இன்டெர்நெட் 25: வெள்ளிவிழா காணும் ‘இந்திய இணையம்’
1995ம் ஆண்டு சுதந்திர தினத்தன்று அறிமுகமான இந்திய இணையம் இந்த 25 ஆண்டுகளில் உலகில் 2வது பெரிய இணைய மக்கள் தொகை கொண்ட நாடாக வளர்ந்துள்ளது.
இந்தியாவில் இணையம், 1980களின் பின் பகுதியில் அறிமுகமானாலும், கல்வியாளர்களும், ஆய்வாளர்களும் மட்டும் பயன்படுத்தும் நிலை இருந்தது. பின்னர், 1995ம் ஆண்டு சுதந்திர தினத்தில், அரசுக்கு சொந்தமான வி.எஸ்.என்.எல் நிறுவனம் மூலம் பொதுமக்களுக்கு இணையம் அறிமுகமானது. அப்போது தான் சாமான்ய இந்தியர்கள் வலை பற்றி அறிந்து கொண்டனர்.
பெரும்பாலும் இணையம் தொடர்பான நமது முதல் நினைவுகள், வி.எஸ்.என்.எல் அளித்த இணையத்தின் டயல் அப் ஒலி மற்றும் அடிக்கடி துண்டிக்கப்படும் தன்மை தொடர்பாக இருக்கும்.
முதல் டயல் அப் இணைப்பு, 9.6 கேபிபிஎஸ் வேகத்தில், தனிநபர்களுக்கு 250 மணி நேரத்திற்கு ரூ.5,000 மற்றும் வர்த்தகங்களுக்கு ரூ.15,000 எனும் கட்டணத்தில் அமைந்திருந்தது. 25 ஆண்டுகள் கழித்து, இந்தியா உலகிலேயே இரண்டாவது பெரிய இணைய மக்கள் தொகையை கொண்டிருப்பதோடு, குறைவான டேட்டா கட்டணமும் கொண்டுள்ளது.
(தற்போது ஜியோ சேவையில், ஒரு ஜிபி 5 ரூபாய் தான்).
வி.எஸ்.என்.எல் முதல் ஜியோ வரையான 25 ஆண்டுகள் பயணத்தில் இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா ஆகிய நாடுகளை முந்தியிருக்கிறது.
இன்று இந்தியா 574 மில்லியன் இணைய பயனாளிகளைக் கொண்டுள்ளது. இந்த ஆண்டு இறுதியில் இது 639 மில்லியனாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2030ல் 1.1 பில்லியன் இந்தியர்கள் இணைய வசதி பெறுவார்கள் என உலக பொருளாதார அமைப்பு (WEF) கணித்துள்ளது.
இணைக்கப்பட்ட உலகில் இந்தியாவின் வியக்க வைக்கும் வளர்ச்சி, அதன் துடிப்பான இளம் மக்கள் தொகை, அகல திறக்கும் பொருளாதாரம், அரசுத் திட்டங்கள், நுகர்வோர் பழக்கம் மற்றும் தொழில்முனைவோர் தொலைநோக்கு ஆகியவை காரணமாக அமைந்துள்ளது.
1995ல் இந்தியாவில் முதல் மொபைல் அழைப்பு மேற்கொள்ளப்பட்டது. அடுத்த 25 ஆண்டுகளில் மொத்தம் ஒரு பில்லியன் மொபைல் இணைப்புகளுக்கு மேல் வந்தன. 2019ல் இந்தியா, அமெரிக்காவை முந்திக்கொண்டு உலகின் இரண்டாவது பெரிய ஸ்மார்ட் போன் சந்தையாக உருவானதாக கவுண்டர் பாயிண்ட் ஆய்வு தெரிவிக்கிறது.
இன்று, இந்தியா அனைத்து தொழில்நுட்பப் பன்னாட்டு நிறுவன செயல்பாடுகளிலும் முக்கிய இடம் வகிக்கிறது. ஃபேஸ்புக் மற்றும் அதன் மேசேஜிங் சேவையான வாட்ஸ் அப்’பிற்கு, இந்தியா பெரிய சந்தையாக இருக்கிறது. அமேசான் மற்றும் ஆப்பிள் நிறுவனங்கள் வேகமாக வளரும் சந்தையாக இருக்கிறது. யூடியூப் மற்றும் ஆன்ட்ராய்டுக்கு மிகப்பெரிய பயனாளர்கள் பரப்பை கொண்டுள்ளது.
