மாதவிடாயில் துணி, மணல், இலைகள் பயன்படுத்தும் பெண்களுக்கு உதவிடும் ‘பேட்வுமன்’
15ம் நூற்றாண்டின் கொல்லர் சமூகத்தைச் சேர்ந்த மிகவும் பிற்படுத்தப்பட்ட இந்த பெண், தன் சமூகப் பெண்களுக்கு உதவிட சானிட்டரி பேட்களை தயாரித்து வழங்குகிறார்.
’கடுலியா லோஹார்’ என்பவர்கள் ராஜஸ்தானில் 15ம் நூற்றாண்டைச் சேர்ந்த கொல்லர் சமூகத்தினர். 34 வயதான லாத் லோஹார் இந்தக் குலத்தைச் சேர்ந்தவர். இவர் தற்போது உதய்பூரின் ராம்நகரில் வசித்து வருகிறார். லாத்திற்கு படிப்பில் ஆர்வம் அதிகம். பள்ளிக்குச் செல்ல விரும்பினார். ஆனால் அவரது குடும்பத்தினர் அவரை அனுமதிக்கவில்லை. இதற்கு முக்கியக் காரணம் மாதவிடாய் சுழற்சி.
காலம் கடந்த பிறகே படிக்கும் வாய்ப்பை இழந்துவிட்டதை அவர் உணர்ந்தார். அந்த தருணத்தில்தான் தனது சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு இத்தகைய நிலைமை ஏற்படாமல் தடுக்க முயற்சி மேற்கொள்ளவேண்டும் என்று தீர்மானித்தார்.
மும்பையைச் சேர்ந்த அரசு சாரா நிறுவனமான ’தஸ்ரா’ (Dasra) 2019-ம் ஆண்டு வெளியிட்ட அறிக்கையின்படி ஒவ்வொரு ஆண்டும் 23 மில்லியன் பெண்கள் பள்ளிப்படிப்பை இடைநிறுத்தம் செய்கின்றனர். சானிட்டரி நாப்கின்கள் வாங்க முடியாத சூழல், அதன் பயன்பாடு குறித்த தெளிவின்மை என முறையான மாதவிடாய் சுகாதார வசதிகள் இல்லாமையே இதற்குக் காரணமாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
லாத் இந்தச் சூழலை மாற்ற விரும்பினார். மாதவிடாய் சுகாதரம் குறித்த விழிப்புணர்வை கிராமத்தில் உள்ள பெண்களிடையே ஏற்படுத்தினார். அதுமட்டுமின்றி பருத்தி மற்றும் வாழையின் இழைகள் கொண்டு மறுபயன்பாட்டிற்கு உகந்த சானிட்டரி பேட்களை தயாரிக்கத் தொடங்கினார்.
பெண்கள் மாதவிடாய் நாட்களில் தங்களது தேவைகளை தாங்களே பூர்த்தி செய்துகொள்வதை உறுதிப்படுத்தும் வகையில் 33 வயதான இவர் ’காமக்யா’ (Kamakhya) என்கிற முயற்சியைத் தொடங்கினார். கடந்த ஒன்பதாண்டுகளில் இவர் 500-க்கும் அதிகமான பெண்கள் தங்களுக்குத் தேவையான சானிட்டரி நாப்கின்களை தாங்களே தயாரித்துக்கொள்ளப் பயிற்சியளித்துள்ளார்.
ஜாகிரி யாத்ராவின் ஒரு பகுதியாக சோஷியல்ஸ்டோரி உடனான உரையாடலில் லாத் லோஹர் கூறும்போது,
”எங்கள் பகுதியில் உள்ள பல இளம் பெண்களுக்கு சந்தையில் சானிட்டரி பேட்கள் கிடைப்பதுகூட தெரியாது. அவ்வாறு தெரிந்தவர்களாலும் அதற்கான விலையைக் கொடுத்து வாங்க முடியாமல் போனது. எனவே அவர்கள் அசுத்தமான துணிகள், மணல், கந்தல், இலைகள் போன்றவற்றையே பயன்படுத்தினர். இதனால் அவர்களது உடல்நலம் பாதிக்கப்பட்டதுடன் பெண் குழந்தைகளின் படிப்பும் பாதிக்கப்பட்டது. கடந்த சில ஆண்டுகளாக இந்தச் சூழலை மாற்றவேண்டும் என்பதையே என்னுடைய ஒரே இலக்காகக் கொண்டுள்ளேன்,” என்றார்.
