருகிறது. இந்தப் பகுதிகளில் உள்ள கழிவுநீர் சேகரிக்கும் தொட்டிகளை சுத்தப்படுத்த குழாய்கள் பொருத்தமுடியாது. இதுபோன்ற பகுதிகளில் இந்த கண்டுபிடிப்பு பயனுள்ளதாக இருக்கும்,” என்றார்.
ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் இந்த இயந்திரம் ஆய்வகங்களில் சோதனைக்கு உட்படுத்தப்படும். அதன் பிறகு ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதங்களில் கழிவுநீர் சேகரிக்கப்படும் தொட்டிகள் இருக்கும் இடத்தில் ரோபோ சோதனை செய்யப்படும்.
திருவனந்தபுரத்தைச் சேர்ந்த ’ஜென்ரோபோடிக்ஸ்’ இதே போன்று சாக்கடைகளை சுத்தம் செய்ய ’பண்டிகூட்’ (Bandicoot) என்கிற ரோபோவை கண்டிபிடித்துள்ளனர்.
ரிமோட் கொண்டு கட்டுப்படுத்தக்கூடிய 50 கிலோ எடை கொண்ட இந்த ரோபோ சாக்கடைக்குள் இறக்கப்பட்டதும் அதன் கைகள் சாக்கடைக்குள் அடைந்திருக்கும் கழிவுகளை அகற்றுகிறது.
கட்டுரை : THINK CHANGE INDIA