ஓசூரில் 2,000 ஏக்கரில் சர்வதேச விமான நிலையம்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்புக்கு அமைச்சர் ராஜா நன்றி!
ஓசூரில் புதிய சர்வதேச விமான நிலையம் அமைக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்ததற்கு தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தன் நன்றிகளைத் தெரிவித்துள்ளார்.
ஓசூரில் 2000 ஏக்கர் நிலப்பரப்பில், ஆண்டுக்கு 3 கோடி பயணிகளை கையாளும் வகையில் பன்னாட்டு விமான நிலையம் அமைக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பை அடுத்து தமிழ்நாடு தொழிற்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார்.
தமிழக சட்டப்பேரவையில் மானிய கோரிக்கை விவாதம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இன்று இரண்டு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதில், ஒரு அறிவிப்பு ஓசூரில் விமான நிலையம் அமைப்பது பற்றியது.
ஓசூரில் 2000 ஏக்கர் நிலப்பரப்பில், ஆண்டுக்கு 3 கோடி பயணிகளை கையாளும் வகையில் பன்னாட்டு விமான நிலையம் அமைக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.
![airport](https://images.yourstory.com/cs/18/7be5482008d911e9bb473d9d98ed1e05/Airport-1719473897191.png?fm=png&auto=format)
இது தொடர்பாக அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மாநில திட்டக்குழுவில் பணியாற்றிய காலத்திலிருந்தே ஓசூரில் விமான நிலையம் அமைக்க வேண்டும் என்று வாதிட்டு வரும் டாக்டர் டிஆர்பி ராஜாவுக்கு இது ஒரு கனவுத்திட்டமாகும்.
மின்சார வாகனம் மற்றும் மேம்பட்ட உற்பத்திக்கான கொள்கைகளையும் சுற்றுலாத்துறையை மேம்படுத்த கொள்கைகளை வகுத்த போதும் ஓசூர் பிராந்தியத்தை நன்கு ஆராய்ந்தார். அப்போது ஓசூரில் விமான நிலையம் வழங்கும் பொருளாதார உந்துசக்தியை அடையாளம் கண்டார். சென்னைக்கும் பெங்களூருவுக்கும் அருகில் ஓசூர் இருப்பதால் தொழிற்துறை வளர்ச்சியில் பங்களிக்கும் என்பதைக் கண்டார்.
இது தொடர்பாக அமைச்சர் ராஜா கூறும்போது,
“ஓசூரில் புதிய விமான நிலையம் குறித்த அறிவிப்பு ஒரு மகத்தான முன்னேற்றமாகும். இந்தத் திட்டம், பலதரப்பட்ட இணைப்பை வழங்கி பொருளாதார வளர்ச்சியைத் தூண்டும். ஓசூர் மட்டுமின்றி, தர்மபுரி, சேலம் போன்ற அண்டை மாவட்டங்களும் இதனால் பயனடையும்."
ஓசூரின் சிறப்பான வானிலை, புதிய விமான நிலையம் சென்னை-பெங்களூரு இரட்டை நகர பொருளாதார அமைவை ஊக்குவிக்கும். தமிழகம், கர்நாடகம் இரண்டும் வளர்ச்சி அடையும். எனவே, இந்த அறிவிப்பை வெளியிட்டு தொலைநோக்குப் பார்வையை எதார்த்தமாக மாற்றிய முதல்வருக்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன், என்றார் டிஆர்பி ராஜா.