இளைஞர்களுக்கு இலவச குத்துச்சண்டை பயிற்சி அளிக்கும் பாக்சர் முஜ்தபா கமல்!
சிறு வயது முதலே எத்தனையோ தடங்கல்களை எதிர்கொண்டபோதும் 37 வயது முஜ்தபா கமல் நம்பிக்கையுடன் இளைஞர்களுக்கு ஊக்கமளித்து இலவசமாக தொழில்முறை குத்துச்சண்டையில் பயிற்சியளித்து வருகிறார்.
முஜ்தபா கமல் கொல்கத்தாவில் பிறந்து வளர்ந்தவர். இவருக்கு வயது 37. மிகவும் இளம் வயதான ஒன்பது வயதிலேயே குத்துச்சண்டை மீது இவருக்கு ஆர்வம் ஏற்பட்டது. அப்போது தொடங்கிய இவரது குத்துச்சண்டை பயணம் படிப்படியாக அடுத்தடுத்த கட்டங்களுக்கு நகர்ந்தது. தொழில்சாரா குத்துச்சண்டை போட்டிகளில் மாநில அளவிலும் தேசிய அளவிலும் பங்கேற்று வெற்றி பெற்றார்.
இவரது இளம் வயதிலேயே இவரது அப்பா உயிரிழந்துவிட்டார். அன்றாட செலவுகளை சமாளிக்கக் கிடைத்த சிறு வேலைகளை செய்து வந்தார். இதனிடையே குத்துச்சண்டை பயிற்சி என வாழ்க்கை போராட்டம் நிறைந்ததாகவே இருந்துள்ளது.
தொழில்முறை குத்துச்சண்டை வீரராக உருவாகவேண்டும். சர்வதேச அளவில் இந்தியா சார்பாக போட்டியிடவேண்டும். இவ்விரண்டுமே கமலின் கனவாக இருந்தது. எத்தனையோ தடைகளைக் கடந்து கடினமாக உழைத்தபோதும் இந்தக் கனவு எட்டாக் கனியாகவே இருந்து வந்தது.
இதற்கு முக்கியக் காரணம் இவருக்குப் போதிய வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதுதவிர தொழில்முறை குத்துச்சண்டை வீரருக்கான பயிற்சி பெறுவதற்குத் தேவையான வசதிகள் இந்தியாவில் இல்லை. கமல் இந்தப் பிரச்சனைகளை உணர்ந்ததை அடுத்து நாட்டில் தொழில்முறையாக குத்துச்சண்டை பயிற்சி பெற ஃபவுண்டேஷன் ஒன்றை உருவாக்கும் பணியில் களமிறங்கினார்.
“எவ்வளவோ கடினமாக முயற்சி செய்தும் தொழில்முறை குத்துச் சண்டையில் என்னால் ஈடுபட முடியவில்லை. திறமையுள்ள மற்ற இளைஞர்களும் இதே பிரச்சனையை சந்திக்ககூடாது என்று நினைத்தேன். இந்த விளையாட்டிற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுவதில்லை. எனவே இந்த விளையாட்டு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதிலும் இலவசமாக பயிற்சி அளிப்பதிலும் கவனம் செலுத்தி வருகிறேன்,” என்றார்.
ஊக்கம் நிறைந்த பயணம்
கமல் கொல்கத்தாவின் கிதிர்பூர் பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் நான்காம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தபோது குத்துச்சண்டை விளையாட்டில் ஆர்வம் தோன்றியது. ஆரம்பத்தில் இவருக்குக் கால்பந்து விளையாட்டில் ஆர்வம் இருந்தது. தொலைக்காட்சியில் குத்துச்சண்டை போட்டியைப் பார்த்தபோது இதன் பக்கம் ஆர்வம் திரும்பியது.
ஆனால் முறையான பயிற்சி பெற ஆர்வம் மட்டும் போதாதல்லவா? கமலின் அப்பா உயிரிழந்த நிலையில் கமல், அவரது இரண்டு சகோதரிகள், ஒரு சகோதரர் என குடும்பச் செலவுகளை சமாளிக்க முடியாமல் இவரது அம்மா திணறினார். இந்தச் சூழலில் பயிற்சிக்கு செலவு செய்யமுடியாமல் போனது.
“என் அம்மா ஜவுளித் துறையில் வேலையில் செய்தார். அந்த சம்பளத்தைக் கொண்டு தினசரி செலவுகளையே சமாளிக்க முடியாத நிலை இருந்தது,” என்று அந்த நாட்களின் இக்கட்டான சூழலை நினைவுகூர்ந்தார் கமல்.
இத்தனை போராட்டங்கள் இருப்பினும் குத்துச்சண்டை மீதான ஆர்வம் மட்டும் அவருக்குக் குறையவே இல்லை. நசீன் ஹமீத், பெர்னாட் ஹாப்கின்ஸ் போன்ற குத்துச்சண்டை சாம்பியன்களின் வீடியோக்களைப் பார்த்தார். இதில் பின்பற்றப்படும் உத்திகளை பயிற்சி செய்வதில் அதிக நேரம் செலவிட்டார்.