முயற்சியின் துவக்கம்
லாத் லோஹர் பள்ளிக்குச் செல்லவில்லை. ஆனால் அவருக்கு கற்பதில் இருந்த ஆர்வம் காரணமாக சுயமாக கற்றுக்கொண்டார். அருகில் வசிப்பவர்கள், நண்பர்கள் போன்றோரிடமிருந்து பாடப்புத்தகங்களை வாங்கி வீட்டிலேயே படித்தார். லாத்தின் சமூகத்தில் கட்டாயம் என்பதால் இவருக்கும் 18 வயதிலேயே திருமணம் முடிந்துவிட்டது.
”திருமணம் முடிந்த சில ஆண்டுகளில் என்னுடைய கணவரும் நானும் பிரிந்துவிட்டோம். அப்போதுதான் படிப்பின் முக்கியத்துவத்தையும் தற்சார்புடனும் இருக்கவேண்டியதன் அவசியத்தையும் நிதி சுதந்திரம் அடையவேண்டியதன் அவசியத்தையும் உணர்ந்தேன். என்னைப் போல் என்னைச் சுற்றியுள்ள பெண்கள் பள்ளி மற்றும் கல்லூரிக்குச் சென்று படிக்கமுடியாத சூழல் இருக்கக்கூடாது என்று நினைத்தேன். மாதவிடாய் சுகாதாரம், சானிட்டரி நாப்கின்கள் கிடைக்காத நிலை போன்றவையே மாணவிகள் படிப்பை நிறுத்தக் காரணம் என்பதை கவனித்தபோது இதைத் தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளத் தீர்மானித்தேன்,” என்று லாத் நினைவுகூர்ந்தார்.
இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இன்றளவும் மாதவிடாய் தொடர்பான சமூகக் கட்டுப்பாடுகள் உள்ளன. தாய்மார்களே தங்களது மகள்களுடன் மாதவிடாய் என்கிற இயற்கையான நிகழ்வு குறித்து வெளிப்படையாக உரையாடுவதில்லை. இது இளம் பெண்களின் மாதவிடாய் சுகாதாரத்திற்கும் தவறாமல் பள்ளிக்குச் செல்வதற்கும் தடையாக உள்ளது. இதற்கு தீர்வுகாண லாத் லோஹார் ராம்நகர் சுற்றுப்பகுதிகளில் உள்ள பெண்களுடன் மாதவிடாய் குறித்து கலந்துரையாடத் தொடங்கினார்.
”நான் மாதவிடாய் சுகாதாரம் குறித்து உரையாட வீடு வீடாகச் சென்றேன். ஆனால் மக்கள் என்னை புறக்கணித்தனர். பல நாட்கள் தொடர்ந்து முயற்சித்த பிறகே அவர்களது நம்பிக்கையைப் பெற முடிந்தது. என்னுடன் வெளிப்படையாக பேசத் தொடங்கினார்கள். பருவமடைந்த பெண்கள் பலர் சானிட்டரி பேட்கள் குறித்து அறிந்திருக்கவில்லை. இது குறித்த விவரம் தெரிந்த வெகு சில பெண்களும் அவற்றை வாங்கும் திறன் கொண்டிருக்கவில்லை,” என்று லாத் குறிப்பிட்டார்.