கடந்த 25 ஆண்டுகளில் இந்தியாவின் இணைய வளர்ச்சி நான்கு கட்டங்களைக் கொண்டுள்ளது. ஒவ்வொரு கட்டத்திற்குமான கால வரிசையை யுவர் ஸ்டோரி அளிக்கிறது.
குறுகிய அலைவரிசை (1995-2004)
பொது இணையத்தின் அல்லது பிராட்பேண்ட் வசதிக்கு முந்தைய இணையத்தின் முதல் பத்தாண்டுகள், அதிகக் கட்டணம், அரட்டை அறைகள் முதல் இ-மெயில் வசதி ஆகிய அம்சங்களை கொண்டிருந்தன.
பிராட்பேண்ட் (2005- 2010)
இந்தியாவின் பிராட்பேண்ட் கொள்கை இந்திய இணையத்தின் வேகமான வளர்ச்சிக்கு வித்திட்டது. இந்த கட்டத்தில் இந்தியாவில் பன்னாட்டு முன்னணி நிறுவனங்கள் இந்தியாவில் செயல்பாட்டை துவக்கின. ஒவ்வொரு பிரிவிலும் இந்தியா முக்கிய சந்தையாக உருவானது.
வயர்லெஸ் சேவை (2011- 2015)
இந்த கட்டத்தில் இணைய வசதி கொண்ட ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாயின. ஏர்டெல் நிறுவனம் 4ஜி சேவையை அறிமுகம் செய்தது. இந்தியாவில் இணையம் வெகுஜனமயமானது.
ஜியோ எழுச்சி (2016-2020)
இந்தியாவின் செல்வந்தரான முகேஷ் அம்பானி, கோடிக்கணக்கான மக்களுக்கு இணைய வாய்ப்பை அளிக்கும் வகையில் குறைந்த செலவிலான 4ஜி சேவையை 2016ல் அறிமுகம் செய்தார். இந்திய பரப்பில் ஜியோவின் அறிமுகம் திருப்பு முனையாக அமைந்தது.
“இந்தியாவைத் தவிர வேறு எல்லா இடங்களிலும் இணையம் மந்தமாகிறது. மக்கள் தொகையில் 60 சதவீதத்தினருக்கு மேல் விவசாயத்தை சார்ந்துள்ள விவசாயிகள் தேசம் தொழில்நுட்ப மையமாக உருவானது மகத்தானது,” என 2017ல் பாஸ்ட் கம்பெனி கட்டுரை அறிவித்தது.
இந்த வளர்ச்சி இன்னும் முடிந்துவிடவில்லை.
இந்தியவை அடுத்த கட்ட மொபைல் மற்றும் இணைய வளர்ச்சி கிராமங்களில் நிகழலாம். 2019ல், கிராமப்புற இணைய பயனாளிகள் (277 மில்லியன்), நகர்புற இணைய பயனாளிகள் (227 மில்லியன்) எண்ணிக்கையை விட அதிக அளவில் அமைந்தது. சிறிய நகரங்களில் மிகவும் வேகத்தில் புதிய இணைய பயனாளிகள் உருவாகின்றனர்.
பிசிஜி ஆய்வு தகவல் படி, 2025ல் இந்தியாவின் இணைய பயனாளிகள் எண்ணிக்கை 850 மில்லியனாக இருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது. ஜி-7 நாடுகள் மக்கள்தொகையை விட இது அதிகம். இந்தியாவின் டேட்டா நுகர்வு, 2025ல் மாதத்திற்கு 25 ஜிபியாக இருக்கும் என எரிக்சன் மொபிலிட்டி அறிக்கை தெரிவிக்கிறது.
"ஆன்லைன் இணைப்பு, அதன் விளைவாக தகவல்களை அணுகும் தன்மை, செலவிடுவதற்கான விருப்பம் மற்றும் வேட்கைக்கு இடையே பெரிய வேறுபாடாக அமைகிறது. அடுத்து வரும் ஆண்டுகளில் பெரும்பாலான இந்தியர்கள் இணையத்தில் இணைந்திருப்பார்கள் எனும் நிலையில், இந்த போக்கு ஒட்டுமொத்த வளர்ச்சிகு வித்திடும்,” என உலக பொருளாதார அமைப்பு தெரிவிக்கிறது.
ஆங்கில கட்டுரையாளர்: சோஹினி மிட்டர் | தமிழில்: சைபர்சிம்மன்