பயிர்களில் பூச்சிகளைக் கட்டுப்படுத்த உதவும் செயலி அறிமுகம்!
பூச்சிகள் தடுப்பு, மற்றும் வானிலை குறித்தத் தகவல்களை விவசாயிகளுக்கு அளிக்கும் ஆப் மற்றும் இணையதளம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
பயிர்களில் பூச்சிகளைக் கட்டுப்படுத்த உதவும் செயலி மற்றும், புவிசார் விவசாயத் தகவல்களை அளிக்கும் இணையதளம் ஆகியவற்றை தமிழக அமைச்சர்கள் அறிமுகம் செய்தனர். எம்.எஸ்.சுவாமிநாதன் ஆய்வு அறக்கட்டளை வளாகத்தில் நடைப்பெற்ற இந்த நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கான விவசாயிகள் பங்கேற்றனர்.
’பண்ணை’ (PANNAI - Pest-disease Advance Notification and Need-based Agriculture Information) எனும் பெயரில் பூச்சிகள் தொடர்பான தகவல்களை முன்னதாக அளிக்க மற்றும் தேவையான விவசாயத் தகவல்களை அளிப்பதற்கான செயலி எம்.எஸ்.சுவாமிநாதன் ஆய்வு அறக்கட்டளை (MSSRF) அமைப்பால் ஆரக்கிள் நிறுவனத்துடன் இணைந்து, தமிழ்நாடு விவசாய பல்கலைக்கழக உதவியுடன் உருவாக்கப்பட்டுள்ளது.
விவசாயிகள் தங்கள் பயிர்களை காக்கும் வகையில் பூச்சிகள் தொடர்பான தகவலை இந்த செயலி முன்கூட்டியே அளிக்கிறது. மேலும் இந்த செயலி, ஆலோசனை குறிப்புகள், சந்தை தகவல்கள், வானிலை விவரங்கள் ஆகியவற்றையும் அளிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின் 'உழவன்' விவசாய செயலியின் உள்ள ஒருங்கிணைந்த தகவல்களையும் இது அளிக்கிறது.
எம்.எஸ்.சுவாமிநாதன் ஆய்வு அறக்கட்டளை வளாகத்தில் நடைப்பெற்ற நிகழ்ச்சியில் ’பண்ணை’ செயலியை வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அறிமுகம் செய்தார். விவசாயிகளுக்கான இணையதளத்தை (போர்டல்) விவசாய அமைச்சர் துரைக்கண்ணு அறிமுகம் செய்தார். நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் உதயகுமார்,
“இந்த செயலி ஓரிடத்தில் மட்டும் பயன்படுத்தப்பட்டால் போதாது, நம் அனைவருக்கும் பயனளிக்கும் விதமாக, விவசாயம் மற்றும் தொழில்நுட்பம் இணையும் வகையில், பெரிய அளவில் பயன்படுத்தப்பட வேண்டும்,” என்று கூறினார்.
தொழில்நுட்பம் மற்றும் விவசாயிகளுக்கு ஆதரவான கொள்கைகள் வருமானத்தை பெருக்கும் என்று விவசாயத் துறை அமைச்சர் துரைக்கண்ணு தெரிவித்தார்.
”ஒருங்கிணைந்த விவசாயத் தகவல்களை அளிக்கும் தமிழக அரசின் உழவன் செயலி ஒரு மைல்கல்லாகும். விவசாயிகள் பண்ணை மற்றும் உழவன் செயலியை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்,” என்று அவர் தெரிவித்தார்.
முன்னதாக, அறக்கட்டளை நிறுவனர் எம்.எஸ்.ஸ்வாமிநாதன் பேசும் போது, சிறு விவசாயிகள் நலனுக்கு டிஜிட்டல் தொழில்நுட்பம் மிகவும் முக்கியம் என்றும், இந்த திட்டத்தை பாராட்டுவதாகவும் தெரிவித்தார். இந்த அமைப்பின் செயல் இயக்குனர், டாக்டர்.அனில் குமார், தற்போதைய விவசாயம், டிஜிட்டல் புரட்சிக்கு மத்தியில் இருப்பதாகத் தெரிவித்தார்.
ஆரக்கிள் நிறுவன பிரதிநிதி, ரமேஷ் வெங்கடாச்சாரி கூறுகையில்,
“ஐடி துறையில் இருக்கும் தங்களுக்கு இது இன்னொரு செயலி என்றாலும், வல்லுனர்கள் மற்றும் எண்ணங்களின் சங்கமத்தை இந்த நிகழ்ச்சியில் பார்க்க முடிவதாக தெரிவித்தார். எதிர்காலத்தில் விவசாயிகள் மற்றும் வல்லுனர்கள் இணைந்து செயல்படுவதற்கான மாதிரி இது,” என்றும் கூறினார்.
செயலியை உருவாக்கியத் திட்டத்தின் தலைவரான ஆர்.நாகராஜன், இதன் அம்சங்களை விளக்கிக் கூறினார். நுண் அளவில் தகவல்களைத் திட்டமிடுவதற்காக முதலில் களத்தில் இருந்து தகவல்கள் சேகரிக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
பின்னர் இந்த செயலி மற்றும் இணையதளத்தை பயன்படுத்துவது குறித்து விவசாயிகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. நாகப்பட்டினம் மாவட்டத்தின் வேதாரண்யத்தில் உள்ள கிராமங்களில் வசிக்கும் 3,000 விவசாயிகள் மத்தியில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. விவசாய நிலம் தொடர்பான டிஜிட்டல் ஆவணங்கள் மற்றும் தானியங்கி வானிலை விவரங்கள் ஆகியவையும் செயலியில் இடம் பெற்றுள்ளன.
பண்ணை ஆப் டவுன்லோட் செய்ய: PANNAI mssrf
செய்தி: சென்னைசிட்டிநியூஸ் | தொகுப்பு: சைபர்சிம்மன்