1998-ல் ஜெர்மனி கோப்பை, 1999-ல் YMCA இண்டர்நேஷனல், 2001-ல் தெற்காசிய கோப்பை என பல்வேறு பிரபல போட்டிகளில் கலந்துகொண்டு தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.
தொழில்சாரா குத்துச்சண்டையுடன் ஒப்பிடுகையில் தொழில்முறை குத்துச்சண்டை ஒழுங்குபடுத்தப்பட்டிருக்கும். எனவே தொழில்முறை குத்துச்சண்டையில் ஈடுபட கமல் விரும்பினார். போதிய வளங்களும் வாய்ப்புகளும் இல்லாத காரணத்தால் இந்திய ரயில்வே பணியை விட்டு விலகி ஹாங்காங் சென்றார்.
“ஹாங்காங் சென்றதும் என் செலவுகளை சமாளிக்க வெயிட்டர், டெலிவரி பாய் என கிடைத்த சிறு வேலைகளை செய்து வந்தேன். பின்னர் ஜிம் ஒன்றில் பயிற்சியாளராக வேலைக்கு சேர்ந்தேன். ஃபிட்னெஸின் ஒரு பகுதியாக குத்துச்சண்டை கற்றுக்கொடுத்தேன். அதேசமயம் தொழில்முறை குத்துச்சண்டை வீரருக்குத் தேவையான திறன்களைத் தொடர்ந்து மெருகேற்றி வந்தேன்,” என்றார்.
இப்படி சீராக சென்றுகொண்டிருந்த இவரது பயணத்தில் மீண்டும் ஒரு முட்டுக்கட்டை வந்தது. இவருக்குத் தாடையில் கடுமையாக காயமேற்பட்டது. வேறுவழியின்றி இந்தியா திரும்பத் தீர்மானித்தார்.
ஊக்கமும் பயிற்சியும்
தடைகள் தொடர்ந்தாலும் கமலின் நம்பிக்கை மட்டும் சற்றும் குறையவில்லை. பெங்களூருவில் உள்ள Cult.Fit என்கிற ஃபிட்னெஸ் நிறுவனத்தில் குத்துச்சண்டை பயிற்சியாளராக சேர்ந்து இந்த விளையாட்டு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
இவர் ஃபிட்னெஸின் ஒரு பகுதியாக குத்துச்சண்டையை அறிமுகப்படுத்தியது மட்டுமல்லாமல் பல இளைஞர்களுக்கு தொழில்முறை குத்துச்சண்டையில் இலவசமாக பயிற்சியும் வழங்கினார்.
“தொழில்முறை குத்துச்சண்டை வீரராக உருவாகவேண்டும் என்கிற என் கனவு ஈடேறாமல் நொறுங்கியபோது, ’என்னால் முடியாமல் போனால் என்ன? மற்றவர்கள் தங்கள் இலக்கை எட்ட உதவலாமே’ என்று தோன்றியது. இன்று தொழில்சாரா குத்துச்சண்டை வீரர்கள் தொழில்முறை குத்துச்சண்டை வீரர்களாக மேம்பட உதவி வருகிறேன். கிட்டத்தட்ட 40 பேருக்கு தினமும் இரண்டு மணி நேரம் பயிற்சியளிக்கிறேன். வலிமை, தாங்கும் ஆற்றல், நுட்பங்கள் போன்றவற்றில் முக்கிய கவனம் செலுத்துகிறேன்,” என்றார்.
திறமையும் ஆர்வமும் உள்ள தொழில்சாரா குத்துச்சண்டை வீரர்களை அடையாளம் கண்டு கமல் அவர்களுக்குப் பயிற்சியளித்து வருகிறார். இதுதவிர சமூக வலைதளங்களில் தொழில்முறை குத்துச்சண்டை குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகிறார்.
இந்தியாவைப் பொருத்தவரை விஜேந்தர் சிங் தவிர குத்துச்சண்டையில் பிரபலமானவர்கள் அதிகம் இல்லை.
“நம் நாட்டில் குத்துச்சண்டை விளையாட்டைப் பிரபலப்படுத்தி, இளைஞர்களுக்குப் பயிற்சியளித்து, 2024 ஒலிம்பிக்ஸ் போட்டியில் பங்கேற்க அவர்களைத் தயார்படுத்தவேண்டும் என்கிற இலக்கை நோக்கியே பயணித்து வருகிறேன்,” என்று நம்பிக்கையுடன் அழுத்தமாக பதிவு செய்கிறார் கமல்.
ஆங்கில கட்டுரையாளர்: ரோஷ்னி பாலாஜி | தமிழில்: ஸ்ரீவித்யா