நூற்றுக்கணக்கான பெண்களுடன் பேசியதில் சானிட்டரி நாப்கின்கள் எளிதில் கிடைப்பதில்லை என்பதும் விலை அதிகம் என்பதுமே கவனம் செலுத்தவேண்டிய முக்கியப் பிரச்சனை என்பதைக் கண்டறிந்தார். அவருக்குக் கிடைத்த தகவல்களை அடிப்படையாகக் கொண்டு சொந்தமாக சானிட்டரி பேட் தயாரிக்கும் திட்டத்தை உருவாக்கினார்.
பாதுகாப்பு, மறுபயன்பாடு, உறிஞ்சும்தன்மை ஆகியவற்றை முறையாக ஆராய்ந்த பின்னர் சானிட்டரி நாப்கின் தயாரிப்பில் பருத்தி, வாழை நார் ஆகியவற்றைப் பயன்படுத்தத் தீர்மானித்தார். இயந்திரம் மற்றும் தயாரிப்பிற்குத் தேவையான பொருட்கள் வாங்குவதற்காக லாத் தனது வருவாயில் இருந்து ஆரம்பத்தில் 10,000 ரூபாய் முதலீடு செய்தார்.
இதை வெற்றிகரமாக செயல்படுத்திய பிறகு சுமார் 500 பெண்களுக்குப் பயிற்சியளிக்கும் முயற்சியில் தீவிரம் காட்டினார். பயிற்சி பெற்ற பெண்கள் அனைவரும் இன்று முறையான மாதவிடாய் சுகாதாரத்துடனும் சுயசார்புடனும் உள்ளனர்.
லாத் நாள் ஒன்றிற்கு 10 சானிட்டரி பேட்களைத் தயாரிக்கிறார். எனினும் அவரது வாடிக்கையாளர்களில் பெரும்பாலானோர் வசதி குறைவானவர்கள் என்பதால் ஒரு பேட் 35 ரூபாய் என்கிற விலையில் விற்பனை செய்கிறார். இவர் தனது தயாரிப்பு அதிகம் பேரை சென்றடையவேண்டும் என்பதற்காக என்ஜிஓ-க்கள் மற்றும் சமூக நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட திட்டமிட்டுள்ளார்.
பெண்கள் கல்வியைத் தொடர உதவினார்
சமூக மற்றும் பொருளாதார கட்டுப்பாடுகள் இருப்பினும் லாத்தின் இரக்ககுணமும் விடாமுயற்சியும் அவரது கிராமத்தில் உள்ள பெண்களின் நிலையை அவர் மேம்படுத்த வழிவகுத்தது.
”ஆரம்பத்தில் நான் மோசமாக நடத்தப்பட்டாலும் என்னுடைய முயற்சிக்கான பலன் கிடைத்துள்ளது. என்னுடைய கிராமத்தைச் சேர்ந்த பல பெண் குழந்தைகள் தொடர்ந்து பள்ளிக்குச் செல்கின்றனர். என்னுடைய முயற்சிக்குப் பிறகு அவர்கள் பத்தாம் வகுப்பு வரையிலும் படிப்பை நிறைவு செய்வதைப் பார்க்கமுடிகிறது. இன்று என்னுடைய முயற்சிக்கு கிராமத் தலைவர் ஆதரவளித்து வருகிறார். இன்று பெரும்பாலானோர் மாதவிடாய் குறித்து வெளிப்படையாக பேசுவதைப் பார்க்கும்போது சமூக கட்டுப்பாடுகள் தகர்ந்துவிட்டதாகவே தோன்றுகிறது. என்னுடைய முயற்சிக்கு பலன் கிடைத்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது,” என்றார் லாத்.
கடந்த சில ஆண்டுகளாக லாத் அமர்வுகளில் பங்கேற்று ஜெய்ப்பூர், ஜோத்பூர், பிகானெர் போன்ற நகரங்களைச் சேர்ந்த பெண்களுக்கு பயிற்சியளித்து வருகிறார். இவர் ’பேட்வுமன்’ என்கிற பெயருடன் அழைக்கப்படுகிறார்.
ஆங்கில கட்டுரையாளர்: ரோஷ்னி பாலாஜி | தமிழில்: ஸ்ரீவித்யா