காளான் சாகுபடியில் கோடிகளில் சம்பாதிக்கும் இந்தியாவின் ‘மஷ்ரூம் கேர்ள்’
இவர் டெல்லியில் பார்த்துக் கொண்டிருந்த வேலையை விட்டுவிட்டு தனது சொந்த ஊருக்கு குடிபெயர்ந்து, காளான் விவசாயம் தொடங்கி தானும் பயனுற்று, பிற விவசாயிகளின் வாழ்விலும் வெளிச்சம் கொண்டு வந்துள்ளார்.
உத்தரகண்ட் மாநிலத்தின் சாமோலி (கர்வால்) மாவட்டத்தைச் சேர்ந்த திவ்யா ராவத் ஆணாதிக்கம் நிறைந்த விவசாயத்துறையில் நுழைந்து தனக்கென ஒரு வெற்றிப்பாதையை அமைக்க முடிவெடுத்தார். அவர் அதில் இன்று வெற்றியும் பெற்று பல கோடிகளில் வருவாய் ஈட்டுகிறார்.
அப்படி என்ன விவசாயம் இவர் செய்கிறார்?
திவ்யா ராவத் ஒரு பெண் விவசாயி ஆகி இன்று ஒரு புதிய வரையறையை வகுத்துள்ளார், தன்னை ஒரு விவசாயியாக நிலைநிறுத்தி சமூகத்திலும் ஒரு சிறப்பு இடத்தைப் பெற முடியும் என்பதை நிரூபித்துள்ளார்.
திவ்யா; காளான் சாகுபடித் துறையில் இந்தியாவில் நன்கு அறியப்பட்டப் பெயராக மாறியுள்ளார், மேலும் இவரை 'காளான் பெண்' என்று குறிப்பிடும் அளவிற்கு பிரபலம் அடைந்துள்ளார். தற்போது திவ்யா காளான்கள் மூலம் 2 கோடிக்கு மேல் வருவாய் ஈட்டுகிறார்.
திவ்யாவுக்கு இதற்காக பல பெரிய விருதுகள் கிடைத்துள்ளன. சில ஆண்டுகளுக்கு முன்பு ஜனாதிபதியால் அவருக்கு ‘நாரி சக்தி’ விருதும் வழங்கப்பட்டது.
திவ்யாவின் கதை மிகவும் சுவாரஸ்யமானதும் கூட. இவர் டெல்லி என்.சி.ஆரில், தான் பார்த்துக் கொண்டிருந்த நல்ல வேலையை விட்டுவிட்டு தனது சொந்த ஊருக்கு திரும்பிச் சென்று விவசாயம் செய்யத்தொடங்கினார். இவரது பணி மற்றும் அவரின் அர்ப்பணிப்பு மூலம் இப்பகுதியில் இருந்து விவசாயிகளின் குடியேற்றத்தை தடுக்க முடிந்தது.
திவ்யாவின் தொடக்கம்
உத்தரகண்ட் மாநிலத்தின் டெஹ்ராடூனைச் சேர்ந்த திவ்யாவின் தந்தை ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி. திவ்யா தனது ஆரம்பக் கல்வியை நொய்டாவில் முடித்தார். அதன் பிறகு அவர் என்.சி.ஆர் பிராந்தியத்தில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்தார், அந்த சமயத்தில் திவ்யா சுமார் 8 நிறுவனங்களில் பணிபுரிந்துவிட்டு அந்த வேலைகளை ஒன்றன் பின் ஒன்றாக விட்டுவிட்டார்.
அவருக்கு வேலையில் ஏற்பட்ட அதிருப்தியும், வேறு ஏதாவது செய்ய வேண்டும் என்ற விருப்பமுமே அதற்குக் காரணம். திவ்யா மீண்டும் தனது சொந்த மாநிலமான உத்தரகண்டில் சமோலி மாவட்டத்திலிருந்து 25 கி.மீ தூரத்தில் அமைந்துள்ள சிறிய கிராமம் கோட் கந்தாராவுக்குத் திரும்பினார்.
