கொரோனா தடுப்பூசி பக்கவிளைவால் இந்தியாவில் முதல் உயிரிழப்பு: உறுதி செய்த அரசு அமைப்பு!
மற்ற இருவர் இறப்பில் தொடரும் சந்தேகம்!
இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் குறையத் தொடங்கியுள்ளது. அதேநேரம் தடுப்பூசி போடும் பணிகளிலும் வேகமெடுத்துள்ளன. தடுப்பூசி தொடர்பாக பல்வேறு வதந்திகள் கிளம்பி வருகின்றன, என்றாலும் தடுப்பூசி காலத்தின் கட்டாயமாக இருந்து வருகின்றன.
இந்தநிலையில், தடுப்பூசிக்கு பிந்தைய கடுமையான பக்க விளைவுகளை ஆராயும் வகையில் மத்திய அரசு குழு ஒன்றை அமைத்தது. ஏஇஎஃப்ஐ எனப்படும் இந்த குழு இன்று முக்கிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையில்,
இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டதால் முதல் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக அதிர்ச்சிகரத் தகவலை வெளியிட்டுள்ளது.
மருத்துவர் என்.கே. அரோரா தலைமையிலான இந்தக் குழுவானது, கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளும் நபர்களுக்கு உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையிலான அலெர்ஜி, ரத்தம் உறைவது உள்பட பக்க விளைவுகள் ஏற்படுவதற்கான காரணத்தை ஆராய்ந்து வருகிறது.
இந்த குழு வெளியிட்ட அறிக்கையில்,
”கடந்த மார்ச் 8ம் தேதி 68 வயது நபர் ஒருவர் தடுப்பூசி செலுத்திக் கொண்ட பிறகு, ஒவ்வாமை பாதிப்புக்கு ஆளானது கண்டறியப்பட்டுள்ளது. தடுப்பூசி செலுத்திக் கொண்டதால்தான் அவருக்கு அலெர்ஜி வந்தது என்பது எங்களுடைய ஆய்வில் தெரியவந்துள்ளது," என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கொரோனா தடுப்பூசி செலுத்திய பிறகு மேலும் மூன்று பேர் உயிரிழக்க நேரிட்டதாக கூறப்பட்டாலும், தற்போதைய நிலையில், மருத்துவர்கள் மற்றும் ஆய்வாளர்கள் ஒரு நபரின் உயிரிழப்புக்கான காரணத்தை மட்டுமே உறுதிப்படுத்தியுள்ளனர்.
அதன்படி, மூவரில் ஒருவர் உயிரிழப்புக்கு தடுப்பூசி தயாரிப்புகள் தொடர்புடைய பக்க விளைவாக இருக்கலாம், அதேநேரம் மற்ற இரண்டு பேரின் இறப்பு மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியதும் நடந்துள்ளது என்றும் ஆய்வுக்குழு கூறியுள்ளது. அந்த இருவரின் வயது 20க்கு மேல் மட்டுமே.
ஏஇஎஃப்ஐ எனப்படும் இந்த ஆய்வுக்குழு மொத்தம் 31 உயிரிழப்புகளுக்கான காரணத்தை ஆய்வு செய்தனர். இந்த 31 உயிரிழப்பில், 18 பேரின் உயிரிழப்பு தடுப்பூசி போட்டுக் கொண்ட பிறகு ஏற்பட்டிருக்கிறது. என்றாலும் அந்த இறப்புகள் தடுப்பூசியால் நிகழவில்லை. மேலும், மற்ற ஏழு பேரின் உயிரிழப்பு தீர்மானிக்க முடியாதவையாக உள்ளது. மற்ற இருவரின் இறப்பு வகைப்படுத்த முடியாதவையாக உள்ளது என்று ஆய்வுக்குழு தனது தகவலில் தெரிவித்துள்ளது.
ஆய்வுக்குழு வெளிப்படுத்திய வகைப்படுத்த முடியாத இறப்பு என்பது மருத்துவத்துறையில் சில நுட்பமான தகவலுக்கு போதுமான ஆதாரம் இல்லாத நிலை ஆகும்.
தகவல் உதவி: ஏஎன்ஐ | தமிழில்: மலையரசு