2013 ஆம் ஆண்டில் திவ்யா உத்தரகண்ட் திரும்பியபோது, வேலைவாய்ப்பு இல்லாததால் மக்கள் அங்கிருந்து வெளியே குடியேற வேண்டிய கட்டாயத்தில் இருந்ததைக் கண்டார், பின்னர் இதனைத் தடுக்கவும் இந்த திசையில் வேறு ஏதாவது செய்ய திவ்யா தீர்மானித்தார்.
2015 ஆம் ஆண்டில் திவ்யா, காளான் உற்பத்தியில் தன்னைப் தயார்ப்படுத்திக் கொண்டார். வெறும் ரூ.3 லட்சம் முதலீட்டில் காளான் விவசாயத் தொழிலைத் தொடங்கினார். படிப்படியாக அப்பகுதியைச் சேர்ந்த பலர் அவருடன் சேரத் தொடங்கினர். திவ்யா, காளான்களை தானே பயிரிட்டு அப்பகுதியில் உள்ள மற்றவர்களையும் காளான்களை வளர்க்க ஊக்கப்படுத்தினார்.
காளான் வளர்ப்பு தூதர்
திவ்யாவின் இந்த பாராட்டத்தக்க முயற்சிக்கு, மாநில அரசு அவரை காளான்களின் பிராண்ட் தூதராக அறிவித்தது. இவர் இதுவரை உத்தரகண்ட் மாநிலத்தின் பல மாவட்டங்களில் 50க்கும் மேற்பட்ட யூனிட்களை நிறுவியுள்ளார். அவர் தனது குழுவுடன் கிராமம் கிராமமாகச் சென்று மக்களை காளான்களை வளர்க்க ஊக்குவிக்கிறார். மேலும் அவர்களுக்கு பயிற்சி அளிக்கிறார்.
'சவும்யா ஃபுட் பிரைவேட் லிமிடட் கம்பெனி' என்ற பெயரில் நிறுவனம் நடத்துகிறார் திவ்யா. அதன் ஆண்டு வருவாய் இன்று 2 கோடி ரூபாய் அளவில் உள்ளது. மோத்ரோவாலாவில் அவருக்கு ஒரு காளான் ஆலை உள்ளது, அங்கு ஆண்டு முழுவதும் காளான்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்த ஆலை குளிர்காலத்தில் பொத்தான்கள், நடு ஆண்டில் சிப்பிகள் மற்றும் கோடைக் காலத்தில் பால் காளான்களை தயாரிக்கிறது.
இமயமலைப் பகுதியில் காணப்படும் Cardicef Militaris என்ற ஒரு வகை புழு இனத்தை திவ்யா உற்பத்தி செய்கிறார். இது சந்தையில் ஒரு கிலோவுக்கு ரூ.2 முதல் 3 லட்சம் வரை விற்பனையாகும். புழு மரத்தை வணிக ரீதியாக உற்பத்தி செய்ய பல ஆய்வகங்களையும் நிறுவியுள்ளார்.
திவ்யா தாய்லாந்தில் புழு மரங்களை உற்பத்தி செய்ய பயிற்சி பெற்றிருக்கிறார், மேலும் இதற்கு சர்வதேசச் சந்தையில் பெரும் தேவை உள்ளது, அதே நேரத்தில் இந்தியாவில் அதன் உற்பத்தி, வணிக மட்டத்தில் மிகக் குறைவாகத்தான் இருக்கிறது. அதனால் வருங்காலத்தில் இதையும் பெருக்க திட்டமிட்டு செயல்பட்டு வருகிறார் இந்த ‘மஷ்ரூம் கேர்ள்’
கட்டுரை உதவி: யுவர்ஸ்டோரி ஹிந்தி